Thursday 25 February 2010

உன்னைப் பிரியும் வரை…

“மாற்றம் என்பது மானிட தத்துவம்
மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்”
என்ற கண்ணதாசன் கூற்று
மெய்யெனப்பட்டது
உன்னைப் பிரியும் வரை…


பெற்றவர்களுக்கு மட்டுமே
இப்பூவுலகில்
மாற்று இல்லையென
நம்பியிருந்தேன்
உன்னைப் பிரியும் வரை…


நீயில்லையெனினும்
என் ஜீவன் ஓடுமென
பெருமைக்கொண்டிருந்தேன்
உன்னைப் பிரியும் வரை…


நன்றி,
நாணல்

Tuesday 16 February 2010

காதலெனின்...

எனக்குள் எழும் கேள்விகளுக்கு

என் கேள்விக்கு முன்

நீயாக பதில் கூறும்

புரிதலுக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்…


இன்னொரு காதல்

என்னுள் நுழையுமா என

நான் குழம்பி நிற்கையில்

என்றும் வாரா நீ

இன்று மட்டும்

என் வழியில் புலப்பட்ட

தற்செயலுக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்…


உன்னைப் பற்றி யோசிக்கவே

நேரமில்லா நீ

என் சிறுபிள்ளைக் கண்ணீருக்கு

ஆறுதல் கூறும்

அக்கறைக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்



நன்றி,
நாணல்

Friday 12 February 2010

ஆசை… உன் நிறைவேறா பேராசை…

கார்த்திகை மாதத்து
மழையென என் காதலை
உன் மீது கொட்டிவிட வேண்டுமென்பது
என் எண்ணம்….
வானிலை அறிக்கை படித்து
மழையில் நனையாமல்
நீ
தப்பி விட முடியாதென்பது
என் திண்ணம்…


என்னிடம் தேங்கியுள்ள
உன் மீதான என் காதலை
கொட்டி தீர்த்தப் பின்
நீ கேட்டதற்காக
உனை பிரியலாமென்றால்,
தீராதிருக்கே இந்த காதல்
பாவம் என் செய்வேன் நான்
நீ கேட்டும்,
உனக்கு விடுதலை தர
நான் இசைந்தும்,
உன் இந்த ஆசை
நிறைவேறாது கண்ணே…



நன்றி,
நாணல்

Wednesday 10 February 2010

உனக்குள் நான் ..

இலை மறை காயாக
உனையறியாமல் உனக்குள் நுழைந்து
எனை யாரென்று தேட
நீ படும்பாட்டை ரசிக்கிறேனடா..
உனக்கான உன் மனதை
நீ புரியப்பழகு ,
புரிவாய்
உனக்குள் இருக்கும் என்னை
உன்னிளும் பரவும்
எனக்குள் இருக்கும் காதல்…

நன்றி,
நாணல்

Tuesday 9 February 2010

(வி) சித்திரமடி நீ எனக்கு…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

உன் நினைவாகவே
நான் இருக்க விரும்புகிறேன்,
என நீ சொன்னதற்காக
உன் குறுஞ்செய்திக்கு
தாமதமாக பதிலளித்தால்
ஏனடா தாமதமென
செல்லமாகக் கடிந்து கொள்கிறாய்…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

உன்னருகில் நான் இருக்கையில்
சிணுங்கும் என் கைப்பேசியை
உன் எதிரியென்கிறாய்…
மற்ற நேரத்தில்
உன் கைபேசி தான்
நம் உயிரென்கிறாய்
நம்மிருவரையும் இணைப்பதனால்…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

நன்றி,
நாணல்

Wednesday 3 February 2010

நான், வாழ்க்கை, காதல்

எனக்கென்னை புரிதல்
வேண்டி மட்டும் உனை
சந்திக்க நேர்ந்திருந்தால்…
நீ
எனக்கு புரியாதிருந்திருக்கலாம்…

வாழ்க்கை புரிதல்
வேண்டி மட்டும் உனை
சந்திக்க நேர்ந்திருந்தால்…
நீ
என்னோடு வழக்காடாமலிருந்திருக்கலாம்…

காதல் புரிதல்
வேண்டி மட்டும் உனை
சந்திக்க நேர்ந்திருந்தால்…
நீ
என்காதலை அங்கீகரிக்காமலிருந்திருக்கலாம்…

இப்படி
தோற்றுப்போன பல
சந்தர்ப்பங்களை மீறி
தொலைந்த காதலால்
கிடைத்த வாழ்க்கையை
புதுப்பிக்க முயற்சிக்கும் நான்…


நன்றி,
நாணல்