Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sunday, 5 August 2012

பாதை

ச்சா செத்துப்போகலாம் போல இருக்கு”, சொல்லிக்கொண்டே வீட்டுக் கதவை வெளியே தாளிட்டு வேகமாய் ஓடினேன் மொட்டை மாடிக்கு. உச்சி வெயிலின் தாக்கம், என் மனதின் உச்சத்தை ஈடு செய்ய முடியாது கொஞ்சம் தணிந்தே இருந்தது. யாருமில்லா அந்த வெற்று இடம் கூட பாரமாய்த் தோன்றியது எனக்கு, எவர் கண்ணிலும் படாத ஒரு மூலையில் சென்று அமர்ந்தேன்.. இன்றே மொத்தமாய் அழுது தீர்த்துவிட வேண்டுமென வரம் பெற்றதைப்போல் அழுது தீர்த்துக் கொண்டிருந்தேன். என் கேவல் சத்தம் எனக்கே பயமாய் இருந்தது. யாருக்கும் பாரமாய் இராமல் செத்துவிடலாமென தோன்ற, செய்ய வேண்டியவை ஏதேனும் இருக்கிறதா என என்னை நானே கேட்டுக் கொண்டேன். நல்ல வேளை அப்படி அவசர வேலை எதுவும் மனதிற்கு தோன்றவில்லை. ”நாளை சாவை எதிர்கொள்ளும் மனநோக்கோடு இன்றைய நாளை நீ வாழ்” என்னும் காந்தியின் பொன்மொழிக்கேற்ப வாழ்ந்ததால் தானோ என்னவோ, இந்த நொடியில் செய்ய வேண்டிய வேலை, சாவைத் தவிற வேறேதுவும் இல்லையெனக்கு.

தடுப்புச்சுவரின் அருகே சென்று என் பாதையை மெல்ல எட்டிப்பார்த்தேன். சிரமம் நிறையவே இருக்கும் போல பட்டது. மொட்டை மாடி இருக்கும் பத்தாவது மாடியிலிருந்து கீழே நடப்பவையை கடைசி முறையென நோட்டமிட்டேன். ப்ரார்த்தனை பலித்ததால், ஒவ்வொரு தேங்காயாய் வழிப்பிள்ளையாருக்கு அடித்து கொண்டிருந்தார் தாத்தாவும் பேரனும். ”நன்றி கடவுளே, அவர்களுக்கேனும் நினைத்ததை நடத்தி கொடுத்தாயே”. சிலர் அங்கும் இங்கும் அலைந்தவண்ணம் இருந்தனர், என்ன அவசர வேலையோ அவர்கட்கு, இன்னும் சற்று நேரத்தில், என் பிணத்தை வேடிக்கை பார்க்க வேண்டுமென தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர்.

பல தடவை இந்த தடுப்புசுவரின் மீது, மிச்சமிருக்கும் சாதத்தை வைத்து காக்காவை அழைத்திருக்கேன், அப்போதெல்லாம் தாமதமாக வரும் காக்கா, இன்று நான் அழைக்காமலே வந்து என் அருகில் வந்து கரைந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று காக்காக்கள் உடனே எங்கிருந்தோ பறந்து வர, எங்கே தலையில் கொட்டி விடுமோவென பயந்து விலகினேன்.

என்னம்மா, இங்க என்னப் பண்ற?” புன்னகையோடு விசாரித்தார் பக்கத்து வீட்டில் வசிப்பவர்.

ஒண்ணுமில்லை அங்கிள், சும்மா காக்காக்கு சாப்பாடு வைக்க வந்தேன்” என்று பொய்யாய் புன்னகைத்தேன்.

நல்லப் பொண்ணு மா, நீ.. சீக்கிரம் வீட்டுக்குப் போ, வெயில்ல நிக்காதே” என்று அவர் பங்கிற்கு அறிவுரை சொல்லிச்சென்றார்.

பித்துப்பிடித்தாற் போல் வெற்று மாடியை வலம் வந்தேன். எங்கேனும் ஒளிந்துகொள்ள எண்ணி, மீண்டுமொரு மூலையில் அமர்ந்து அழுது தீர்த்தேன். சற்று முன் வந்த காக்கைகளையும் காணவில்லை. அவற்றில் ஏதோ ஒன்று என் மூதாதையர் போல, என்னை அழைத்துச்செல்ல வந்தாரோ இல்லை என்னை உயிர்ப்பிக்க வந்தாரோ தெரியாது.

மெல்ல தடுப்புச் சுவரின் அருகில் சென்று நின்றதும், காற்றும் பலமாய் வீசிக்கொண்டே இருந்தது. விட்டுச்சென்ற காக்கைகளும் என் தலையை வட்டமிட்டுக்கொண்டே இருந்தன. யாரேனும் என்னை கவனிக்கிறாரா எனப் பார்த்து, இன்னும் என்னை கவனிக்க இவ்வுலகில் ஆள் மிச்சம் இருக்குமா என ஏங்கும் என் அறியாமையை எண்ணி சிரித்துக் கொண்டே குதித்தேன். முதலில் பட்டது 9 வது மாடி வீட்டு ஜன்னல் மேலிருக்கும் கூரை, அங்கே பட்டு, தெரித்து எங்கள் குடியிருப்பின் ட்ரான்ச்ஃபார்மர் மீது விழுந்தேன், அதற்கும் என்னைப் பிடிக்கவில்லைப் போல, உடனே தூக்கி எறிந்தது. சாலையில் சென்று விழுந்தேன். அந்த நொடி உலகம் ஸ்தம்பித்தது போன்ற ஒரு உணர்வு, சுற்றி ஒரே கூட்டம். முன் சொன்ன அவசர மக்கள் என்னைப் பார்ப்பதை மட்டுமே தலையாய கடமையாய் கொண்டிருந்தனர் இப்பொழுது.

உலகம் மிகச்சிறியது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும், ஒரு மணிநேரத்தில், என் நண்பர்களும் உறவுகளும் என்னருகில்.

ச்சா நேத்துக்கூட பேசினேனே, ஒரு டாக்டர் நம்பர் வேணும்னு கேட்டா, எஸ்.எம்.எஸ்ல அனுப்பி விட்டு அப்புறம் பேசுறேனு சொன்னேன், அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாளே இவ”, எனத்தனக்குள் அழும் நண்பனொருவன்.

யாரோ கூட வேலை பாக்குற பையனை விரும்புறேனு போன வாரம் சொன்னாலே, சரி நல்ல விஷயம் சீக்கிறம் சொல்லி சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேனே, இப்ப ஏன் இப்படி அவசரப் பட்டுட்டா தெரியலேயே”, என கதறும் தோழி ஒருத்தி.

தனக்குத் தான் மனைவியாக ஆசைப்பட்டாள் இவளென தெரியாது, நேற்று அலுவலகத்தில் அடித்த அரட்டைகளை நினைவுகூர்ந்து அழுது கிடந்த்தான், நண்பனாய்த் தென்பட்ட காதலன். அவரவர் அவரவர் அறிவுக்கெட்டிய விஷயங்களை வைத்து, என தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். தன் மகள் சென்னையில் சந்தோஷமாய் இருக்கிறாள் என நிம்மதியாய் இருந்த, என் தாய் தந்தை, என்னை என் பிணத்தை பார்க்கப் பதறி அடித்து ஓடி வந்துகொண்டிருப்பதாக சிலர் பேசிக்கொண்டனர்.

தோற்றுப் போன தைரியமான கோழையான, என் இந்த கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன் . ”கவிதா”, ஹ்ம்ம்ம் இல்லையே, மிகவும் மென்மையான பெயர், சரி வராது… “ராதா”, ”கீதா”, “ஜானகி”, ஹ்ம்ம்ம் எதுவும் சரியாக படவில்லை. சட்டென நினைவுக்கு வந்தது “ப்ரபா”… ஆம், சரி “ப்ரபா” சரியான பெயர். யோசித்த களைப்பில் தூங்கிவிட்டேன் போல, விழிக்கையில் அம்மாவும் அப்பாவும் என் அருகில், “ஆபீஸ்ல ஏதோ ப்ரச்சனை போல ஆண்டி, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டென்கிறா, அதான் பயமா இருந்துச்சு, உங்களை வரச் சொன்னோம்”, அக்கறையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் தோழி, என் இந்தக் கற்பனைக் கதையை தலையணை அடியில் மறைத்து என் அன்னையின் மடியில் அடைக்கலமானேன்.

நன்றி,
நாணல்

Sunday, 20 March 2011

வாசுகி மகன்

"அவனுக்கு அம்மா ஆகுற வயசு உனக்கு இல்லை, உனக்கு பிள்ளையாகுற வயசும் அவனுக்கு இல்லை"

திரையில் படத்தின் இறுதிக் காட்சி ஓடிக்கொண்டிருக்க, தன் அருகில் அமர்ந்திருக்கும் தன் செல்ல மனைவியின் கைகளை ஆறுதலாக பற்றினான் 'வாசு' என்கிற வசந்த் குமார். அவனின் பற்றுதலின் அர்த்தம் புரிந்து, கொஞ்சம் தெளிவானவளாய்த் தென்பட்டாள் வாசுகி.

கண்களை மெல்ல மூட, இரண்டு மணி நேரத்திற்கு முன் (அதாவது 'செல்லமே' படம் ஆரம்பித்த நேரம்) செல்கிறது அவளின் நினைவு. வசந்த், மனித வளத் துறையைன் மேலாளர் என்பதாலும், மனிதர்களைப் படிப்பது அவனின் பொழுது போக்கு என்பதாலும் மிக எளிதில் அனைவரையும் புரிந்து கொள்வான். இதையே வாசுகியிடமும் வெளிக்காட்டியமையால், அவளின் நண்பனாய், கணவனாய் , உயிராய் உருகொண்டான் திருமணமான 4 மாதங்களிலேயே. தன் ஆசைக் கணவணோடு படம் பார்க்க அமர்ந்திருந்தவள் சோர்ந்து காணப்பட்டாள். எப்பொழுதும் பட படவென பேசிக் கொண்டிருக்கும் வாசுகி ஒரு வாரமாகவே அமைதியாய், எதையோ யோசித்த வண்ணம் இருப்பதை வசந்த் கவனித்துக் கொண்டேயிருந்தான். எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் வாசுகி, ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் தன்னிடம் பகிரத் தயங்குகிறாள் என்பதைப் புரிந்து அவளாகச் சொல்லும் வரை கேட்கக் கூடாது என அமைதியாய் இருந்தான் வசந்த்.

என்னங்க...”

ஹ்ம்ம் சொல்லு மா, என்னாச்சு....”

ஒரு வாரமாவே என் மனசு சரியில்லைங்க..”

