Tuesday 28 December 2010

இயற்கை வாழ்வு

தன் தங்கக் கிரணங்களைக்
காற்றோடு உறவாடி,
கிரணன்
இசைப் பரப்பிக் கொண்டிருக்க,
கற்றவன் பண்பின் அடையாளமாய்
தலை சாய்ந்த உயிரின்
சிரத்தில்
ஒன்றோடு ஒன்று
பேசிக் கொண்டிருந்தன
நெல் மணிகள் !


மண்ணின் களை மாறாது
களையறுத்துக் கொண்டிருந்தாள்
செல்லாத்தாள் பாட்டி...


தென்றலின் கிளையாக
தன் கிளைமலருக்காய்
தாலாட்டு பாடிக் கொண்டிருந்தாள்
கமலாக்கா...


புல்லுக்கு உயிராய்
ஒடிக்கொண்டிருந்த
வாய்க்கால் நீரை வெட்டி
பயிருக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தார்
கந்தவேல் மாமா...


அவரவர் வேலை முடிந்ததும்
உழைத்த களைப்பாற
கட்டிய சோறை
உற்சாகமாய்
உண்டு் களித்தனர்...


எரிந்த கதிரவனுக்கு
விடைகொடுத்து
தணிந்த நிலவினை
தூரிகையால் வறவேற்றுக் கொண்டிருந்தார்
ஓவியர்
சென்னையின் அண்ணா சாலையில்...


நன்றி உயிரோசை..


நன்றி,

நாணல்


Saturday 25 December 2010

இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்

இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’

‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’

இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு நிமிட கோபம் என்னையும் மீறி வரத் தான் செய்கிறது. அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் நான் குறை கூற விரும்பவில்லை. ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், ’ஆணோ பெண்ணோ காதலும் காதல் தோல்வியும் ஒன்று தான்.. சில இடங்களில் ஆண், பெண்ணை சில காரணங்களால் பிரிகிறான், பெண் சில நேரங்களில் பிரிய நேர்கிறது.

ஆனால் பெரும்பாலும் ஏனொ பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர் :( எனக்கு தெரிந்த காதல் கதைகளில், விட்டொழிந்த ஆண்களும் உள்ளனர், பெண்களும் உள்ளனர். அப்படியிருக்க ஏன் பெண் வர்க்கத்தை மட்டுமே குறை கூறுகிறீர்கள். :(

  • பெண்களுக்கு காதல் தோல்வியைத் தரும் ஆண்களே இல்லையா?
  • ஆண்கள் ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலிப்பாங்களாம், அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொன்னா, ஏன் அப்படி சொன்னா, உண்மையிலயே அவ மனசுல இவன் மேல அப்படி ஒரு எண்ணம் இருக்கான்னு தெரிஞ்சுக்காம, உடனே ‘மச்சான், அவ என்னை ஏமாத்திட்டான்னு, ஊர் பூறா அவளை வம்பிழுக்க வேண்டியது’.எனக்கு புரியாத ஒன்னு, காதலித்த பெண்ணைப் பற்றி எப்படி பிறரிடம் வம்பு பேச முடிகிறது?
  • தெரியாத பெண்ணிக் காதலிச்சவங்களே இப்படி இருக்கும் போது, நண்பர்களா அறிமுகமாகி, தோழின்ற உறவுல இருந்து காதலின்ற உறவுக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டத்துல, அப்படி செய்ய விரும்பாதவர்கள் ஒரு பக்கம். மனதிற்குள் அவள் தோழி மட்டுமில்லைன்னு தெள்ளத்தெளிவா தெரியும் , ஒரு கட்டத்துக்கு மேல அவள் என் தோழி மட்டுமேனு ஏமாத்திக்க முடியாத கட்டம் வரும். அப்ப முன்னெச்சறிக்கையோட ‘உன் கிட்ட அந்த எண்ணத்துல பழகலை’ தோழியா மட்டும் தான் பார்த்தேன். அப்படி இப்படின்னு வெட்டி வசனம் பேச வேண்டியது. உடனே அந்தப் பொண்ணும் ஒன்னும் சொல்லாம, அமைதியா போயிட்டா, அவ தப்பிச்சா, இல்லை எதிர் கேள்வி கேட்டா, அவளை எவ்வளவு தூரம் உதாசினப்படுத்தி அவ பெண்மையை கொடூரமா மாத்த முடியுமோ, அவ்வளவு கொடுமையா மாத்தி ‘அந்த பொண்ணு டார்ச்சர் தாங்ககலைடானு’ நண்பர்கள் மத்தியில அவ மென்மையை கேலிக்கூத்தாக்க வேண்டியது. இது எந்த ஊருல நியாயம்?
  • சரி தப்பித் தவறி ஒரு பொண்ணு தன் காதலை முதல்ல சொல்லிட்டா, அப்புறம் கதையே வேற. முதல்ல ஒரு பொண்ணு நம்மளையும் மதிச்சு காதலிக்கறான்ற மிதப்புல சுத்த வேண்டியது. அப்புறம் அப்புறம் தான் அவனோட குடும்பம்,அவன் பார்க்கிற வேலைனு எல்லாம் நியாபகதுக்கு வரும், அப்புறம் மேல சொன்ன மாதிரி உஷாரா வசனம் பேசிட்டு கழட்டி விட வேண்டியது. தனக்கு பிடிச்சவன் மேல காதலைப் பொழிஞ்சது தான் அந்தப் பொண்ணு செஞ்ச தப்பா?

இப்படி பல கேள்விகள் பல நாளா என் மனசுக்குள்ள பதிலில்லாம இருந்தாலும், என்ன இருந்தாலும் ஆண்கள் என்றுமே எனக்கு புரியாத புதிர் தான். அதனால அவங்க எப்படி வேணா இருக்கடும்.

இந்த ஆண்களே இப்படி தான்’

‘ஆண்ககளைப் புரிஞ்சுக்கவே முடியலை’

போன்ற வசனங்களில் எனக்கு பெரிதாக உடன் பாடுமில்லை.

அதனால் பெண்கள் மீது சுமத்தப் பட்ட குற்றத்திற்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். பெண்களும் காதலில் ஏமாற்ற்ப்படுகிறார்கள், ஆனால் அவை ஏன் வெளியில் வருவதில்லை என்பதற்கான பட்டியல் தான் கீழே..

  • ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப் பட்ட சமுதாய சூழலில் பெண் தன் குரலை உயர்த்திக் கூட பேச முடியாத நிலையில். எப்படி தனக்கு நிகழ்ந்த தோல்வியை பலர் முன்னிலையில் ஒப்புக் கொண்டு அதற்கு காரணமான ‘ஆணைக் குறித்து குறை கூற முடியும்?’ இதனால் பல கதைகள் வெளி வராமல் போவது சாத்தியம் தானே?
  • ஒரு பெண் , தன் கணவனிடம் தன் பழைய காதலைச் சொன்னால், எத்தனை ஆண்கள் சரியாக எடுத்துக்கொள்கிறார்கள்.சந்தேகத்தின் பேரில் அவளை அனு அனுவாய் சாகடிக்க வேண்டியது. ’ஈரம்’ படம் இதற்கு ஒரு நல்ல அத்தாட்ச்சி. கணவனின் பழைய வாழ்க்கையை, மனைவி தெரிந்தும் தெரியாது போல் நடந்து கொள்ள வேண்டும் ஆனால் கணவனால் மனைவியின் பழைய வாழ்க்கையை தெரிந்து கொண்டு அவளின் நிகழ் கால வாழ்க்கையை அமைதியாய் நகர்த்த அவனின் கர்வம் இடம் தருவதில்லை. இப்படி தன் கணவனுக்காக பயந்து வேற்று ஆணால் ஏற்பட்ட காதல் தோல்வியை வெளியில் சொல்ல பல பெண்கள் துணிவதேயில்லை.
  • எல்லாவற்றுக்கும் மேல் கற்பு என்ற ஒன்று, பெண்ணுக்கு மட்டும் தான் முக்கியம் என மாதிரியான எண்ணங்கள் மேலோங்கியுள்ள இந்த சமூகத்தில், பெண் காதலித்தாள் என்றால், அதை ஒரு இழுக்காகவே எண்ணு்கிறது. ஏன் அவளின் பெற்றோர் கூட, எப்படியாவது அவசர அவசரமாய், மூடி மறைத்து அவளை வேறு இடத்தில் கட்டிக் கொடுப்பதில் தான் குறியாய் இருப்பர். பெண்ணுக்கு மனமிருக்கிறது என்பது பல இடங்களில் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. :(
  • தப்பித் தவறி தனது பழையக் காதல் பற்றி அவளின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு சொன்னால், அன்றைய தினம் ஏதோ தியாகி உணர்வு கொண்டு, அவளுக்கு வாழ்வு கொடுப்பதாய் தனக்குள் பெருமிதங் கொண்டு திருமணம் செய்து கொள்வான். அந்த பெருமித எண்ணம் எத்தனை நாள் அந்த பெண்ணை நிம்மதியாய் வாழ விடும் என்பது நேரத்திற்கு தான் வெளிச்சம்.
  • பொதுவாகவே பெண்களுக்கு பொறுப்பு சிறு வயது முதல் நிச்சயம் அதிகம் தான், ஆண் குழந்தை வளர்ப்பிற்கும் பெண் குழந்தை வளர்ப்பிற்கும் இன்னும் சமுதாயத்தில் வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. குடும்பத்தின் குத்து விளக்காய், குடும்ப மானத்தின் சின்னமாய் அவள் வளர்க்கப்படுகிறாள். அப்படியிருக்கையில், காதலிப்பதே பெருங்குற்றம், காதலில் தோற்று பொறுப்பற்று புலம்பிக்கொண்டு இருக்க முடியுமா… முடியாது… காலத்தின் வேகத்தோடு அவள் தன்னை செதுக்கிக் கொண்டேயாக வேண்டிய கட்டாயம் வேறு..இப்படி எத்தனையோ சோகங்கள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிச்சயம் இருக்கும்..கேட்டுப் பாருங்கள் தெரிய வரும் .
  • பெரும்பாலும் ஆணுக்குப் பல கனவுகள் இருக்கும் , இலட்சியமிருக்கும். பெண்ணுக்கோ திருமணம் என்ற ஒன்றோடு அவளின் பெரும்பாலான கனவுகள் முடுக்கி விடப்படும். திருமணம் மட்டுமே குறிக்கோள் என வளர்க்கப் பட்ட நிலையில், தோற்ற காதல் பற்றி சொல்லி ஏன் தனக்கும் தன் பெற்றோருக்கும் தர்ம சங்கடத்தை தர வேண்டுமென மனதில் பூட்டிக் கொள்ள வேண்டி வரும்.
  • சில பெண்கள் உறுகி உறுகி காதலித்து விடுவார்களா, தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தன் காதலனுக்கு ஒன்றும் ஆகக் கூடாதென உணர்வுகளின் அடிமைகளாய் மாரியிருப்பர். இன்னிலையில் அவன் ஏமாற்றி விட்டாலும், நான் ஏமாந்ததற்கு அவனென்ன செய்வான் என பரிதாமான பதிலை சொல்லி சமாதானம் செய்து கொள்வர்.
  • ஊடகத்துறையிலும் ஆண்களே ஆட்கொண்டு நிலையில் நிச்சயம் அவர்களின் மனதில் இருப்பது தான் படமாகவோ,நாடகமாகவோ வெளிவரும்.அவர்களால் ஊகித்துவிட முடியா பெண்ணின் மன நிலையை எப்படி சமூகத்தில் கொண்டு வர முடியும்.

இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம், புரிந்து கொள்ள முயற்சிக்காமல், விவாதம் செய்பவர்களுக்கு பெண்கள் ஏமாற்ற்க்காரர்களாகவே இருந்து விட்டு போகட்டும், அவர்களைப் பற்றி கவலையில்லை எனக்கு. புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிலராவது, சிலப் பெண்கள் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த பெண்ணினத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என சொல்லும் நோக்கோடு எழுதப்பட்டதே இந்தப் பதிவு.

நன்றி,

நாணல்



Saturday 18 December 2010

ரகசிய சினேகிதனே…

‘ஆயிரம் முறை திருடிய
அதிசயத் திருடன் கைது’
செய்தி பார்த்ததும்
பதறித்தான் போனேன்
ஆயிரம் முறை என் இதயத்தை
திருடிய அதிசயத் திருடன்
உனையும் கண்டுகொள்வரோ என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீயும் கவிஞனென
தெரிந்ததில் இருந்து
அவசர அவசரமாய்க்
கவிதை உருப் பெறுகின்றது
நம் உரையாடல்கள்
என் கவிதைப் பக்கத்தில்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தொழில்நுட்பத்தின் புரட்சி
உனை என்றும் என்னருகில்
இருக்கவைத்தாலும்
என் வெட்கங்களையும்
என் மெளனங்களையும்
மொழிபெயர்க்க முடியா கைபேசி
சொல்கிறது தொழில்நுட்பம் இன்னும்
வளர வேண்டுமென


நன்றி,
நாணல்

Monday 6 December 2010

உதான் - Udaan



சிறகிருந்தும் பறக்க ஆசையும், கனவுகளும் இருந்தும் பறக்க முடியா ரோஹனையும் அர்ஜுனையும் சுற்றி நகர்கின்ற கதை. றோஹன் பதினேழு வயதான , அந்த வயதுக்கே உரிய கிண்டல் கேலியென எல்லாமும் நிறைந்த ஒருவன். ரோஹனும் அவனின் நண்பர்களும், சுவறேறி படம் பார்க்கச் சென்றதனால் பள்ளியில் இருந்து நீக்கப் படுகிறார்கள்.ஜாம்ஷெட்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தவுடன் ரோஹனுடன் சேர்த்து நமக்கும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ரயில் நிலையத்தில் வந்திருந்த தனது அப்பாவை வேற்று மனிதாய் பார்க்கும் ரோஹனின் கண்களில் தெரிகிறது, கண்டிப்பான அப்பாவின் உருவம். பிறகு தான் தெரிகிறது மகனைத் தந்தைப் பார்த்தே எட்டு வருடங்கள் ஆகின்றதென்று. இதைத் தெரிந்தப் பின் 'என்ன அப்பா இவர்' எனத் தோன்றுகிறது.

