Tuesday 24 August 2010

என்னைக் காப்பாற்றுங்கள்…

விலை வாசி ஏறிவிட்டதெனவும்
ஒரு பிடி மண்ணையாவது வாங்கிவிடவேண்டுமெனவும்
சொந்த வீடில்லையெனவும்
நகர மயமாக்கலின் தொல்லைகளையும்
பேசிப் பேசிக் கரைந்து போனீரோ
இனியில்லை அந்த கலக்கம் !



உங்கள் உருகாத
மனங்களைக் கண்டு
உருகத் தொடங்கியிருக்கிறாள்
இயற்கை அன்னை !!



கடந்துவிட்ட நேரம்
முழுகிக்கொண்டிருக்கும் நகரம்
தூங்கிகொண்டிருக்கும் நாம்
இன்யேனும் விழித்துக்கொள்வோம் !!!



இதைப் படிங்க: http://www.deccanchronicle.com/chennai/ice-man-sees-chennai-earth-80-years-992


இந்த செய்தியை கேட்டதில் இருந்து, நாம் என்ன செய்யப்போகிறோம் என தான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது..பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் குமுறிக்கொண்டிருக்கின்றேன்…


இது வரை இங்கும் அங்கும் கடைபிடித்துக்கொண்டிருந்த விடயங்களை ஒரு முகப் படுத்தப் போகின்றேன்..


1.அவசியமில்லாமல் இரு சக்கிர வாகனமோ , இல்லை நான்கு சக்கிர வாகனமோ எடுக்கப் போவதில்லை


2.வீட்டிலிருக்கும் அனாவசிய மின்சார பயன்பாட்டைத் தவிர்க்கப் போகிறேன்


3.வேலை விட்டு செல்லும் போது கணிணியை ‘Shut Down’ செய்து போவதை வாடிக்கையாக கொள்ளப் போகின்றேன்.மற்றவர்களையும் வற்புறுத்தப் போகின்றேன்


இது போல் என்னவெல்லாம் செய்யலாம் என பின்னூட்டமிடுங்கள்..
நம் அழகிய நகரைக் காப்பாற்றுவோம்..

நன்றி,
நாணல்

Wednesday 4 August 2010

அன்றும் இன்றும்..

யாரும் தெரியாத
யாரென்று புலப்படாத
வாழ்வை படிக்க வந்த மாணவர்களாய்
புத்தக சுமைகள் தவிர
சுமையேதுமில்லாத பருவமாய்
கனவுகளுக்காக உறங்கி
கவிதைகளாக வாழ்ந்தோம் அன்று


வானுயர்ந்த கட்டிடங்களும்
கையடக்க செல்பேசியும்
தொலைத்தபட்டியல் தேட கூகிளும்
என்றாவது அழைக்கும் நண்பனிடமும்
“எப்படா கல்யாணம்”
“என்னடா விசேடம்”
எனத் தொலைந்த உரையாடல்களுக்கும்
தொலைத்த நட்பிற்கும்
அடையாளம் தேடுகின்றோம் இன்று


“கால ஓட்டத்தில் ஆளுக்கொரு திசையென சிதறிக்கிடந்தாலும் ஆர அமர என்றாவது ஒரு நாள் நினைத்துப் பார்க்கையில் பல நல்ல உள்ளங்களின் நட்பு மனதிற்கு ஆறுதல் தருகிறது…அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி…அனைவருக்கும் நண்பர்கள் வார வாழ்த்துக்கள்… “


நன்றி,
நாணல்