நானும் கவனிச்சிட்டு தான் வரேன் வாசுகி.. கேட்டு உன்னை சங்கடப்படுத்த வேண்டாமேன்னு தான் அமைதியா இருந்தேன்... போன வாரம் நாம ஷாப்பிங் போயிருந்தப்ப உன் ஃப்ரெண்டு வாசுதேவனைப் பார்த்தோமே.. அப்போலையிருந்தே உன் முகம் ஒரு மாதிரி தான் இருக்கு.. உங்களுக்குள்ள எதாவது ப்ரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லு, பேசி ஸால்வ் பண்ணிடலாம்...”

எப்படி வாசுதேவனைப் பற்றி ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு, கணவனே இப்படி நேராக விஷயத்தை ஆரம்பித்தது ஆறுதல் தந்தது. எதையும் வெளிப்படையாய் பேசும் இந்த ஒரு குணத்திற்காகவே வசந்த் போன்ற ஒருவன் தனக்கு கணவனாய்க் கிடைத்தது, தான் செய்த புண்ணியமென கடவுளுக்கு அவ்வப்பொழுது நன்றி சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஆமாங்க... அவனைப் பத்தி தான் யோசிச்சிட்டே இருந்தேன்.. அவனைப் பத்தி உங்க கிட்ட நான் அதிகம் சொன்னதில்லைனு நினைக்கறேன்..”

ஆமா, உன்னோட ஜூனியர், நீ இருந்த அபார்ட்மெண்ட்ல குடியிருந்தான்னு சொல்லியிருக்கே, ஒரே டீம்ங்கறதுனால, ஆபீஸ்க்கு ஒண்ணா போயிட்டு வருவீங்கன்னு சொல்லியிருக்கே... இப்ப அவனுக்கு ஏதாச்சு ப்ரச்சனையா.. ”

இல்லைங்க, உடனே ஸால்வ் ஆகுற ப்ரச்சனை இல்லை இது..உங்களுக்கு கேக்குற பொறுமை இருந்தா அவனைப் பத்தி சொல்றேன் கேளுங்க, அப்புறம் உங்களுக்கே புரியும்...”

ஹ்ம்ம் சொல்லு..”

இங்க சென்னைக்கு வந்த புதுசுல, டீம் அவுட்டிங்க்காக E.C.R ஒரு beach resort போயிருந்தோம். அப்ப திரும்பி வரப்ப தான் முதமுதல் வாசுகிட்ட பேசினேன்..”

தன்னை வாசு எனக்கூப்பிடும் படி பல முறை சொல்லியும், வசந்த் என்றே அழைத்த வாசுகி, வாசுதேவனைவாசுஎன அறிமுகம் செய்வது புதிராக இருந்தது வசந்த்திற்கு... நிச்சயம் சிக்கலான ப்ரச்சனையாகத் தானிருக்குமென, தனது மன நிலையைத் தயார் செய்து கொண்டிருந்தான்..இந்த பெயர் குழப்பத்தைக் கண்டுகொள்ளாதவனாய் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

சரி...”

"பேச ஆரம்பிச்ச முத நாளே அவனோட அடி மனசுல ஏதோ கஷ்டம் இருக்குற மாதிரியும், பேச்சுக்கும் அவனோட மனசுக்கும் இடைவெளி இருக்குற மாதிரியும் எனக்கு தோணுச்சு, சரி முதல்லயே கேக்க வேண்டாமேன்னு அவனை அவன் போக்குல விட்டேன்.. அப்படி விட்டதுல சில விஷயங்கள கவனிச்சும் அவன் சொல்லியும் தெரிஞ்சுக்கிட்டேன்.."

"என்னது?"

"அவனோட அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போறவங்கன்றதுனால, சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல தான் வளர்ந்திருக்கான். பொதுவா ஹாஸ்டல்ல வளருற எல்லாப் பசங்க மாதிரி, இவனும் இவனோட அப்பா அம்மாவோட அன்புக்கு ஏங்கிகிட்டே இருந்திருக்கான்.."

"சரி, இது பொதுவா வேலைக்கு போகிற அப்பா அம்மாவோட பசங்களுக்கும் இருக்கிற ப்ரச்சனை தானே"

”ஆமாங்க, இது பொதுவான ப்ரச்சனை தான்..ஆனா அதை பசங்க எப்படி எடுத்துக்கிறாங்கன்றது தானே அடுத்த கட்டப் ப்ரச்சனை.."

"அதுவும் சரி தான்..."

"இப்படி தனியாவே வளர்ந்து, தனியாவே வாழப் பழகிட்டதுனால, யார் மேலயும் ஒரு பிடிப்பு அவனுக்கு இருந்தது இல்லை. வேலைக்கு போக ஆரம்பிச்ச உடனேயும் வீட்டுல இருந்து கூட வந்திருக்கலாம், ஆனா இப்பவும் தனியாத் தான் தங்கியிருக்கான்.. டீம்லயும் பார்த்தீங்கன்னா, அவனுக்கு நல்ல பேர், எல்லார் கிட்டயும் நல்லாப் பேசுவான்.. ஆனா யார் கிட்டயும் அதிகமா emotional attachment வெச்சுக்க மாட்டான்.. அவனுக்குன்னு ஒரு வட்டம் போட்டுக்கிட்டு யாரையும் அவன் வட்டத்துக்குள்ள விடாம படு ஜாக்கிரதையாப் பார்த்துப்பான்"

"உன் கிட்ட கூடவா?"

”ஆரம்பத்துல அப்படி தான் இருந்தான், மெல்ல அவனுக்கு என் மேல நம்பிக்கை வந்துச்சா, இல்லை நான் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செஞ்சு , என் கிட்ட அதிகம் பேச வெச்சேனான்னு தெர்ல.. கொஞ்ச நாள்ல என் கிட்ட நல்லாப் பேச அரம்பிச்சுட்டான்.. அவன் கடந்த காலத்தைப் பத்தி அதிகம் சொல்லைனாலும், நிகழ் காலத்துல நடக்குற ஒவ்வொரு சின்ன விஷயமா இருந்தாலும் என் கிட்ட பகிர்ந்துக்குவான். எனக்கு ஜூனியர்ங்கற முறையில வர்க் பத்தி நிறைய பேசுவோம்..”

”அப்புறம் என்ன?”

”இப்படி என் கிட்ட மட்டும் இருந்துட்டு, மத்தவங்க கிட்ட ஏன் தள்ளியே இருக்கான்னு எனக்கு வேடிக்கையா இருந்துச்சு, அவன் வேணும்னே தன்னைத் தனிமைப் படுத்திக்கிட்டு எல்லார் கிட்டையும் sympathy create பண்றானு தோணுச்சு.. பல தடவை இப்படி இருக்காதேன்னு சொல்லிப் பார்த்து வெறுத்து விட்டுடேன்..இன்னும் கொஞ்சம் அதிகமா analyze பண்ணிப் பாக்கும் போது தான், அவன் ப்ரச்சனை என்னனே புரிஞ்சுது.."

"என்னது?"

"ஆரம்பத்துல இருந்தே உறவுகள் அவனுக்கு சரியா அமையாததுனால, இப்ப யாரு அவனை கொஞ்ச நெருங்கி வர மாதிரி தெரிஞ்சாலும், எங்க விட்டுட்டு போயிடுவாங்களோங்கிற பயத்துல, யாரையும் நெருங்க விடறதுல... இது கூட பரவாயில்லைங்க.. சில நேரம் தான் பேசினதையே முன்னுக்கு பின்னா பேசுவான்..."

"முன்னுக்கு பின்னா ... புரியலை..."

"ஹ்ம்ம் உதாரணத்துக்கு சொல்றேன் கேளுங்க.. என் கிட்ட பேசும் போது, பிள்ளையார்னா பிடிக்கும்னு சொன்னான்..ஆனா...மறுநாள் ஆபீஸ்ல எல்லாரும்பேசிட்டு இருக்கும் போது தான் ஒரு நாத்திகவாதின்னு வாதம் பண்ணிட்டு இருந்தான்... ஒரு தடவைன்னா சரின்னு விடலாம், இப்படி பல முறை பல விஷயங்களை மாத்தி மாத்திப் பேசுவான்"

"... ஏன் அப்படி? அதுக்கும் ஒரு பதில் வெச்சுருப்பியே நீ... என்ன சொல்லுது உன்analysis report?"

"அதுக்கும் அவன் தனிமை தாங்க காரணம்...தான் தனிமப் படுத்தப்பட்டவன், தன்னை யாரும் கவனிக்கறது இல்லை அப்படின்னு அவனுக்குள்ள எப்பவுமே ஒரு எண்ணம் இருக்கும். அதனால சமயம் கிடைக்கும் போது, தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்னுஇப்படி கூட்டத்துக்கு ஏத்த மாதிரி தன்னோட கருத்தை மாத்திகிட்டு எங்க போனாலும்தன்னோட பேச்சும் தன்னோட கருத்தும் தான் ஜெயிக்கனும்னு எல்லார் கிட்டையும்வீண் விவாதம் பண்ணிட்டு இருப்பான்..."

"சரி, இதுக்கும் உன் குழப்பத்துக்கும் என்ன சம்பந்தம்..."

"அட ஆமால, அதை சொல்லாம, என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... அப்படி தனிமைல யாரையும் கிட்ட சேர்த்துக்காம இருந்தவன், என் கிட்ட மட்டும்கொஞ்சம் அதிகமாவே உரிமை எடுத்துகிட்டான்.. இதுக்கு எங்க ரெண்டு பேரோட பேர்ஒற்றுமையும் ஒரு காரணமா இருக்கலாம்... அவனை வாசுன்னு கூப்பிடதுனால தான்உங்களை "வாசுன்னு" கூப்பிட முடியாதுன்னு நான் சொன்னேன்... வாசுன்னாலேஅவன் ஞாபகம் தான் வருது எனக்கு.."

தன் கேள்விக்கு பதில் கிடைத்த திருப்தியோடு, புன்னகைத்துக் கொண்டே "சரி விடு, பேர்ல என்ன இருக்கு..."

"ஹ்ம்ம்ம், பேர் ஒற்றுமையோட, ஒரே இடங்கிறதுனால, ஆபீஸ்ல லேட்டாச்சுன்னா, அவன் தான் கூட இருந்து கூட்டிட்டு வருவான்..நம்மளை விட சின்னவங்க நம்மளை பாத்துக்கும் போது, நம்ம மேல அக்கறை காட்டும் போது, ரொம்ப நல்லா இருக்கும். அதே மாதிரி தான் இவன் என் மேல எடுத்துகிட்ட உரிமையை ரசிச்சிட்டு இருந்தேன். அதே மாதிரி நம்மளை விட சின்னவங்களா இருக்கறவங்களுக்கு அக்கறை காட்டுறதும் தனி அலாதி தான். உரிமையோட என்னைத் திட்டிகிட்டேஇருப்பான்...’சீக்கிறம் வேலையை முடிக்க வேண்டியது தானேடி.’ அப்படி இப்படின்னு... "

"ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்"

"இப்படி போயிட்டே இருக்கும் போது தான், நீங்க என்னைப் பார்க்க வந்தீங்க... அப்பஅவன் ஊர்ல இல்லாததுனால அவன் வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன், அதுக்குள்ள என் டீம்ல யாரோ பேசும் போது பேச்சுவாக்குல எனக்கு கல்யாணம்நிச்சயம் ஆனதை சொல்லியிருப்பாங்க போல... "

"ஹ்ம்ம்ம்"

"வந்ததும் வராததுமா..ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு, என் கிட்ட பேசறதைநிறுத்திட்டான்.."