வீட்டிற்கு சென்ற பின் அதிர்ச்சியின் அடுத்த கட்டமாய், ரோஹனின் அறையில் ஒரு 5 வயது சிறுவன் அர்ஜுன். அப்பாவிடம் விசாரித்ததில் அர்ஜுன் தனது தம்பியென்று தெரிகிறது. ரோஹனின் அம்மா இறந்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அதுவும் நிலைக்கவில்லையெனவும் தந்தை சொல்கிறார். தனக்கு தெரியாமல் தனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்பதில் தொடங்குகிறது ரோஹனின் கூண்டுப் பயணம். கொடுமையின் உச்சக்கட்டமே பெத்த மகன்கள் தன்னை அப்பா என்று அழைக்காமல் 'சர்' என்று தான் அழைக்க வேண்டும் என கொடுரத் தந்தை ஆணையிடுகிறார். வீட்டில் அவருக்கு மட்டும் தான் கேள்வி கேட்க அதிகாரமுண்டு. இலக்கியம் படிக்க விருமும் ரோஹனை தனது ஃபாக்டரியில் காலை வேலை செய்யும் படியும் மதியம் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். அவருடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி எப்படி அவரை வெல்கிறான் என்பது தான் கதை. பார்க்கும் நமக்கே அந்த வீட்டில் இருந்து எப்பொழுது தான் வெளிவருவோமென ஒவ்வொரு காட்சியும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

5 வயதேயானாலும், அடி மேல் அடி வாங்கி சிரிக்கக் கூட மறந்திருந்திருந்தான் அர்ஜுன். சாவி கொடுத்த பொம்மையென அப்பாவின் கட்டளைகளுக்கு உட்பட்டு ஒரு வட்டத்தில் சிக்கியிருந்தான். ரோஹனின் வருகைக்குப் பின் பேச ஒரு ஆளாவது கிடைத்தானனென தன் தந்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவ்வப்பொழுது சொல்வான். ஆரம்பத்தில் தந்தை மேலிருந்த வெறுப்பை அர்ஜுன் மீது காட்டினாலும், நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். குறைவான வசனங்களானாலும் தனது சுட்டி நடிப்பால் படம் முடிந்த பின்னும் கண்களில் அர்ஜுனின் முகம் நிழலாடுகிறது.

ஒரு கட்டத்தில் தனது இந்த கொடுரத்தனத்திற்கு தனிமையைக் குற்றம் சாட்டி தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் தந்தை. திருந்திவிடுவார் , படம் முடியுமென பார்க்கையில் அடுத்த திருப்பமாய் , தான் மறு கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய் சொல்கிறார். அர்ஜுன் போர்டிங் பள்ளிக்கு செல்ல வேண்டுமென நிர்ண‌யிக்கிறார். பொறியியல் படிப்பில் தேறாததால் ரோஹனை முழு நேரம் தன‌து ஃபாக்டரியில் பணி புரிய ஆணையிடுகிறார். மற்றவர் புகழும் தன் எழுத்தை தன் தந்தை உதாசினப் படுத்தும் போதெல்லாம், அவரை எதிர்க்க தைரியமில்லாமல் நொந்து போகிறான் ரோஹன்.

தன்னுடன் பயின்ற நண்பர்கள் மும்பையில் சொந்தமாக ஹோடெல் நடத்துவது தெரிந்து அங்கு செல்வதென ஒரு மனதாய் முடிவெடுக்கிறான். வீட்டை விட்டு ஓடி வருகையில் தன்னை துற‌த்திவரும் தந்தையை வென்று முதல் வெற்றியோடு புன்னகைக்கிறான். மறு நாள் அர்ஜுன் போர்டிங் செல்ல தயாராகிறான். இதற்கிடையில் ரோஹன், அர்ஜுனிடம் என்னுடம் வருகிறாயா இல்லை தந்தை சொல்வழி போர்டிங் செல்கிறாயா எனக்கேட்கையில் யோசிக்காது உன்னுடன் வருகிறேன் எனச் சொல்லும் போது அன்பின் நிலை தெரிகிறது.

மூவரைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் அன்பே மையமாக் கொண்டது இந்தப் படம். தந்தைக்கும் ரோஹனுக்கும் 'பொய்' பற்றிய உரையாடல் அருமை. அவ்வப் பொழுது படித்துக் காட்டும் ரோஹனின் கவிதைகளும் கடைகளும் அருமை. ரோஹனை உற்சாகப் படுத்தும் தந்தையின் நண்பர் கதாபாத்திரமும் அருமை, இருந்தும் மூர்க்கதனத்திற்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. புன்னகை மறந்த அர்ஜுன். மூர்க்கத்தனத்தின் முழு உருவமாய் அப்பா.

மூர்க்கனிடமிருந்து விடுதலைப் பெற்று ரோஹனும், அர்ஜுனும் எப்படி பறக்கிறார்கள் என்பது தான் 'உதான்'.

பி.கு: ஜூலையில் 2010 இல் வெளியான இப்படத்தைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். அன்பின் நிலை குறைந்துக் கொண்டே வரும் சூழலின் நிஜமாய் இந்தப் படம். சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. இன்னும் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த பதிவை எழுதுகிறேன். அன்பை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

நன்றி,
நாணல்

Tuesday 30 November 2010

சிதறிய எண்ணங்கள்

’சாக வழியில்லாது
வாழ முடிவெடுத்தேன்
நீயில்லாமல்’
இப்ப‌டிக்கு,
புகைப் பிடிக்கும் பழக்கத்தை
விட்டொழிக்கும் நான்!

$%^&*#

புரித‌லும்
சில‌ நேர‌ம்
பிரிவ‌த‌ற்கு
வித்திடும்!

$%^&*#

வலுவான
நிஜங்களும்
சில நேரம்
பலவீனமாக்கும்!

$%^&*#

தனிமையும் இனிமையே
நம்மை நேசிப்பவர்கள் தந்தால்
தனிமை கொடுமையே
நாம் நேசிப்பவர்கள்
நம்மை நேசிக்கவில்லையென‌
தெரிந்தபின்!

நன்றி,

நாணல்

Thursday 25 November 2010

நான் சாதித்த‌து….

பிறந்து என்ன சாதித்தாய்
என என்னை
பல முறை கேட்டுக்கொண்டு
விடையில்லையெனினும் ,
என் பிறந்த நாள்
என‌க்கு பிடிக்கும்
என்னை வாழ்த்தும்
அத்த‌னை
அன்பு உள்ள‌ங்க‌ளுக்காக‌!