"அப்படி என்னக் கேட்டான்?"

"'நீ கூட என்னை விட்டுட்டுப் போற இல்லை, போடி போ...' அப்படின்னு கண் கலங்கசொல்லிட்டு போனது தான் என் கண் முன்னாடி நிக்குதுங்க...அந்த கோவத்துல நம்மகல்யாணதுக்கு கூட வரலை அவன்.. அதுக்கப்புறம் போன வாரம் தான் பார்த்தேன்.. "

" ஹ்ம்ம்ம்"

"நான் கூப்பிட்டும் அவன் பேசாம போனது, கஷ்டமாயிருந்துச்சு, அதனால அவன்ரூம்க்கு போன் போட்டா, அவன் ரூம் மேட் தான் பேசினான்... அவன் முன்ன மாதிரிஇருக்கறது இல்லையான், நான் கூட இருந்தப்போ சண்டைப் போட்டு சிகரெட் பிடிக்கறபழக்கத்தை விட வெச்சேன்.. இப்ப சிகரெட்டோட தண்ணியும் அடிக்கஆரம்பிச்சுட்டானா... தினம் குடிக்கிறான் போல, சரியா சாப்பிடறதும் இல்லையான்.. யார் கிட்டயும் பேசறது இல்லையான்... நானும் கல்யாணத்துக்கு அப்புறம் ஆபீஸ்போகாததுனால, அவன் இப்படி மாறினது எனக்கு தெரியாமப் போச்சு.. நானும் அவன்நம்பிக்கையை கெடுக்குற மாதிரி நடந்துகிட்டேனோன்னு உறுத்துதுங்க...அவன்சரியான வழியில போயிட்ருப்பானு தான் நான் இருந்தேன், இப்படி இருக்குறது எனக்குபயமா இருக்குங்க.. என்ன ஆவானோன்னு... அதான என்ன பண்றதுன்னு தெரியாமகுழம்பிகிட்டு இருக்கேன்..என் கிட்ட அவன் பேசாம இருக்குறது கூட எனக்கு பெருசா படலை, ஆனா எங்க இருந்தாலும் ஒழுக்கமா நல்லா இருந்தா சரி..."

"ஹே, இதுக்கு நீ என்ன பண்ண முடியும்... விடு டா...சின்னக் குழந்தை மாதிரி... அவனவன் வாழ்க்கையை அவனவன் தான் வாழனும், நீயோ நானோ வாழ வைக்கமுடியாது சரியா...உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் உன் கிட்ட பேசற மாதிரி, அவனும்உன் கிட்ட பேசினா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்.. அவனா ஒருமுடிவெடுத்துட்டு தள்ளியிருந்தா நாம என்னப் பண்ண முடியும்...இதுக்கெல்லாம் ஃபீல்பண்ணாத சரியா... போம்மா, போய் வேலையைப் பாரு"

"அவனுக்கு அம்மா ஆகுற வயசு உனக்கு இல்லை, உனக்கு பையனாகுற வயசும்அவனுக்கு இல்லை"

என திரையில் ஒலிக்க.. நான் சொல்றது சரியா என்கிற தோணியோடு அவளின் கைகளைப் பற்றி எழுந்து சென்று விட்டான்...

வாசு பற்றிய குழப்பங்களைச் சொன்னால், எங்கே தன்னைத் தப்பாக எடுத்துக்கொள்வானோ என பயந்த வாசுகிக்கு, வசந்த்தின் இந்த செய்கை, மனதின் பாரத்தை குறைத்து விட்டதைப் போல் இருந்தது.. நட்பு , காதல் என சுருக்கிவிட்ட ஒத்த வயதுடைய ஆண் பெண் உறவுகளைத் தாண்டி, தாய்மை என்னும் ஒரு உணர்வைப் புரிந்து கொண்ட தனது வசந்தைப் பார்த்தவாறே தனக்குள் வளரும் குட்டி வசந்த்தை வருடியபடியே கண்கள் அயர்ந்தாள் வாசுகி...

தன்னிடம் சொல்லியதோடு வாசுகியின் பாரம் குறைந்து விட்டது. இரண்டு நாட்கள் முன் வாசுவை சாலையில் பார்த்த கோலம் ( குடியின் உச்சத்தில், நடக்க கூட தெம்பு இல்லாமல், தட்டித் தடுமாறி நடந்து கொண்டிருந்தவனை, வசந்த் தான் அவனது வீட்டில் டிராப் செய்து விட்டு வந்தான் ) கண் முன் விரிய, இதைப் பற்றி வாசுகியிடம் சொல்லலாமெனத் தான் வாசுவைப் பற்றிய பேச்சை எடுத்தான். ஆனால் வாசுகிக்குள் இருக்கும் குற்ற உணர்வில், தானும் இவ்விஷயத்தை சொல்லி அதிகப் படுத்த வேண்டாமென முடிவெடுத்தான். தனது தம்பி வயது உடைய வாசுவை நண்பனாக்கி அவனுக்குள் இருக்கும் வெறுமையை தன்னால் முடிந்த வரை சரி செய்யலாமென முடிவெடுத்து, "வாசுதேவன்" என்னும் பேரை முகனூலில் தேடிப் பிடித்து, அவனுடன் சினேகம் கொள்ளத் தயாரானான்...

***முற்றும்***

நன்றி,

நாணல்

Sunday, 24 October 2010

குட்டி கார்த்தி...

“ஆயா… 1 ரூபாய்க்கு நெல்லிக்காய் கொடுங்க…”


“இந்தா..” என்று கொடுத்துவிட்டு , ஆயா என்று இன்னொரு குரல் வந்தப் பக்கம் திரும்பித் தன் வியாபாரத்தை படு மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தாள், ஒரு பள்ளியின் வாசலில் கடை போட்டிருந்த ஆயா..


இந்த பள்ளியின் வயதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ”நான், அந்த காலத்தின் தலை சிறந்த பள்ளியான ’St Joseph’ பில் SSLC முடித்தவனாக்கும்” என்று மார் தட்டிக் கொள்ளும் தாத்தாக்களைக் கேட்டால் தெரியும்… போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னையின் பிரதான சாலையில் , பழமையின் நினைவுச்சின்னமாக நிற்கிறது இந்த பள்ளிக்கூடம்… மண்ணில் விழுந்து எழுந்து விளையாடும் குழந்தைகளைப் போல் ஆங்காங்கே சரிந்து கிடக்கும் கட்டிடங்கள்.. “இயற்கையோடு ஒட்டி வாழ எங்களுக்கு ஆசை” என்று , மைதானத்தில் இருக்கும் மரங்களின் அடியில் நடக்கும் வகுப்பறைகள் என பள்ளியின் நிலை அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்…


போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த ஒரு காரின் உள்ளேயிருந்து இந்த பள்ளியைக் கவனித்த வண்ணமிருந்தார் சுந்தர்… கோயம்பத்தூரிலிருந்து மாற்றலாகி சென்னைக்குப் புதிதாய் வந்திருக்கும் சுந்தருக்கு, தான் பயின்ற பெருமை மிகு பள்ளிக்கூடத்தின் இந்த நிலை, கண்களின் ஓரம் கண்ணீரை எட்டிப் பார்க்கச்செய்தது.. 20 வருடங்களுக்கு முன்னால் செல்கிறது சுந்தரின் பயணம்…


“டே கார்த்தி எங்கெல்லாம் உன்னை தேடரது… “


“சொல்லு டா, சுந்தர் ..எதுக்கு டா என்னை தேடுரே?”


“ஏன் நீ க்ளாசுக்கு வரதே இல்லை? நம்ம கணக்கு வாத்தியார் உன்னைத் திட்டிக்கிட்டே இருந்தார் தெரியுமா?”


“விடு டா , அவருக்கு என் மேல பாசம் அதிகம், அதான் திட்டிக்கிட்டே இருக்கார்.. “


“டே, ஏன் டா இப்படி இருக்கே? உனக்கு கணக்கு வரலைனா நான் சொல்லித் தரேன் அதுக்காக ஏன் க்ளாஸ் பக்கமே வராம இருக்கே.. “


“போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு நான் விளையாடப் போறேன்.. “


சுந்தரும் கார்த்தியும் ஒரே தெருவில் வசிப்பவர்கள்.. கார்த்தி , விளையாட்டுப் பிள்ளை, படிப்பதைத் தவிற என்ன சொன்னாலும் செய்வான்… சுந்தரோ புத்தகப் புழு… படிப்பைத் தவிற ஒன்றும் தெரியாது … வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கக் கூடியவன்… இவனை உதாரணம் காட்டியே கார்த்திக்கு தினம் பூஜை நடக்கும்.. முதல் மதிப்பெண் எடுக்கவில்லை எனினும் சுமாராக படிக்கும் திறன் கொண்டவன் கார்த்தி… இருந்தும் தனது விளையாட்டு குணத்தால், அனைவரிடத்தும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு வகுப்பின் கடைநிலை மாணவனாக இருந்தான்… ஒவ்வொரு முறை வகுப்பாசிரியரும், பெற்றோரும் திட்டும் போது தன்னால் படிக்க முடியும், தானும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இழந்து கொண்டே வந்தான்…


சுந்தரின் பெற்றோருக்கு கோயம்பத்தூருக்கு பணி மாற்றம் கிடைத்ததால் ஆறாம் வகுப்பிலிருந்து அங்கேயே படிக்கவேண்டியதாயிற்று. படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். ஒரு அழகியப் பெண் குழந்தை பிறந்தது, கார்த்திகா என்று நாமகரணம் செய்து வைத்து , கார்த்தி என அவளை ஆசையாக கூப்பிடும் போதெல்லாம், தனது நண்பன் கார்த்தியின் நினைவுதான் வரும் சுந்தருக்கு.. பணி மாற்றலாகி கடந்த மாதம் தான் சென்னையில் குடியேறினான்….


இன்று தான் , இந்த பள்ளியின் பக்கம் வர வாய்ப்பு கிடைத்தது.. கார்த்தி என்ன ஆனானோ தெரியவில்லை என்று யோசித்த வண்ணம் பள்ளியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்..பள்ளியின் மைதானத்தில், மாணவர்களின் மத்தியில் இருந்த ஆசிரியரைப் பார்க்க ஏனோ கார்த்தியின் நினைவு வர, அருகில் சென்று பார்த்தான்…


பார்த்த கணம் அது கார்த்தி தான் என உறுதி செய்த பின்,


“கார்த்தி…..”


“நீ ங் க …. நீ நீ சுந்தர் தானே”


“ஆமா கார்த்தி, எப்படி இருக்கே? பார்த்து எவ்வளவு நாளாச்சு…” என்று தழுவிக் கொண்டனர்…


“நல்லா இருக்கேன் சுந்தர்…. நீ எப்படி இருக்கே… எப்ப வந்தே கோயம்புத்தூரிலிருந்து…”

“நல்லா இருக்கேன் டா…அது சரி, நீ என்ன பண்றே இங்கே…. “


“நான் இங்க தான் P.E.T வாத்தியாரா இருக்கேன்…”


”ஓ நல்லது டா… ”


”அது சரி நீ எங்க இங்க? ”


”சென்னைக்கு வேலை விஷயமா வந்தேன், பக்கத்துல தான் வீடு வாயேன் போகலாம்.. “


“ஓ போலாமே, அதுக்கு என்ன…. இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பலாம்..“


பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் பழைய கதைகளைப் பேசியே பள்ளி நண்பர்கள் இருவரும் சுந்தரின் வீட்டை நோக்கிச் சென்றனர்..


“சரி, உன் வாழ்க்கை எப்படிப் போகுது… சந்தோஷமா இருக்கு டா… உன்னை இப்படி ஒரு நல்ல நிலைமைல பார்க்க…”


“நல்லாவே போயிட்டிருக்கு…எப்படியோ எனக்கு பிடிச்ச விளையாட்டுத் துறையில மேற்படிப்பு படிச்சு இங்கயே வேலையிலயும் சேர்ந்துட்டேன்…”


இப்படி பழங்கதைகள் பேசிக்கொண்டே வீடு சென்றனர்…


”அ ப் பா…என்று செல்லமாய்க் கட்டியணைத்தாள் கார்த்தி… யாருப்பா இவர்”


“இவர் தான் மா, என் நண்பன் கார்த்தி”


“கார்த்தி, இவ தான் என் குட்டி கார்த்தி..” ”மாமாவை உள்ள கூட்டிட்டு போமா” என்று சொல்லி தன் அறைக்குள் சென்றார் சுந்தர்.


கையைப் பற்றி கார்த்தியை உள்ளே அழைத்து அமர வைத்தாள் ஆறு வயதான குட்டி கார்த்தி…


“எப்படி மா படிக்கறே.. சுந்தரோட குழந்தைக்கு சொல்லியாத் தரனும்.. நீயும் ச்கூல் ஃபர்ஸ்ட் அஹ் தான் இருப்பே..” என்று சொல்லிய வண்ணம் கார்த்தியை செல்லமாய் அள்ளிக் கொண்டார் கார்த்தி…


உடனே குட்டி கார்த்தி, “மார்க் ல என்ன இருக்கு கார்த்தி மாமா, எங்க அப்பா எப்பவும் சொல்லிட்டு இருப்பார், அவர் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுத்தாலும் உங்களுக்குள்ள இருந்த பல திறமைகள் அவருக்கு இல்லைன்னு..அதனால மார்க் மட்டும் போதாதுன்னு சொல்லிட்டு இருப்பார்”


“ஓ அப்படியா குட்டி…” அவளின் முதிர்ந்த பேச்சை ரசித்தபடியே, ”மேல சொல்லு, இன்னும் என்ன சொன்னார்”


“அதனால வெறும் மார்க் அஹ் வெச்சு யாரையும் எட போடக் கூடாதுன்னு சொல்லுவார்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் திறமை இருக்கும், அதை மதிக்க தெரிஞ்சிருக்கனும்.. நான் சொல்றது சரி தான கார்த்தி மாமா… ” என்று வினா எழுப்பி பதிலுக்காக காத்திறாமல் விளையாட சென்று விட்டாள் கார்த்தி..


சுந்தரின் வளர்ப்பு சரி தானெனினும் அதைப் புரிந்து கொண்ட குட்டி கார்த்தியை பெருமிதத்தோடுப் பார்த்த வண்ணமிருந்தார் கார்த்தி…


***முற்றும்***

நன்றி உயிரோசை

நன்றி,

நாணல்

Wednesday, 14 October 2009

கருணைக் கொலை

தன் சட்டைப்பையில் இருக்கும் அலைபேசி ஒலிக்க…

“ஹெல்லோ”

“ஹெல்லோ, கணேஷ்? “

“கணேஷ் தான் பேசுறேன், நீங்க?”

“கணேஷ், நான் கீதா.. உங்க கூட கல்லூரியில படிச்ச கீர்த்தியோட ஃப்ரெண்ட்“

கீதாவா... இப்ப எதுக்கு இவங்க நமக்கு கூப்பிட்டு இருக்காங்க... கீர்த்திக்கு ஏதாவது..... சே சே..அதெல்லாம் ஒன்னும் இருக்காது... அவ நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும்... சரி, கீதா என்ன தான் சொல்லவறாங்கன்னு கேப்போமே....

“சொல்லுங்க கீதா..”

“கணேஷ்...கீ ர் த் தி.... கீ ர் த் தி க் கு..”

“கீர்த்திக்கு.... ”

கீதா இப்படி தயங்கி தயங்கி பேசுவது கணேஷுக்குள் ஏதோ செய்ய..

“சொல்லுங்க கீதா, கீர்த்திக்கு என்ன ஆச்சு....”

“கீ ர் த் தி..................................… கீர்த்தியை ஒரு லா ரி மோ தி டு ச் சு… ”

இதைக் கேட்டவுடன் உலகமே இருட்டானதை போல் உணர்ந்தான் கணேஷ்... மேலே கீதா சொன்னது எதுவும் காதில் விழாது, கீர்த்தி இருக்கும் மருத்துவமனை விலாசத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, உயிரைப் பறி கொடுத்தவன் போல் தன் அலுவலகத்திலிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டான்....

”கீர்த்திக்கா...கீர்த்திக்கா இப்படி....ஏன் கடவுளே....என் கீர்த்திக்கு இந்த நிலைமை.......கீர்த்திக்கு ஒன்னும் ஆகாது....இல்லை இல்லை அவ நல்லா இருப்பா..நிச்சயம் நல்லா இருப்பா...எப்படியெல்லாம் வலியில துடிச்சுகிட்டிருக்காளோ.. பாவம்..கடவுளே அவளைக் காப்பாற்று...என் ஆயுசையும் அவளுக்கு கொடுத்திடு.. கீர்த்தி நல்லா இருக்கா...ஆமா கீர்த்தி இஸ் ஃபைன்....”

இப்படி மாறி மாறி கண்ணீருடன் புலம்பிய வண்ணம் சென்று கொண்டிருந்தான்....நான்கு ஆண்டுகளாய் மனதில் பூட்டி வைத்த காதலும் பாசமும் நேசமும் அவனின் அனுமதியில்லாமல், கண்ணீராய்ப் பெருகிக் கொண்டிருந்தது....

கணேஷிற்கு இப்பொழுது வேண்டியது தனிமையாதலால், அவனை தனியாய் விட்டுவிட்டு கணேஷ் யார் என்பதையும், மருத்துவமனையில் இவனின் வருகைக்காக "போகின்றேன்" என்று சொன்ன உயிரை நிறுத்தி வைத்திருக்கும் கீர்த்தி யார் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக 18ல் அனைவருக்கும் வரும் காதல் வியாதி இவர்களையும் விட்டுவைக்கவில்லை... கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று தான் கணேஷ் கீர்த்தனாவை முதன்முதலில் சந்தித்தான்...

எல்லோரும் பாராட்டும் அழகில்லையெனினும், ஒரு முறை பார்ப்பவர்கள், மீண்டும் பார்க்கத்தூண்டும் வசீகரம் நிறைந்த முகம்...சாந்தமான பார்வை...யாரிடமும் அதிகமாய் பேசிடாத அடக்கம்...ஆனால் அவளுடன் நட்பாகிவிட்டால், ”கீர்த்தி சொன்னா சரி தான்” என்று சொல்லும்வண்ணம் அவளின் அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவர்...வீட்டிற்கு ஒரே செல்ல பெண் என்பதாலும், பல சரியான முடிவுகளை தைரியமாய் எடுக்கும் புத்தி கூர்மையுடையவள் என்பதாலும், அப்பா அம்மாவிடமும் இவள் வைத்தது தான் எழுதபடாத சட்டம்... உண்மைக்கும் தன் மனசாட்சிக்கும் தலை வணங்குபவள்... தான் செய்தது தவறெனின் சிறு குழந்தையிடம் கூட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டாள்…தான் செய்வது சரியெனின் அதை யார் தடுத்தாலும் செய்வாள்..

கணேஷ், ஐந்து நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியாது பேசிக்கொண்டே இருப்பான், அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்... எளிதில் அனைவரிடமும் நட்பாகிவிடுவான்...”டே மச்சான், எனக்கு ஒரு உதவி” என யார் வந்தாலும் புன்னகை மாறாது உதவுவான்...அப்பாவிடம் பாசத்தைவிட ஒருபடி மேலான மரியாதையையும் அதைவிட ஒருபடி மேலான பயபக்தியும் கொண்டவன்...அம்மா தான் இவனின் முதல் தோழி.. ஒரு நாள் தவறாது பள்ளி, கல்லூரி என வெளியில் நடக்கும் அனைத்தையும் அம்மாவிடம் பகிர்ந்தால் தான் அன்று நாள் பூர்த்தியடைந்ததாய் உணர்வான்..அப்பா அம்மாவை சுற்றி தான் இவனின் உலகம் பொதுவாக இயங்கிக் கொண்டிருக்கும்.... வீட்டின் முதல் வாரிசென்பதால், அவர்களின் பிரதிநிதியாகவே கணேஷைப் பார்ப்பர்...கணேஷும் அதற்கேற்றார் போல் வயசுக்கு மீறிய முதிர்ச்சியுடையவன்..எதையும் யோசித்து சரியான முடிவெடுக்கும் மனப்பக்குவம் கொண்டவன்..