க‌ட‌ல் தாண்டி போகின்றோம்
உள்ள‌ங்களின் தொட‌ர்ப‌ற்று
த‌னிமையில் தான்
இந்த‌ ஆண்டு க‌ழிய‌வேண்டுமா
என‌ கட‌வுளிட‌ம் கேட்டுக்கொண்டிருந்தேன்!

க‌ட‌வுளும் தொழில்நுட்ப‌மும்
கைகோர்த்து
என் தோழனிடமிருந்து
முத‌ல் வாழ்த்தெனும் ப‌ரிசோடு
ஆர‌ம்பித்த‌து,
என்றோ யாருக்கோ
இணைய‌ம் ப‌ழ‌கிய‌ நாளில்
நான் அனுப்பியிருந்த‌ வாழ்த்து ம‌ட‌லின்
ம‌று உருவ‌மாய்
இசையோடு என்னை வாழ்த்திய‌
ம‌ற்றுமொரு தோழ‌னின்
வாழ்த்து ம‌ட‌ல்!

உற‌ங்கிப் பின் எழுந்து
நேர‌த்திற்காய் காத்திருந்து
அழைத்து வாழ்த்து சொன்ன‌ தோழி!
நேர‌ வேற்றுமை புரிந்த‌தால்
நாளை உன் தேதியில்
உன‌க்கு வாழ்த்துகிறேன்
என‌ சொல்லாது
சொன்ன‌ தோழ‌ன்!

இன்று உனக்கு
பிற‌ந்த‌ நாளா
நாளை உனக்கு
பிற‌ந்த‌ நாளா என‌
குழ‌ம்பிய‌ நிலையில்
இர‌ண்டும் நாளும் வாழ்த்திய‌ பெற்றோர்!
தொலைபேசியிலும் இணையத்திலும்
தொட‌ர்பு கொள்ள் முடியாம‌ல்
என் அழைப்பிற்காக‌ காத்திருந்து
வாழ்த்து சொன்ன‌ தோழிக‌ள்!

பதிவில்
முத‌ல் வாழ்த்துப்பதிவிட்ட‌
அண்ண‌ன !
என்றோ நான்
செய்த‌ குறும்பை
நினைவூட்டி என‌க்கு வாழ்த்துப்ப‌திவிட்ட‌
த‌ங்கை !

மின்ம‌ட‌ல்க‌ளாய் வ‌ந்திற‌ங்கிய‌
வாழ்த்துக்க‌ள் !!
ஃபேஸ்புக்கில் வாழ்த்திய
எழுத்து முகங்கள் மட்டுமே தெரிந்த நட்பு !
என
முதன் முறை
இர‌ண்டு நாளாய்
என் பிற‌ந்த‌ நாள்
முடிகையில்,
யாரேனும் என்னைக் கேட்டால்
சொல்வேன் தைரிய‌மாய்
நான் சாதித்த‌து என்ன‌ வென்று!

வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி,
வாழ்த்தும் ந‌ண்ப‌ர்க‌ளை உற‌வை அளித்த‌
க‌ட‌வுளுக்கும் ந‌ன்றி!

பி.கு: பொறுமையா இந்த பதிவை ப‌டிச்ச‌ உங்க‌ளுக்கும் ந‌ன்றி, இந்த‌ இர‌ண்டு நாள் என‌க்கு த‌ந்த‌ அனுப‌வ‌ங்க‌ளின் பிர‌திப‌லிப்பே இந்த‌ ப‌திவு. யாரையும் விட‌ ம‌ன‌மில்லாது என் நினைவிலிருந்த‌ அனைவ‌ரிட‌மும் ஒரே நாளில் பேசிய‌ ம‌கிழ்ச்சியை ப‌திவாயிடுகிறேன்.

ந‌ன்றி,
நாண‌ல்

Saturday 20 November 2010

கண்களின் பரிசு

இந்த வார உயிரோசையில் இந்த கவிதை ... நன்றி உயிரோசை

*****************


உனக்கான தேவைகள்
பூர்த்தியாகும் வரை
என் வேண்டுதல்கள்
ம‌திக்க‌ப்ப‌ட்ட‌ன‌!

உன் வேண்டுத‌ல்க‌ள்
நிஜ‌மாகும் வ‌ரை
என் இருத்தல்
கொண்டாட‌‌ப்ப‌ட்ட‌து!

திரைப்ப‌ட‌ம் முடிந்து
க‌லையும் கூட்ட‌மென
சொல்லாது மௌனமாய்
நீயும் க‌லைந்து சென்றாய்!

விம‌ர்ச‌ன‌ க‌ல்லெறிதலை
பரிசாகக் கொண்டு
பார்வையாள‌னால் ஒதுக்க‌ப்ப‌ட்ட
கடைசிக்காட்சியாய்
திரையில் ஓடிக்கொண்டிருந்தேன்!

ப‌ரிகாச‌ங்க‌ள் மீறிய‌
உண‌ர்வ‌ற்ற நிலையில்
உயிரோடு திரிந்திருந்தேன்!

நானொழிந்த‌
அடுத்த‌ காட்சியின்
ஒத்திகையில் நீ!

காட்சியின் நிறைவாய்
உன் பெய‌ருக்குப் பின்
வேறொருத்தியின் பெய‌ர்
நிழ‌லாடுகையில்,
நேற்றே இற‌ந்த
பாட்டியின் பிண‌த்தை எடுக்கையிலே
அணைப‌டாது வ‌ரும் க‌ண்ணீரை
என் க‌ண்களும் ப‌ரிசாக‌க்கொண்ட‌து!

நன்றி,
நாணல்

Sunday 14 November 2010

[கா சொ ஏ ] காத‌லி தோழியானால்..

உன் தனிமைக்கு
துணையிருக்க
கூட்டத்தில் எனை தொலைத்து
நாமிருவரும் தனிமையில்
தொலையத் தேவையிராது

–00–00–

உன் ஊறுக‌ளின்
பொறுப்பாளியாய் வேடங்கொண்டு
உனை தேற்ற
முய‌ற்சித்து
ஏமாறத் தேவையிராது

–00–00–

உரிமைக‌ளின்
எல்லை வ‌ரை தீண்டி
இழ‌ந்த‌ த‌னித்துவ‌த்தை
மீண்டும்
சேக‌ரிக்க‌ தேவையிராது

கா சொ ஏ - 1

ந‌ன்றி,
நாண‌ல்

Wednesday 10 November 2010

சிவ‌ந்த‌ செடிக‌ள்

முகம் பார்த்து விடிந்த காலம்
ஃபேஸ்புக்கில் முக‌ங்க‌ள் தேடும் கால‌மாய்
திரிந்த‌ பொழுது உண‌ர்கிறேன்
கால‌த்தின் க‌ட்டாய‌த்தை
தொழில்நுட்ப‌த்தின் முன்னேற்ற‌த்தை!

விடிந்த‌தும்,
என் நினைப்போடு
என் அழைப்பிற்காக‌ காத்திருக்கும்
தாயின் முக‌ம் க‌ண்முன் தோன்றுகையில்
தொழில்நுட்ப‌மும் தோற்றுத்தான் போகின்றது!