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்ற இயற்கையின் நியதியை உண்மையாக்குவதைப் போல், கலகலவென பேசிக்கொண்டிருக்கும் கணேஷிற்கு அமைதியாய் இருந்த கீர்த்தி மிகவும் வித்தியாசமாய்த் தென்பட்டாள்…அவனையறியாமல் கீர்த்தியினால் ஈர்க்கப்பட்டான்.. இவளை எப்படியாவது பேசவைக்க வேண்டுமென, அவளிடம் பேச்சு வளர்த்துக்கொண்டே இருந்தான்... ஆரம்பத்தில் கீர்த்தி சரியாய்ப் பேசாவிட்டாலும், சில நாளில் கணேஷின் பேச்சிற்கு ஈடுகொடுக்க ஆரம்பித்து விட்டாள்... இப்படி போட்டியாக ஆரம்பித்த இவர்களின் பேச்சு எப்பொழுது உண்மையான நட்பானதென்று இவர்களுக்கே தெரியாது.... கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும், நட்புக்கு ஒரு புது இலக்கணம் வகுத்து நட்பின் அடையாளமாய்த் திகழ்ந்தனர்...

கீர்த்திக்கு எதிர்காலத்தை பற்றி பெரியதாய் கனவு இருந்ததாக தெரியவில்லை...படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டுமென்பது வரை தான் அவளின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.. இதிலும் கணேஷ் இவளுக்கு எதிர் துருவமே... இறுதியாண்டு படிக்கும் போதே தன் எதிர்காலத்தை திட்டமிட்டிருந்தான்... அப்படி அவன் மனசுக்குள் இருந்த அந்த கனவு தொழிற்சாலை பற்றி கீர்த்தியிடம் பகிர்ந்துகொள்ள மறந்ததில்லை...

“கீர்த்தி, நான் ஆட்டோமொபைல்ஸ்ல சில்லறை வியாபாரம் செய்யலாமுனு இருக்கேன்... அப்பாகிட்டையும் கேட்டிருக்கேன்... யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு... ஒத்துக்கிட்டா நல்லா இருக்கும்...”

“கவலைப்படாதே கணேஷ், கண்டிப்பா அப்பா ஒத்துப்பாரு..உன் மேல தான் அவருக்கு அபார நம்பிக்கையாச்சே.. உன்னை நினைச்சா ஒரு பக்கம் பெருமையா இருக்கு கணேஷ்..இந்த சின்ன வயசுல இவ்வளவு தெளிவா உன் எதிர்காலத்தை திட்டமிடுற.. ஆனா, எனக்கும் என் அப்பாக்கும் இருக்கற பாசப் பிணைப்பு உனக்கும் உன் அப்பாக்கும் இல்லைன்னு நினைக்கும் போது, கஷ்டமா இருக்கு...ஏன் கணேஷ் உனக்கு மட்டும் இப்படி? என் வயசு தானே உனக்கு ஆகுது?”

“என்ன செய்ய கீர்த்தி, நீங்க எல்லாம் உங்க அப்பா கூட கை கோர்த்து விளையாடி, வேணுங்ரத அடம் பிடிச்சு வாங்கி பழகியிருக்கீங்க...எனக்கு அப்படி இல்லை... பொதுவா என் அப்பா கிட்ட, பிஸிணஸ் மட்டும் தான் பேசுவேன்... ஆனா அம்மா அப்படியில்லை, அவங்க தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... ”

“ஹ்ம்ம்ம் எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி...சரி நீ ஆட்டோமொபைல்ஸ்ல வியாபாரம் செய்யறதுக்கும் Bsc Computer Science படிக்கறதுக்கும் என்ன சம்மந்தம்... ”

“ஹ்ம்ம்ம் ஒரு வேளை உன்னை பார்க்கனும்ங்கறதுக்காக தான் நான் இங்கே சேர்ந்தேனோ என்னமோ......”

“இருக்கலாம் இருக்கலாம்” என்று புன்னகைத்தாள்..

“கீர்த்தி... ரொம்ப நன்றி... “

“ஹே என்ன இது , நமக்குள்ள எதுக்கு இந்த நன்றியெல்லாம், அப்படியென்ன நான் செஞ்சிட்டேன்...”

“இல்லை கீர்த்தி, என் அம்மாவுக்கு அப்புறம் நீ தான் என்னை உண்மையா நேசிக்கறே. அதுவுமில்லாம என்னை நீ மட்டும் தான் சரியா புரிஞ்சுக்குற.... எப்படி கீர்த்தி, இப்படி உன்னால மட்டும் என்னை சரியா புரிஞ்சுக்க முடியுது... உனக்கு எப்படின்னு தெரியலை, ஆனால் நீ வந்தப்புறம் என் வாழ்க்கையே திருப்பி போட்ட மாதிரி இருக்கு... உன்னை கண்டிப்பா என் வாழ்க்கையில இழக்க மாட்டேன்... சரி அதை விடு இப்ப உனக்கு என்ன வேண்டும்?”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நீ சந்தோஷமா இருந்தா அதுவே போறும் எனக்கு... ” என அவன் கேட்கும் ஒவ்வொரு முறையும் புன்னகையோடு பதிலளிப்பாள்…

ஆனால் ஏனோ வீட்டீற்கு சென்ற பின், அவனை நினைத்து அழுவாள்,”என்ன வேண்டும் என கேட்கும் போது, நீ தான் வேண்டும்” என ஏன் தன்னால் பதில் சொல்ல முடியவில்லையென்று….வெளியே நட்பாக பழகினாலும் நட்பினுள்ளே காதல் எப்பொழுது நுழைந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.... எதையும் கணேஷிடம் வெளிப்படையாக பேசும் கீர்த்தியினால் தன் மனதிலிருப்பதை மட்டுமேனோ சொல்ல முடியவில்லை… காதல் மீதும் காதலிப்போர் மீதும் மரியாதையில்லாத கணேஷிடம் தன் மனதை வெளிப்படுத்தி அவனின் நட்பை இழக்க விருப்பமில்லை..

இது ஏதும் தெரியாது கணேஷ், கீர்த்தியை மனதால் காதலித்துக் கொண்டிருந்தான்… ஆனால் காதலைப் பற்றிய தன் எண்ணத்தை மாற்ற விரும்பாது, கீர்த்தி என் தோழி மட்டுமே என தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தான்…

மகனின் போக்கை அறிந்த கணேஷின் அம்மா,

”என்னப்பா கொஞ்ச நாளாவே உன் நடவடிக்கை எதுவும் சரியில்லையே...”

”அதெல்லாம் ஒன்னுமில்லயே மா ..எப்பவும் போலத் தான் இருக்கேன்...”

“என்னமோ நீ சொல்ற, அதை நான் நம்பித்தானே ஆகனும்... சரி அதெல்லாம் விடு…புதுசா ஆரம்பிக்கப்போற ஆட்டோமொபைல்ஸ் வியாபாரம் பற்றி உன் கிட்ட ஏதோ பேசனும்னு உங்க அப்பா உன்னை கூப்பிட்டாரு…”

”சரி மா… நான் போய் பேசிக்கறேன்…” என்று சொல்லி விட்டு தன் அறையில், தன் கணினியில் இருக்கும் புது பிஸிணஸ் பற்றிய தகவல்களை எடுக்க சென்று கொண்டிருக்க, அலைபேசியில் கீர்த்தி அழைத்தாள்… ”சொல்லு கீர்த்தி….”

“ஹ்ம்ம் பெருசா ஒன்னுமில்லை கணேஷ், உன்கிட்ட பேசனும்னு தோணுச்சு...அதான்…வேலையா இருக்கியா என்ன?”

”வேலைன்னு இல்லை...அப்பா கூப்பிட்டாருன்னு போயிட்டு இருக்கேன்… அப்புறமா உனக்கு கூப்பிடட்டா…. “

“சரி கணேஷ்….பார்க்கலாம்….ஹே ஆட்டோமொபைல்ஸ் பற்றி தானே அப்பா கிட்ட பேசப்போற... ஆல் தி பெஸ்ட்.... “ என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்…

தன் அப்பாவிடம் சென்று புது பிஸிணஸ் பற்றி கலந்தாலோசித்தான்… அப்பாவிடம் பேசிய பின் தான் தன் தலையில் இருக்கும் பாரம் பற்றி நன்கு உணர்ந்தான்… கிட்டத்தட்ட ஐந்து லட்சம் உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோமொபைல்ஸில் சில்லறை வியாபாரமென்றால் சாமானியமில்லை என்று தெரிந்தது...இவ்வளவு பெரிய வியாபாரத்தை இறுதி ஆண்டு படிக்கும் நம்மிடம் ஒப்படைக்கிறார் என்றார், தன் மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான்... முதல் நாளிலிருந்தே கருத்துடன் இருந்தால் தான் இதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியுமென கணக்கிட்டுக் கொண்டிருந்தான்...

திடீரென கீர்த்தியின் நினைவு வர... ”கீர்த்தி ... ஆயுசுக்கும் உன் அன்புக்கு அடிமையா இருக்கனும்னு தான் எனக்கு ஆசை..ஆனால், அதுக்கு இந்த பிறவியில எனக்கு குடுப்பனை இல்லை போல....என் மேல அப்பா வெச்சிருக்குற நம்பிக்கையை நிஜமாக்கவே இந்தப் பிறவி போயிடும் போல… உன்னை இழக்க வேண்டிவந்தாலும் வரலாம்...அதுவுமில்லாம இப்ப காதல் கீதல்னு நான் யோசிச்சா என்னை நம்பி அப்பா கொடுக்கற பல லட்சங்கள் வீணாப்போயிடும்...இப்ப நான் எனக்குனு ஒரு நிலையை கொண்டு வரனும் அப்புறம் தான் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யோசிக்க முடியும்...அதுவரை உன்னை காக்க வைக்க எனக்கு விருப்பமில்லை... ” இப்படி எவ்வளவு நேரம் தனக்கு தானே பேசிக் கொண்டானோ தெரியாது.. ஆனால் இனி கீர்த்தியை விட்டு விலகிவிடுவது தான் சரி என முடிவு செய்தான்…

முடிவு செய்தானே தவிற, அவளை நேரில் கண்ட பின்னர் அவனின் முடிவு தவிடு பொடி ஆனது தான் நிஜம்…இந்நிலையில் கீர்த்திக்கும் கணேஷிற்கு தெரியாமல் அவனை காதலனாய் பார்ப்பது, மனசுக்குள் ஏதோ செய்ய, இனியும் குற்ற உணர்வோடு இருக்க முடியாது என தன் காதலை கணேஷிற்கு சொல்லி விட வேண்டும் என தீர்மானித்திருந்தாள்….மனதில் காதலை வைத்துக் கொண்டு நட்போடு பழக அவளின் மனசாட்சி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது…எது எப்படியோ தன்னிடம் உண்மையாக இருக்கும் கணேஷிற்கு தானும் உண்மையாக இருக்க வேண்டும்…என்ன ஆனாலும் சரி அவனிடம் சொல்லி விட வேண்டுமென முடிவு செய்து, அவனிடம் தன் காதலை சொல்லி விட்டாள்….

“கணேஷ், ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் மறைச்சிட்டேன்... என்னை மன்னிச்சிடு... “

“ஹே என்ன கீர்த்தி, நமக்குள்ள மன்னிப்பு, நன்றில்லாம் வரக்கூடாதுன்னு நீ தான் சொல்லுவே... இப்ப நீயே... சரி அப்படி என்ன மறைச்சே சொல்லு....”

மிகுந்த தயக்கத்துடன்... “கணேஷ்... நீ எனக்கு நண்பன் மட்டுமில்லை...அதையும் தாண்டி... இத்தனை நாள் உன் கிட்ட சொல்லாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடு… உனக்கு நல்ல தோழியா மட்டும் இருக்க தான் நானும் முயற்சி செய்தேன்…ஆனால் என்னால் முடியலை… நட்புக்குள் காதல் எப்பொழுது நுழைந்தது என்று எனக்கு தெரியலை…உனக்கு காதல்னா பிடிக்காது தெரியும்..அதான் உன் கிட்ட சொல்லாம என் மனசுலையே பூட்டிக்கிட்டேன்.. ஆனா இப்ப உன் கிட்ட சொல்லாம இருக்கவும் என் மனசாட்சி இடம் கொடுக்கலை…அதான் சொல்லிட்டேன்…என்னை மன்னிச்சிடு கணேஷ்.. ” என்ற வார்தைகளும், கண்களில் கண்ணீரும் அவளின் காதலை பிரதிபலித்துக் கொண்டிருந்தது...

இந்த கீர்த்தி அவனுக்கு புதியதாய்த் தென்பட்டாள்… அவள் தன் காதலை சொன்னவுடன், தன் அப்பா அம்மா தான் அவனின் கண் முன் வந்தார்கள்… அப்பா அம்மாவா இல்லை கீர்த்தியா என மாறி மாறி யோசிக்கும் போது, அவன் முதலில் எடுத்த முடிவு தான் சரியென பட்டது… ஆனால் அதே சமயம், கீர்த்தியை நேரில் பார்த்துவிட்டால், அவனால் அவளை விட்டு விலக முடியவில்லை… சரி நம்ம கீர்த்தி தானே..சொன்னா புரிஞ்சிக்குவா…நம்ம வாழ்க்கைக்கு இந்த காதலெல்லாம் ஒத்து வராதுனு சொல்லிப் புரியவைப்போம் என்று…

“கீர்த்தி… எந்த விதத்துதலையாவது நான் உன்னை தொந்தரவு பண்ணி இருந்தா, என்னை மன்னிச்சிடு... அதே சமயம் உன்னோட உணர்வுகளை நான் மதிக்கறேன்... அதுக்காக என்னால உன்னை காதலிக்க முடியாது... என் வாழ்க்கைல காதலுக்கு இடமே இல்லை...என்னை புரிஞ்சுக்கோ... எனக்கு உன் நட்பு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தான் தெரியும்... அதுக்காக உன்னை கஷ்டப்படுத்த நான் விரும்பலை...உன்னால எனக்கு நட்பா மட்டும் இருக்க முடியும்னா இரு... இல்லை இதுவே நாம பேசறது கடைசியா இருக்கட்டும்...”

கீர்த்தியாலும் கணேஷிடம் பேசாமல் இருக்க முடியாது..எனவே காதலை மறந்து நட்பாக இருக்க முயற்சிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டாள்... உண்மையில் அவளால் காதலை மறக்கமுடியவில்லை...இது நாள் வரை கீர்த்தியின் அன்பிற்கு அடிமையாயிருந்த கணேஷிற்கு, இனியும் கீர்த்தியை ஊக்குவிக்க விருப்பமில்லை… அப்படி கீர்த்தியின் அன்பை ஏற்றுக்கொண்டால் அவள் காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும், அது நடக்காது என தெரிந்த பின்னும் அவளிடம் பேசிக்கொண்டிருந்தால் அவளுக்கென்று யோசிக்காது, தன் வாழ்க்கையை எங்கே பாழ் செய்து கொள்வாளோ என்று பயந்து, இனி அவளின் எதிர் கால வாழ்க்கைக்கு நாம் தடையாயிருக்க கூடாது என அவளை மெதுவாய் நிராகரிக்க ஆரம்பித்தான்... இதை ஏதும் புரியாத கீர்த்தி, கணேஷுக்கும் தனக்குமிடையில் ஒரு திரை வளர்ந்து கொண்டிருப்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.. அதை சரி செய்ய தன்னால் முடிந்ததை செய்துப் பார்த்தாள்... எல்லாம் வீணாய்ப் போனது தான் மிச்சம்...

யாருக்காகவும் நிற்காத காலம் ஓடிக் கொண்டேயிருந்தது… கல்லூரி முடிந்தவுடன் முழு நேரமாக தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்... கீர்த்தியின் நினைப்பு வரும் போதெல்லாம், இன்னும் இன்னுமென உழைக்க ஆரம்பித்தான்...தொழிலிலும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருந்தான்.. கீர்த்தியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டாள்… புது மனிதர்கள்.. புது இடம்… என எல்லாம் புதுசாக இருக்க, முடிந்தவரை வேலையில் நினைப்பை செலுத்தி கணேஷின் பிரிவை ஈடு செய்ய முயற்சித்தாள்… உறவின் அருமை பிரிவில் தெரியும் என்பது போல், முன்பை விட கணேஷின் மீது கொண்ட பாசம் இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது... கணேஷின் நிலையோ, கிட்டத்தட்ட இயந்திரதனமாய் மாறியிருந்தது... கீர்த்தி அவ்வப்பொழுது தொடர்பு கொண்டாலும் அவளை தவிர்த்துக்கொண்டேயிருந்தான்... வருடங்கள் ஓடி பல மாற்றங்களை கண்டிருந்தாலும் கீர்த்தியின் காதலிலும் மாற்றமில்லை, கணேஷின் கொள்கையிலும் மாற்றமில்லை...

இது ஒரு புறமிருக்க கீர்த்தியின் தாய் தந்தை அவளுக்கு திருமணம் செய்துவைக்க கீர்த்தியின் சம்மதத்தை எதிர்பார்த்திருந்தனர்.. அவள் காதலை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவளின் பெற்றோர் பரந்த மனப்பாங்கும், அவள் முடிவின் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்... கீர்த்திக்கோ கணேஷைத் தவிர வேறு யாரையும் மணம் செய்ய விருப்பமில்லை... தன் ஒருதலைக் காதலைப் பற்றி பெற்றோரிடம் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்தவும் மனமில்லை…இது பற்றி கணேஷிடம் கேட்டாலோ,”நல்லது, நீ உன் பெற்றோர் விருப்பப்படி நடந்துகொள்... அன்று சொன்னது தான் இன்றும், என் வாழ்வில் காதலுக்கு இடமில்லை..எனக்காக நீ காத்திருப்பதில் அர்த்தமில்லை..உன் வாழ்க்கைய நீயே பார்த்துக்கோ ” என்று சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டேயிருந்தான்... தொழிலில் பல சிக்கல்களைப் பார்த்துப்பார்த்து தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மறந்தே போயிருந்தான் அவன்...

தனக்கேற்ற துணையைக் கூட சரியாகத் தேர்வு செய்யத் தெரியாத அவனை, அவன் விருப்பபடி விட்டு விலகவும் முடியவில்லை… மீறி அவனை தொந்தரவு செய்யவும் மனமில்லை… தன் காதலால் தான், இனி என்றும் பெறமுடியாத நல்ல நட்பை இழந்துவிட்டோமென்று நட்புக்காகவும் பலமுறை ஏங்கிக்கொண்டிருந்தாள்.. அப்படியே பெற்றோருக்காக இன்று திருமணம் செய்து கொண்டாலும், வாழ்நாள் முழுக்க போலித்தனமான வாழ்க்கையே வாழ வேண்டிவருமென்பதால், அதிலும் மனம் செல்லவில்லை... சரி தன் விதி எதுவோ அது நடக்கட்டும் என்று அமைதியாயிருக்கலாம் என்றால், தன்னை விட வேறு யாராலும் கணேஷை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாதெனும் நினைப்பு, அவனுக்காக இன்னும் காத்திருக்கத் தூண்டுகிறது… ஆனால் அவன் தன்னை விரும்புவதை எப்படி இந்த உலகிற்கும் அவனுக்கும் கண்டுணர்த்துவது என தெரியாது வியந்திருந்தாள்...

இப்படி தன் விருப்பமும் நிறைவேறாது, கணேஷ் விருப்பபடி தன் வாழ்க்கையை வேறு ஒருவருடன் அமைத்துக்கொள்ளவும் முடியாது, பெற்றோரின் ஒரே கனவான இவளின் திருமணத்தை, அவர்கள் விருப்பபடி செய்துகொள்ளவும் மனமில்லாது, இனி என்றும் கிடைக்காத ஒரு நல்ல நட்பையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாது யோசித்துக்கொண்டே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த விபத்தும் நடந்திருக்க வேண்டும்...

இன்று, தன் காதலை மௌனமாக வெளிப்படுத்திக்கொண்டு கீர்த்தியின் அருகில் கணேஷ்... இந்த நொடிக்காகத் தான் தன் வாழ்நாள் இருந்த வரை காத்திருந்தாள்...கணேஷைப் பார்த்ததும் கண்களின் ஓரம் தேங்கியிருந்த ஒற்றைத்துளிக் கண்ணீரும், அவனின் வருகைக்காக காத்திருந்த உயிரும் தன் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதென அவள் உடலை விட்டு பிரிந்து சென்றது...

காதலின் பிரிவாலும், பெற்றோரின் பாசத்தாலும், பொய்யான வாழ்க்கையை வாழ விரும்பாமலும், இழந்த நட்பை திரும்ப பெறமுடியாமலும், தற்கொலை செய்து கொண்டு சாகும் அளவு கோழையாயிருக்க விருப்பமில்லாமல் தவித்த கீர்த்தியை கருணைக் கொலை செய்வதென உண்மை முடிவு செய்துவிட்டது போல...உண்மையான உறவுகளை ஒருவன் இறுதி ஊர்வலத்தில் தான் பார்க்க முடியுமென்பதை நிஜமாக்கும் விதத்தில் கணேஷ் கீர்த்தியின் இறுதி ஊர்வலத்தில்....

** முற்றும் **
பி.கு: இவ்வளவு பெரிய்ய்யயய கதையை பொறுமையா படிச்சதுக்கு நன்றி... இது "டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி"க்காக அனுப்பிய கதை....
நன்றி,
நாணல்

Saturday, 6 June 2009

பேசா மொழி - 3

அடைக்கப்பட்ட
வாசலையும் தட்டாமல்
உள்ளே நுழைவது
தான் காதல்

இரவெல்லாம் கண் விழித்து கண்ணைக் காக்கும் இமையைப் போல் அகிலனையே பார்த்து , அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனாலோ தெரியவில்லை, விடிந்தும், தன் வீட்டில் இருந்தும் மொழிக்கு ஏனோ அகிலனின் மனைவியாய் தான் வாழ்ந்த ஒருவித திருப்தி.. தனக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்க கூட முடியாமல் கனவு உலகத்தில் இருந்தாள்.. தன் அம்மா வருவதை கூட கவனிக்காமல் தனக்குள்ளேயே சிரித்து அகிலனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்...