‘ஊர் பார்த்து வா’
‘புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து அனுப்பு’
என‌ சொல்லும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
எப்ப‌டி சொல்வேன்
விரிந்த‌ சாலைக‌ளும்
ம‌ர‌த்தாலான‌ வீடுக‌ளும்
சிவ‌ந்த‌ செடிக‌ளும்
குளிர்ந்த‌ ஓடையும்
தொலைக்காட்சியின் காட்சியாக‌வே
வ‌டிவ‌ம் பெறுகின்ற‌ன‌ என!

புது இட‌ம் புதிய‌ அனுப‌வ‌ம்
என்னும் ஒற்றைக் காயை
ந‌க‌ர்த்திக்கொண்டு
ந‌ம்மூர் வ‌ரும் நாளுக்காக‌
ஏங்கிக்கொண்டு
உற‌வையும் ந‌ட்பையும்
எண்ணிக்கொண்டு
கால‌மும் ந‌க‌ர்கின்ற‌ன‌!

ந‌ன்றி,
நாண‌ல்

Tuesday 9 November 2010

குடைக்குள் ம‌ழை

கேள்விகளின் பதிலாய்
கேள்விகள் பிறக்கையில்
ரசிக்கின்றேன்
கேள்வியின் நாயகனாய்
நீயிருக்கையில்!

உயிர‌ற்ற‌ பூவும்
உயிர் பெறுகின்ற‌து
உன் க‌ர‌ம் தீண்டி
என‌க்கு ப‌ரிசாகையில்!

குடைக்குள் உன் பெய‌ர்
எழுதிய‌த‌ன் மாய‌ம்
குடைக்குள் ம‌ட்டுமே
ம‌ழை பொழிவதாய்
உண‌ர்கின்றேன்!

ந‌ன்றி,
நாண‌ல்

Monday 25 October 2010

கௌதமிற்கு உதவுங்கள்...

நண்பர்களே,

கௌதமின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக அவரின் நண்பர் தெரிவித்தார். எனினும் இன்னும் மயக்க நிலையில் இருக்கிறார். உரிய சிகிச்சைகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உதவிய அனைவருக்கும் நன்றி. முடிந்த வரை இன்னும் உதவ நம் நண்பர்கிளைடையே பகிர்ந்து கொள்வோம். அவர் உடல் நலம் முன்னேறி வீடு திரும்ப ப்ரார்த்தனை செய்வோம்.

அவரின் நண்பர் எங்கள் குழுவிற்கு அனுப்பிய மின்மடல் இதோ.

Dear Friends,


Avery good morning to you all.


Yesterday Mr Velayutham had called me up and updated me on the status of Gowtham. He is Gowtham's friend and they are really doing a good job to get Gowtham back on his normal track. Felt great. Nice to have such friends in life!


I had asked him to send an email and that is attached below. For any other information, he is reachable at : 91 88703 88845


Thank you very much for your kind help and contribution. I would request you to forward this update to all your friends and we will still try to push to more people so that we can help them in a bigger way!

Cheers,
Raghavan alias Saravanan M.
http://shade.org.in

"The shortest answer is doing" - Lord Herbert

---------- Forwarded message ----------
From: Velayutham AN <velayutham.an@gmail.com>
Date: Sun, Oct 24, 2010 at 12:57 PM
Subject: Reg: Students Fund Rising for T.Gowtham
To: raghavan@shade.org.in


Respected Sir,
I have attached T.Gowtham's case sheet given from the Vadamalyan Hospitals,Madurai on 14.10.2010.Now the current situation of gowtham is that he is still unconscious.But he is out of the ventilator machine . Necessary treatments are being taken for reducing the pressure in the brain.Doctors have given assurance for his life.And for everyone who is willing to help we are giving Gowtham Dad Mr.M.Thirumal's Bank account details.

DETAILS

ACCOUNT HOLDER'S NAME : M.Thirumal
BANK ACCOUNT NUMBER : 30393595369
BANK : State Bank of India
BRANCH : Kumaram,Madurai

For this cause we have planned to conduct a Fund Raising Programme in Chamber of Commerce (Kamarajar Salai,Madurai) on 12 Nov,2010.I will send you the invitation and other details in the next mail after confirmation of agenda.


THANKING YOU FOR YOUR RESPONSE.

நன்றி,
நாணல்

Sunday 24 October 2010

குட்டி கார்த்தி...

“ஆயா… 1 ரூபாய்க்கு நெல்லிக்காய் கொடுங்க…”


“இந்தா..” என்று கொடுத்துவிட்டு , ஆயா என்று இன்னொரு குரல் வந்தப் பக்கம் திரும்பித் தன் வியாபாரத்தை படு மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தாள், ஒரு பள்ளியின் வாசலில் கடை போட்டிருந்த ஆயா..


இந்த பள்ளியின் வயதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ”நான், அந்த காலத்தின் தலை சிறந்த பள்ளியான ’St Joseph’ பில் SSLC முடித்தவனாக்கும்” என்று மார் தட்டிக் கொள்ளும் தாத்தாக்களைக் கேட்டால் தெரியும்… போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னையின் பிரதான சாலையில் , பழமையின் நினைவுச்சின்னமாக நிற்கிறது இந்த பள்ளிக்கூடம்… மண்ணில் விழுந்து எழுந்து விளையாடும் குழந்தைகளைப் போல் ஆங்காங்கே சரிந்து கிடக்கும் கட்டிடங்கள்.. “இயற்கையோடு ஒட்டி வாழ எங்களுக்கு ஆசை” என்று , மைதானத்தில் இருக்கும் மரங்களின் அடியில் நடக்கும் வகுப்பறைகள் என பள்ளியின் நிலை அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்…


போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த ஒரு காரின் உள்ளேயிருந்து இந்த பள்ளியைக் கவனித்த வண்ணமிருந்தார் சுந்தர்… கோயம்பத்தூரிலிருந்து மாற்றலாகி சென்னைக்குப் புதிதாய் வந்திருக்கும் சுந்தருக்கு, தான் பயின்ற பெருமை மிகு பள்ளிக்கூடத்தின் இந்த நிலை, கண்களின் ஓரம் கண்ணீரை எட்டிப் பார்க்கச்செய்தது.. 20 வருடங்களுக்கு முன்னால் செல்கிறது சுந்தரின் பயணம்…


“டே கார்த்தி எங்கெல்லாம் உன்னை தேடரது… “


“சொல்லு டா, சுந்தர் ..எதுக்கு டா என்னை தேடுரே?”


“ஏன் நீ க்ளாசுக்கு வரதே இல்லை? நம்ம கணக்கு வாத்தியார் உன்னைத் திட்டிக்கிட்டே இருந்தார் தெரியுமா?”