மொழி... அப்படி என்ன மா யோசிக்கற...

ஒன்னும் இல்லை மா.. ரெண்டு நாளா சரியா தூங்கலை இல்லையா
..அதான் ..

ஓ ஓ ... என் கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ...

பொய்யா அப்படி எல்லாம் இல்லை மா.. நிஜமா சொல்றேன்...

மொழி, நான் உன் அம்மா... நீ ததகா பிதகானு பேசின மழலை மொழியே புரிஞ்சிகிட்டவ நான்.. சரி சொல்லு யாரு அந்த பையன்?

இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு நின்றாள்... இருந்தும் ஒருவாரியாக சமாளித்துக் கொண்டு ...

என்னமா ஆச்சு உங்களுக்கு, சம்மந்தமே இல்லாம கேள்வி கேக்கறீங்க..

நல்லாவே நடிக்கறமா நீ..
கொஞ்ச நாளா உன்னை நானும் கவனிச்சிட்டு தான் வரேன் ... சொல்லு... தாத்தா பாட்டியும் உன் கல்யாணத்தை பத்தி பேச தான் எங்களை ஊருக்கு வர சொன்னாங்க... சொல்லு மா உன் மனசுல யாராவது இருந்த சொல்லு...

மா , என்ன மா, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே , நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை மா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்ப உன் தாத்தா ஒரு இடம் சொன்னாரு , ஜாதகமும் பொருந்தி இருக்கு , குடும்பமும் நல்ல குடும்பம் , என்ன சொல்ற நீ..

தன் மனதில் யாரும் இல்லையென தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும், இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் ஏனோ அகிலனின் முகம் தான் மனதில் வந்தது ... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ... கலங்கிய கண்களுடன் தன் தாயை நோக்கினாள்..

அப்படி வா என் செல்ல மகளே... இந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம்.. என்று கண்களை சிமிட்டினாள் மொழியின் அம்மா ...

மா கண்ணீரா , அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஏதோ தூசி விழுந்திருக்கும் போல..

இப்படியே சமாளித்து வந்தாலும் , ஒரு கட்டத்துக்கு மேல் மொழியால் அகிலனை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை... முதலில் அகிலனை சந்தித்து , அகிலன் தன்னிடம் அவனது விருப்பத்தை சொன்னது, டூரில் நடந்தது என எல்லாத்தையும் சொல்லி , என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறேன் மா என்று அழுதுவிட்டாள்..

ஹே மொழி, என்னது இது சின்ன குழந்தை மாதிரி... உனக்கு அவரை பிடிச்சிருக்குன்னா என் கிட்ட சொல்றதுக்கு என்ன மா ...

இல்லை மா, என்னை எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்தீங்க ..இப்ப நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்ட தப்பு இல்லையா..

அட அசடே...
இதுல என்ன டா தப்பு இருக்கு.. படிக்கற வயசுல படிக்காம காதல்னு சுத்தின எல்லா அப்பா அம்மாவுக்கும் தான் கோவம் வரும்.. இப்ப நீ பெரிய பொண்ணாயிட்ட ... உனக்கும் நல்லது கெட்டது எதுன்னு தெரியும் இல்லையா..

ஹ்ம்ம் ஆமா..

அப்புறம் ஏன் மா இப்படி கொழப்பிக்கற ... எப்படியும் யாரோ ஒருத்தர் சொல்ற பையனை நல்லவனா நல்ல குடும்பம்னு பார்த்து தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்.. இப்படி மூணாவது மனிஷங்க சொல்ற பையனை பத்தி யோசிக்கும் பொது, என் பொண்ணு நீ, நீ சொல்ற பையனை பத்தி யோசிக்க மாட்டோமா... நல்லப் பொண்ணு மா நீ..

அம்மா...

ஹ்ம்ம் நிஜமா தான்... அகிலனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு... பார்த்து பேசிடலாம்..

மா..எப்படி மா அவரை மட்டும் தனியா நம்ம வீட்டுக்கு கூப்பிடறது...

ஆமா இதையும் என் கிட்டயே கேளு.. அடுத்த வாரம் உனக்கு பிறந்த நாள் வருது இல்லையா , அதுக்கு உன் நண்பர்கள் எல்லாரையும் வீட்டுக்கு அழை, அகிலன் உட்பட... அவரைப் பார்த்துட்டு அப்புறம் நாங்க எங்க முடிவை சொல்றோம்... சரியா...

முகத்தில் 100 வாட்ஸ் எரிந்தார் போல் பிரகாசிக்க வெட்கத்துடன் எழுந்து ஓடினாள்..

ஹ்ம்ம் இந்த காலத்து பசங்க உண்மையிலேயே நல்ல பசங்க தான் ... சுய நலமா யோசிக்காம எவ்வளவு பெருந்தன்மையா இருக்காங்க ... "வாழ்க வளமுடன்" என்று மனதார வாழ்த்தினாள் ..

அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்று தன் நண்பர்களையும் அகிலனையும் தன் பிறந்த நாளிற்காக வீட்டிற்கு அழைத்தாள்...

அகிலன் முதலில் வர மறுத்தாலும் , மொழியின் பிறந்த நாளன்று முதல் ஆளாக மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான்.. ஒருவர் பின் ஒருவராக வர, பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடந்தேறியது... அகிலனை கவனிக்கவும் தவறவில்லை மொழியின் தாய் தந்தை .... அனைவரும் மொழிக்கு பரிசு கொடுத்த பின் அகிலன் மட்டும் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்... இதை உணர்ந்த மொழியின் தந்தை , என்ன அகிலன் நீங்க பரிசு எதுவும் கொண்டு வரலியா ...

இல்லைங்க , என்ன பரிசு கொடுக்கறதுன்னு தெரியலை அதான்...

சரியா போச்சு போ.. சரி உன் வீடு எங்கபா?

பெரம்பூர் சார்..

அப்ப தினமும் ஆபிஸ் பஸ்ல வரியாபா...

ஹ்ம்ம் ஆமாங்க..

கஷ்டமா இல்லையா..இங்கயே வீடு எடுத்து தங்கிடலாம் இல்லை...

தங்கலாம் , ஆனா.. தினம் இரவாவது அம்மா கையால சாப்பிடனும்... அந்த ஒரு வேலை சாப்பட்டுக்கு தான் மணி எத்தனை ஆனாலும் வீட்டுக்கு போய்டுவேன்..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ....

இப்படி இடையிடையே அகிலனிடம் நேர்காணலையும் முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தினர்.. விடைப்பெற்றுக் கொள்ளும் போது,

மொழி, உங்களுக்கு பரிசு கொடுக்கணும்னு எனக்கும் ஆசை தான்..ஆனா இப்ப நான் கொடுத்தேன்னா, அதுல என் காதலும் தெரியவரும், அதான் கொடுக்கலை .. மன்னிச்சிடுங்க... by the way, once again, my hearty wishes... என்று சொல்லி பதிலையும் எதிர்பாராது கண்ணியமாக சென்றுவிட்டான்..

மொழியின் வீட்டிலோ அகிலனுக்கு மார்க் கூடிக்கொண்டே போனது .. ஒரு வாரம் தீர விசாரித்த பின்னர்...
அகிலனின் பெற்றோரிடம் பேசுவது என முடிவு செய்து, பேசி அவர்களுக்கும் மொழியை பிடித்து விட .. அகிலனை அழைத்து உன் முடிவு என்னனு சொல்லுப்பா என்று அகிலனின் பெற்றோர் கேட்டனர்...

ஹ்ம்ம்
எனக்கு சம்மதம் ஆனா பொண்ணு வீட்டுல முக்கியமா மொழிக்கு சம்மதமா?

நல்ல கேள்வி.. பெரியவங்க நாங்க பேசிட்டோம், மொழி உன் ஆபிஸ் தானே , நீயே பேசி தெரிஞ்சிக்கோ..

அப்பா அது நல்லா இருக்காது பா...

இதுல என்ன தம்பி இருக்கு... நீயே பேசிடு... என்று சொல்லி மொழியின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு மொழியிடம் அகிலனை பேச வைத்தார் ..

மொழி, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. நம்ம வீட்டு பெரியவங்களுக்காக நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம்... உங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம்னா மட்டும் சொல்லுங்க ...

சம்மதம் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க..

இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன் மொழி... அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன், உங்களை காயப்படுத்தற எதையும் நான் செய்ய விரும்பமாட்டேன்...


சரி, நான் இல்லாத வாழ்கையை உங்களால நினைச்சு பார்க்க முடியுதா..

ஹ்ம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தான்...ஆனா அது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கறேன்...

என்னை பார்த்துப்பீங்களா ..

அதான் சொன்னேனே , என் பிரச்சனையை
நான் பார்த்துக்கறேன்...

அட மண்டு (மெல்லிய குரலில்) , நான் அதை கேக்கலை, "
என்னை பார்த்துப்பீங்களா"னு கேட்டேன்..

என்ன என்ன திரும்ப சொல்லு...

எத்தனை தடவை சொல்றது...சொல்ல முடியாது போடா..

மொழி... இது கனவா நிஜமா.. ஐயோ ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி... ரொம்ப ரொம்ப நன்றி... என்று சொல்லி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்..

மொழி, மொழி ஒரே ஒரு முறை திருப்பி சொல்லு...

ஹ்ம்ம் ஹ்ம்ம் "என்னை உன் கண்ணுக்குள் வைச்சு ஆயுசுக்கும் பத்திரமா பார்த்துக்குவியாடா லூசு"........

- முற்றும்


பேசா மொழி - 1

பேசா மொழி - 2

பேசா மொழி - 2

தனிமையும் மௌனமும்
பேசிக்கொள்ளும் நேரம்
மனதின் பாரம்
கூடிக் கொண்டே போகும்...


அகிலனின் கவிதையை படித்ததாலோ இல்லை , நண்பர்களின் பிரிவோ தெரியவில்லை மனம் கனமாகிக் கொண்டிருந்தது...

அவளின் கைபேசி ஒலிக்க எடுத்து பேசினாள்...

ஹெலோ, சொல்லுங்க அப்பா...

என்னமா இன்னும் வீட்டுக்கு புறப்படலியா... உன்னை ரயில் நிலையத்தில் விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போகலாம்னு இருக்கோம்...