“விடு டா , அவருக்கு என் மேல பாசம் அதிகம், அதான் திட்டிக்கிட்டே இருக்கார்.. “


“டே, ஏன் டா இப்படி இருக்கே? உனக்கு கணக்கு வரலைனா நான் சொல்லித் தரேன் அதுக்காக ஏன் க்ளாஸ் பக்கமே வராம இருக்கே.. “


“போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு நான் விளையாடப் போறேன்.. “


சுந்தரும் கார்த்தியும் ஒரே தெருவில் வசிப்பவர்கள்.. கார்த்தி , விளையாட்டுப் பிள்ளை, படிப்பதைத் தவிற என்ன சொன்னாலும் செய்வான்… சுந்தரோ புத்தகப் புழு… படிப்பைத் தவிற ஒன்றும் தெரியாது … வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கக் கூடியவன்… இவனை உதாரணம் காட்டியே கார்த்திக்கு தினம் பூஜை நடக்கும்.. முதல் மதிப்பெண் எடுக்கவில்லை எனினும் சுமாராக படிக்கும் திறன் கொண்டவன் கார்த்தி… இருந்தும் தனது விளையாட்டு குணத்தால், அனைவரிடத்தும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு வகுப்பின் கடைநிலை மாணவனாக இருந்தான்… ஒவ்வொரு முறை வகுப்பாசிரியரும், பெற்றோரும் திட்டும் போது தன்னால் படிக்க முடியும், தானும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இழந்து கொண்டே வந்தான்…


சுந்தரின் பெற்றோருக்கு கோயம்பத்தூருக்கு பணி மாற்றம் கிடைத்ததால் ஆறாம் வகுப்பிலிருந்து அங்கேயே படிக்கவேண்டியதாயிற்று. படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். ஒரு அழகியப் பெண் குழந்தை பிறந்தது, கார்த்திகா என்று நாமகரணம் செய்து வைத்து , கார்த்தி என அவளை ஆசையாக கூப்பிடும் போதெல்லாம், தனது நண்பன் கார்த்தியின் நினைவுதான் வரும் சுந்தருக்கு.. பணி மாற்றலாகி கடந்த மாதம் தான் சென்னையில் குடியேறினான்….


இன்று தான் , இந்த பள்ளியின் பக்கம் வர வாய்ப்பு கிடைத்தது.. கார்த்தி என்ன ஆனானோ தெரியவில்லை என்று யோசித்த வண்ணம் பள்ளியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்..பள்ளியின் மைதானத்தில், மாணவர்களின் மத்தியில் இருந்த ஆசிரியரைப் பார்க்க ஏனோ கார்த்தியின் நினைவு வர, அருகில் சென்று பார்த்தான்…


பார்த்த கணம் அது கார்த்தி தான் என உறுதி செய்த பின்,


“கார்த்தி…..”


“நீ ங் க …. நீ நீ சுந்தர் தானே”


“ஆமா கார்த்தி, எப்படி இருக்கே? பார்த்து எவ்வளவு நாளாச்சு…” என்று தழுவிக் கொண்டனர்…


“நல்லா இருக்கேன் சுந்தர்…. நீ எப்படி இருக்கே… எப்ப வந்தே கோயம்புத்தூரிலிருந்து…”

“நல்லா இருக்கேன் டா…அது சரி, நீ என்ன பண்றே இங்கே…. “


“நான் இங்க தான் P.E.T வாத்தியாரா இருக்கேன்…”


”ஓ நல்லது டா… ”


”அது சரி நீ எங்க இங்க? ”


”சென்னைக்கு வேலை விஷயமா வந்தேன், பக்கத்துல தான் வீடு வாயேன் போகலாம்.. “


“ஓ போலாமே, அதுக்கு என்ன…. இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பலாம்..“


பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் பழைய கதைகளைப் பேசியே பள்ளி நண்பர்கள் இருவரும் சுந்தரின் வீட்டை நோக்கிச் சென்றனர்..


“சரி, உன் வாழ்க்கை எப்படிப் போகுது… சந்தோஷமா இருக்கு டா… உன்னை இப்படி ஒரு நல்ல நிலைமைல பார்க்க…”


“நல்லாவே போயிட்டிருக்கு…எப்படியோ எனக்கு பிடிச்ச விளையாட்டுத் துறையில மேற்படிப்பு படிச்சு இங்கயே வேலையிலயும் சேர்ந்துட்டேன்…”


இப்படி பழங்கதைகள் பேசிக்கொண்டே வீடு சென்றனர்…


”அ ப் பா…என்று செல்லமாய்க் கட்டியணைத்தாள் கார்த்தி… யாருப்பா இவர்”


“இவர் தான் மா, என் நண்பன் கார்த்தி”


“கார்த்தி, இவ தான் என் குட்டி கார்த்தி..” ”மாமாவை உள்ள கூட்டிட்டு போமா” என்று சொல்லி தன் அறைக்குள் சென்றார் சுந்தர்.


கையைப் பற்றி கார்த்தியை உள்ளே அழைத்து அமர வைத்தாள் ஆறு வயதான குட்டி கார்த்தி…


“எப்படி மா படிக்கறே.. சுந்தரோட குழந்தைக்கு சொல்லியாத் தரனும்.. நீயும் ச்கூல் ஃபர்ஸ்ட் அஹ் தான் இருப்பே..” என்று சொல்லிய வண்ணம் கார்த்தியை செல்லமாய் அள்ளிக் கொண்டார் கார்த்தி…


உடனே குட்டி கார்த்தி, “மார்க் ல என்ன இருக்கு கார்த்தி மாமா, எங்க அப்பா எப்பவும் சொல்லிட்டு இருப்பார், அவர் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுத்தாலும் உங்களுக்குள்ள இருந்த பல திறமைகள் அவருக்கு இல்லைன்னு..அதனால மார்க் மட்டும் போதாதுன்னு சொல்லிட்டு இருப்பார்”


“ஓ அப்படியா குட்டி…” அவளின் முதிர்ந்த பேச்சை ரசித்தபடியே, ”மேல சொல்லு, இன்னும் என்ன சொன்னார்”


“அதனால வெறும் மார்க் அஹ் வெச்சு யாரையும் எட போடக் கூடாதுன்னு சொல்லுவார்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் திறமை இருக்கும், அதை மதிக்க தெரிஞ்சிருக்கனும்.. நான் சொல்றது சரி தான கார்த்தி மாமா… ” என்று வினா எழுப்பி பதிலுக்காக காத்திறாமல் விளையாட சென்று விட்டாள் கார்த்தி..


சுந்தரின் வளர்ப்பு சரி தானெனினும் அதைப் புரிந்து கொண்ட குட்டி கார்த்தியை பெருமிதத்தோடுப் பார்த்த வண்ணமிருந்தார் கார்த்தி…


***முற்றும்***

நன்றி உயிரோசை

நன்றி,

நாணல்

Saturday 23 October 2010

கௌதமிற்கு உதவுங்கள்

நண்பர்களே,



விபத்தில் சிக்கியிருக்கும் கௌதம் என்ற மாணவனின் உயிரைக் காப்பாற்ற நம்மால் முடிந்த பண உதவி அளிப்போம். கௌதமின் கல்லூரி நண்பர்கள் இணைந்து நாமும் அவருக்கு உரிய உதவி புரிவோம்.



விருப்பம் உள்ளவர்கள் கீழ் கொடுத்துள்ள எண்களில் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது கீழ் கொடுத்துள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம்.

Account Holder's Name: M Raghavan alias Saravanan
Account Type: Savings

Account Number : 004701574197

Bank : ICICI Bank

Branch: Koramangala

City: Bangalore Branch
Code: ICIC0000047

MICR Code: 560229003.

நன்றி தினமலர் : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111345

தொடர்பு கொள்ள:

நாகேந்திர பிரசாத் : + 91 77958 45181
மு. இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன் : 91-98809-61616

பணம் அனுப்பும் போது 'Madurai Gowtham Appeal' என்று சுட்டியிடுங்கள்.
அனுப்பிய பின், ’raghavan@shade.org.in’ என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள்.


நன்றி,
நாணல்

Wednesday 20 October 2010

முதல் முயற்சி

வெற்றியோடு
முடங்கிவிடும்
முதல் முயற்சி!


–00–00–


பகிர்ந்துகொள்ள முடியா
வெற்றிகளால்
அன்னியப்படுத்தப் படுகின்றன‌
உறவுகள்!


நன்றி,
நாண‌ல்

Monday 18 October 2010

விடையில்லா கேள்விக‌ளை..

தூங்காது நீ விழித்திருக்க‌
தூங்கியும் உனை நினைத்திருக்க‌
வார்த்தைகள் மறந்த மௌனத்தை மொழிபெயர்க்க‌
முடியாம‌ல் நானும் த‌வித்திருக்க‌
த‌னிமையையும் மௌன‌த்தையையும் உடைக்க‌
உனை ம‌ற‌க்க‌ எத்த‌னிக்கிறேன்
&^%$#@!
ம‌ல‌ர்ந்து
ம‌ண‌ம் ப‌ர‌ப்பி
வண்டை
குறை கூறுவ‌தில்
அர்த்த‌மில்லை
ம‌லர்ச்சியும்
ம‌ண‌மும்
இய‌ற்கையாய் நிக‌ழ்கையில்
உனை
குற்றம் கூறியாகப்போவ‌து
ஒன்றுமில்லை
ம‌ல‌ர்வ‌ண்டாக‌
இருக்கும் ம‌ட்டும்
எதுவும் குற்ற‌மில்லை
ந‌ன்றி,
நாண‌ல்

Monday 4 October 2010

காதல் சொல்லி ஏற்றுக்கொள்ளப்படாவிடின்..

தூங்காது அடுத்தென்ன‌
செய்யப்பட வேண்டுமென‌
காற்றில் திட்டங்கள்
தீட்டிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை..

@#$%^&

உன்னொருவனு(த்தி)க்காய் நானிருக்கிறேன்
என நம் சந்தோஷத்தின் எல்லையை
ஒரு இதயத்தோடு
சுருக்கிக்கொள்ள
வேண்டிய அவசியமில்லை..

@#$%^&

காரணங்கள் தேடி
கண்ணீருக்கு விடுதலை
தர வேண்டியிருக்காது..

@#$%^&

வில‌ங்குகளால் கட்டுண்டு
மனித விலங்காய்
நடமாட வேண்டியிருக்காது..

நன்றி,
நாணல்

Tuesday 24 August 2010

என்னைக் காப்பாற்றுங்கள்…

விலை வாசி ஏறிவிட்டதெனவும்
ஒரு பிடி மண்ணையாவது வாங்கிவிடவேண்டுமெனவும்
சொந்த வீடில்லையெனவும்
நகர மயமாக்கலின் தொல்லைகளையும்
பேசிப் பேசிக் கரைந்து போனீரோ
இனியில்லை அந்த கலக்கம் !



உங்கள் உருகாத
மனங்களைக் கண்டு
உருகத் தொடங்கியிருக்கிறாள்
இயற்கை அன்னை !!



கடந்துவிட்ட நேரம்
முழுகிக்கொண்டிருக்கும் நகரம்
தூங்கிகொண்டிருக்கும் நாம்
இன்யேனும் விழித்துக்கொள்வோம் !!!



இதைப் படிங்க: http://www.deccanchronicle.com/chennai/ice-man-sees-chennai-earth-80-years-992


இந்த செய்தியை கேட்டதில் இருந்து, நாம் என்ன செய்யப்போகிறோம் என தான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது..பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் குமுறிக்கொண்டிருக்கின்றேன்…


இது வரை இங்கும் அங்கும் கடைபிடித்துக்கொண்டிருந்த விடயங்களை ஒரு முகப் படுத்தப் போகின்றேன்..


1.அவசியமில்லாமல் இரு சக்கிர வாகனமோ , இல்லை நான்கு சக்கிர வாகனமோ எடுக்கப் போவதில்லை


2.வீட்டிலிருக்கும் அனாவசிய மின்சார பயன்பாட்டைத் தவிர்க்கப் போகிறேன்


3.வேலை விட்டு செல்லும் போது கணிணியை ‘Shut Down’ செய்து போவதை வாடிக்கையாக கொள்ளப் போகின்றேன்.மற்றவர்களையும் வற்புறுத்தப் போகின்றேன்


இது போல் என்னவெல்லாம் செய்யலாம் என பின்னூட்டமிடுங்கள்..
நம் அழகிய நகரைக் காப்பாற்றுவோம்..

நன்றி,
நாணல்

Wednesday 4 August 2010

அன்றும் இன்றும்..

யாரும் தெரியாத
யாரென்று புலப்படாத
வாழ்வை படிக்க வந்த மாணவர்களாய்
புத்தக சுமைகள் தவிர
சுமையேதுமில்லாத பருவமாய்
கனவுகளுக்காக உறங்கி
கவிதைகளாக வாழ்ந்தோம் அன்று


வானுயர்ந்த கட்டிடங்களும்
கையடக்க செல்பேசியும்
தொலைத்தபட்டியல் தேட கூகிளும்
என்றாவது அழைக்கும் நண்பனிடமும்
“எப்படா கல்யாணம்”
“என்னடா விசேடம்”
எனத் தொலைந்த உரையாடல்களுக்கும்
தொலைத்த நட்பிற்கும்
அடையாளம் தேடுகின்றோம் இன்று


“கால ஓட்டத்தில் ஆளுக்கொரு திசையென சிதறிக்கிடந்தாலும் ஆர அமர என்றாவது ஒரு நாள் நினைத்துப் பார்க்கையில் பல நல்ல உள்ளங்களின் நட்பு மனதிற்கு ஆறுதல் தருகிறது…அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி…அனைவருக்கும் நண்பர்கள் வார வாழ்த்துக்கள்… “


நன்றி,
நாணல்

Thursday 24 June 2010

என் காதல்…


உனக்காக தனித்து வாழ்ந்து
என் காதலை
உனக்கு நிரூபிக்கமுடியாபட்சத்தில்
என் காதலை நிரூபிக்க
காதலோடு உயிர் பிரிந்துவிடும்
இவ்வுலகை விட்டு
 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 
உடலின் வலிகள்
உறக்கத்தில் மறுத்துப்போகும்
உயிரின்(காதலின்) வலிகள்
உறக்கத்தில் மட்டுமே
கூடுகிறது ஏனோ?
 
நன்றி,
நாணல்

 

Tuesday 16 March 2010

கள்ளன்... யூத்ஃபுல் விகடனில்




இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..


http://youthful.vikatan.com/youth/Nyouth/nanalpoem1503010.asp

கள்ளன்...



முன்னிரவின் கள்ளமில்லா
வெள்ளைநிலவின் ஒளியில்
கள்ளச்சிரிப்புடன்
கொள்ளைக்கொண்ட நீ
எந்தன் துயில் நீக்கும்
வேகத்தடையோ…

விழித்தெழுந்துப் பார்க்கையிலே
அமாவாசையின் இருட்டில்
உன் கள்ளச்சிரிப்பு
என் மேல் மையல் கொண்டுள்ளது

தூக்கத்தடைகள் கொண்ட கனவுலகத்தை
மீண்டும் தழுவுகிறேன் அன்பே...
கள்ளன் உன் தரிசனம் வேண்டி..!



நன்றி,
நாணல்

Wednesday 10 March 2010

காதலருவி

பருவத்தின் உச்சியில் பிறந்து
நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி
இன்ப துன்பங்களில் உழன்று
வழி நெடுக்க உயிர் கொணர்ந்து
சலசலக்கும் கூ(ஊ)டலோடு இசைபறப்பி
வாழ்க்கைக் கடலின் அமைதியான நடுக்கடலில்
நிலவோடு போட்டிக்கொண்டு
அமைதியாக பயணிக்கிறது நம் காதல்

நன்றி
நாணல்

Thursday 25 February 2010

உன்னைப் பிரியும் வரை…

“மாற்றம் என்பது மானிட தத்துவம்
மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்”
என்ற கண்ணதாசன் கூற்று
மெய்யெனப்பட்டது
உன்னைப் பிரியும் வரை…


பெற்றவர்களுக்கு மட்டுமே
இப்பூவுலகில்
மாற்று இல்லையென
நம்பியிருந்தேன்
உன்னைப் பிரியும் வரை…


நீயில்லையெனினும்
என் ஜீவன் ஓடுமென
பெருமைக்கொண்டிருந்தேன்
உன்னைப் பிரியும் வரை…


நன்றி,
நாணல்

Tuesday 16 February 2010

காதலெனின்...

எனக்குள் எழும் கேள்விகளுக்கு

என் கேள்விக்கு முன்

நீயாக பதில் கூறும்

புரிதலுக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்…


இன்னொரு காதல்

என்னுள் நுழையுமா என

நான் குழம்பி நிற்கையில்

என்றும் வாரா நீ

இன்று மட்டும்

என் வழியில் புலப்பட்ட

தற்செயலுக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்…


உன்னைப் பற்றி யோசிக்கவே

நேரமில்லா நீ

என் சிறுபிள்ளைக் கண்ணீருக்கு

ஆறுதல் கூறும்

அக்கறைக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்



நன்றி,
நாணல்

Friday 12 February 2010

ஆசை… உன் நிறைவேறா பேராசை…

கார்த்திகை மாதத்து
மழையென என் காதலை
உன் மீது கொட்டிவிட வேண்டுமென்பது
என் எண்ணம்….
வானிலை அறிக்கை படித்து
மழையில் நனையாமல்
நீ
தப்பி விட முடியாதென்பது
என் திண்ணம்…


என்னிடம் தேங்கியுள்ள
உன் மீதான என் காதலை
கொட்டி தீர்த்தப் பின்
நீ கேட்டதற்காக
உனை பிரியலாமென்றால்,
தீராதிருக்கே இந்த காதல்
பாவம் என் செய்வேன் நான்
நீ கேட்டும்,
உனக்கு விடுதலை தர
நான் இசைந்தும்,
உன் இந்த ஆசை
நிறைவேறாது கண்ணே…



நன்றி,
நாணல்

Wednesday 10 February 2010

உனக்குள் நான் ..

இலை மறை காயாக
உனையறியாமல் உனக்குள் நுழைந்து
எனை யாரென்று தேட
நீ படும்பாட்டை ரசிக்கிறேனடா..
உனக்கான உன் மனதை
நீ புரியப்பழகு ,
புரிவாய்
உனக்குள் இருக்கும் என்னை
உன்னிளும் பரவும்
எனக்குள் இருக்கும் காதல்…

நன்றி,
நாணல்

Tuesday 9 February 2010

(வி) சித்திரமடி நீ எனக்கு…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

உன் நினைவாகவே
நான் இருக்க விரும்புகிறேன்,
என நீ சொன்னதற்காக
உன் குறுஞ்செய்திக்கு
தாமதமாக பதிலளித்தால்
ஏனடா தாமதமென
செல்லமாகக் கடிந்து கொள்கிறாய்…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

உன்னருகில் நான் இருக்கையில்
சிணுங்கும் என் கைப்பேசியை
உன் எதிரியென்கிறாய்…
மற்ற நேரத்தில்
உன் கைபேசி தான்
நம் உயிரென்கிறாய்
நம்மிருவரையும் இணைப்பதனால்…

(வி) சித்திரமடி நீ எனக்கு…

நன்றி,
நாணல்

Wednesday 3 February 2010

நான், வாழ்க்கை, காதல்

எனக்கென்னை புரிதல்
வேண்டி மட்டும் உனை
சந்திக்க நேர்ந்திருந்தால்…
நீ
எனக்கு புரியாதிருந்திருக்கலாம்…

வாழ்க்கை புரிதல்
வேண்டி மட்டும் உனை
சந்திக்க நேர்ந்திருந்தால்…
நீ
என்னோடு வழக்காடாமலிருந்திருக்கலாம்…

காதல் புரிதல்
வேண்டி மட்டும் உனை
சந்திக்க நேர்ந்திருந்தால்…
நீ
என்காதலை அங்கீகரிக்காமலிருந்திருக்கலாம்…

இப்படி
தோற்றுப்போன பல
சந்தர்ப்பங்களை மீறி
தொலைந்த காதலால்
கிடைத்த வாழ்க்கையை
புதுப்பிக்க முயற்சிக்கும் நான்…


நன்றி,
நாணல்

Sunday 10 January 2010

எனக்காய் நான் வாழ்ந்திட...

கண்ணின் துளி கன்னம் தாண்டும் முன்
கண்ணீர் துடைக்க நீ வந்தாய்..
புன்னகை பூக்கிறேன் என்று உணரும் முன்
புன்னகையை ரசிக்க நீ இருந்தாய்..

எண்ணங்களுக்கு வார்த்தை தேடி முடிக்கும் முன்
என் மொழிக்கு மறுமொழி சொன்னாய் நீ..
காதலை நான் கொண்டாடும் முன்
என் முகத்தில் காதல் கலை தெரிந்தது என்றாய் நீ॥

இப்படி என்னை விட என்னை
நீ நன்கு உணர்ந்ததினால் தானோ
என்னை விட்டுச் சென்றாய்
என் வாழ்க்கையை எனக்காய் நான் வாழ்ந்திட...


நன்றி,
நாணல்