என்னப்பா என்ன திடீர்னு .. யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா?

அப்படி எல்லாம் இல்லைமா.. சும்மா தான் நீயும் வீட்டுல இல்லை, அதான் தாத்தா பாட்டியை பார்த்துட்டு வரலாம்னு...

ஓ சரி சரி... நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்பா... கொஞ்சம் வேலை இருக்கு , முடிச்சிட்டு கிளம்பறேன்... வீட்டுல பேசிக்கலாம்... என்று தொடர்பை துண்டித்தாள்...

அட இது என்ன புது கதை.. இப்ப நம்ம வீட்டுலையும் இருக்க முடியாது... சரி தாத்தா பாட்டியை பார்க்கபோலாம்னா , டூர்க்கு ஏன் போகலைன்னு கேட்டா என்ன சொல்றது... அம்மா, என் கண்ணசைவ வெச்சியே நான் என்ன நினைக்கறேன்னு கண்டுபிடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களே... அப்ப வேற வழியே இல்லையா டூர்க்கு போயிடலாமா... ஹ்ம் அது தான் சரி...அகிலனுக்காக நாம ஏன் போகாம இருக்கும்.... நம்ம friends கூட நாம போகப் போறோம்.. இதுல அகிலன் யாரு.. சரி கிளம்பலாம் , இப்ப வீட்டுக்கு போனா தான் , ரயில் பிடிக்க வசதியா இருக்கும்...

உடனே மறைமலைநகரில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்கிறாள்....
எல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்குள் மணி 5 ஆகி விட்டது... இனி எக்மோர் செல்ல முடியாது அதனால் என்ன செய்யலாம் என யோசிக்கையில், அவளின் அப்பா, எப்படியும் செங்கல்பட்டு வழியா தானே ரயில் போகும், அங்க போயி ஏறிடு... எந்த கோச் தெரியுமா?

S2 பா...

அப்ப சரி வாமா, போகலாம்...

சரி, போயிட்டு வறேன் மா...

சரி மா பத்திரமா போயிட்டு பத்திரமா வா...

சரி மா என்று தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டாள்...

ஏன் மா, உன் friendsகு கால் பண்ணி, செங்கல்பட்டுல ஏறிக்கறேன்னு, உனக்காக காத்திருக்க போறாங்க....

இல்லை அப்பா, இருக்கட்டும்,, என்னை தேடட்டும்.. அவங்களுக்கு சொல்லாம நான் அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு இருக்கேன்...

ஹ்ம்ம்ம் எல்லாம் விளையாட்டு தான் மா உனக்கு...

மணி 5.45 ஆனது... 6.35 கு ரயில் வருவதாக ஒலிக்கப் பட்டது...

சரி மா, சாப்பிட ஏதாவது வாங்கி வரவா...

ஒன்னும் வேண்டாம் பா.. பசி இல்லை...

ஒரு வழியாக சொன்ன நேரத்திற்கு ரயில் வந்தது... மொழியை இங்கு யாரும் எதிர் பார்க்காததால் , வெளியே யாரும் வரவில்லை...

சரி பா..போயிட்டு வறேன், தாத்தா பாட்டியை கேட்டதா சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் பத்திரமா போயிட்டு வா மா...

S2 வில் தன் பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டு ரயிலில் ஏறினாள்... வாசலில் இருந்து கொண்டு தன் தந்தையை வழி அனுப்பி விட்டு, தன் நண்பர்களை தேடி உள்ளே சென்றாள்...

முதலில் அவளின் கண்ணில் பட்டது அகிலன் தான்...
அகிலனுக்கோ எதிர்பாரா நேரத்தில் மொழியைப் பார்த்தது ஒரே குதூகலம்... அவனின் குதூகலம் மொழிக்கும் தொற்றிக்கொண்டது,.. இருந்தும் அதை வெளியில் காட்டக் கூடாது என தீர்மானமாக இருந்ததால்... ஒருவாரு சமாளித்தாள்...

ஹெய் மொழி.. வாங்க வாங்க .. அதிசயம்...

அதற்குள் செல்வி அந்த பக்கம் வர, ஹெய் மொழி வாங்க அம்மணி ... என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள்...

மொழி வந்ததில் அவளின் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரே சந்தோசம் ..
இரண்டு நாள் புது புது இடங்களைப் பார்த்ததில் அனைவரும் குதூகலத்தில் இருந்தனர். மொழிக்கு மட்டுமேனோ சகஜமாக இருக்க முடியவில்லை... எங்கு திரும்பினாலும் அகிலன் தான் அவளின் கண்ணில் பட்டான்... அகிலன் வந்திருந்த அனைத்து மக்களிடமும் நட்பாகி இருந்தான்.. மொழிக்கு இது வியப்பாகவே இருந்தது..எப்படி இவனால் மட்டும் அனைவரிடமும் நன்றாக பேச முடிகிறதென்று.. காதலில் மட்டும் தன் தனக்கு நேரெதிர் என்றால், இதிலுமா என்று, சிரித்த முகத்துடன் இருக்கும் அகிலனை தன்னை அறியாமல் பல நேரம் பார்த்து ரசித்திருக்கிறாள். இதை மற்றவர்கள் கவனித்தார்களோ தெரியாது ஆனால் அகிலன் கவனிக்க தவறியதில்லை..

சரி பேசலாம் என்று அருகில் சென்றாலோ , இவன் வருவதை அறிந்த மொழியின் மனம் பதபதைக்க ஆரம்பித்துவிடுகிறது... இதனால் பூத்திருந்த முகம் வாடிவிடுகிறது.. இதை புரிந்த அகிலன் மொழியிருக்கும் பக்கம் செல்லாமல் தவிர்த்து வந்தான்.. இருந்தும் அங்கும் இங்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தவறியதில்லை.. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இரண்டுநாட்களும் சென்று விட்டது..

சென்னைக்கு திரும்புவதற்காக , ரயிலில் அவரவர் இடங்களில் சென்று அமர்ந்து விட்டனர். அங்கங்கு அவரவர்க்கு விருப்பமான கோச்சில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

மொழி மற்றும் அவள் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அகிலனும் வந்து கூட்டத்தில் ஐக்கியமானான்... எதிர்பாரா நேரத்தில் அகிலன் அங்கு வந்தது மொழிக்கு சங்கடமாக இருந்தாலும், அவளை அறியாமல் அவனின் வரவை ரசித்தாள்.. நண்பர்களுக்கும் இந்த கண்ணாமூச்சி பற்றி தெரியாது ஆதலால், அகிலனின் வரவை வேண்டாமென்று தடுக்கவும் இயலவில்லை..

பாட்டுக்கு பாட்டில ஆரம்பித்து , இன்னும் பல விளையாட்டுகளை விளையாடிய வண்ணம் ஓடும் ரயிலில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர் ..

சரி, கொஞ்ச நேரம் விளையாட்ட ஓரம்கட்டிடு உருப்படியா ஏதாவது பேசுவோம் என்று ஆரம்பித்தான் சத்யா ..

ஹ்ம்ம் நைஸ் .... செல்வி, நீங்க சொல்லுங்க உங்களை வருங்கால புருஷன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க .. என்றான் அகிலன்...

பெருசா ஒன்னும் கனவெல்லாம் இல்லை.. அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு யாரை கை காட்டுறாங்களோ அவங்கள பண்ணிக்க வேண்டியது தான்...

அஹ அஹ ... மழுப்பாதீங்க செல்வி... சும்மா சொல்லுங்க ..

நிஜமா இல்லை அகிலன், இருந்தா உங்க கிட்ட சொல்லாமலா... ஹே கதிர் , நீ சொல்லு..

என்ன செல்வி , கதிர் பாவம் காதலிய ரெண்டு நாளா பார்க்கலைன்னு வருத்தமா இருக்கான்.. அவனை போய் ...

டேய் சத்யா , என்னை வம்பு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா... சரி நீ சொல்லு , உன் கனவு தேவதை எப்படி இருக்கணும்னு...

ஹே கனவுன்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது... கனவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன்.. கட்டினா அவளைத் தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்டா..

டேய் , இந்த கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.. இந்த நினைத்தேன் வந்தாய் படமெல்லாம் இங்க ஓட்டாத ..

அப்படி போடு கவி... ஆமா இங்க ரெண்டு ஜீவன் ரொம்ப நேரம் அமைதியாவே இருக்கு ... சரி மொழி நீ சொல்லு , அப்புறம் அகிலன் நீங்க சொல்லுங்க ...

கதிர் , நான் அமைதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா... என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே , புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை ...

அதெல்லாம் ஒத்துக்கப்படாது... சொல்லியே ஆகணும் ... பரவாயில்லை சொல்லு மொழி, நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்...

ஹ்ம்ம் என்ன எல்லா பொண்ணும் எதிர்பார்க்கிறா மாதிரி தான், என் உணர்வுகளை மதிக்கணும் , எனக்கு புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா இருக்கனும் ...

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, அகிலன் நீங்க சொல்லுங்க ..

எனக்கு கனவுல்லாம் பெருசா இல்லைங்க கதிர்.. ஒன்னே ஒன்னு தான் முக்கியம், என் அம்மாவை தன் அம்மாவா பார்த்துக்கணும் அவ்வளவு தான்.. அப்படி ஒருத்தி கிடைச்சா அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன் என்று சொல்லி மொழியைப் பார்த்தான்.. உடனே தலை குனிந்து விட்டாள் மொழி..

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி எல்லாரோட கனவும் நனவாகட்டும்... சரி இதுல காதல் வயப்பட்டிருக்கவங்க யார் யார்லாம்னு கை தூக்குங்க பார்க்கலாம் என்று தன் கையை உயர்த்திய படி கதிர் கேட்க, சிலர் மட்டும் கை தூக்கினர்(அகிலன் உட்பட)...

சரி , இருதலை காதல் .....

சொல்லி முடிக்கும் முன் வேகமாய் கையை தூக்கினான் அகிலன்...

அப்படி போடுங்க அகிலன், யாரு அவங்க...

இப்ப இல்லை சத்யா , சீக்கிரம் நானே சொல்றேன் ...

மொழிக்கு ஒன்றும் புரியவில்லை.. தன்னை வைத்து தான் அகிலன் சொன்னானா என்று குழம்பிக் கொண்டிருந்தாள்..

இப்படியே பேசிக்கொண்டிருந்ததனால், நேரம் போனதே தெரியவில்லை.. 12 மணிக்கு மேலாகி விட்டது.. அவரவர் பெர்த்தில் படுக்க , அகிலன் மட்டும் வேறுவொரு கோச்சிற்கு செல்ல வேண்டியிருந்தது .. ஆனால் கதவு அடைக்க பட்டிருந்ததால் , மொழியின் கோச்சிலேயே படுக்க வேண்டி இருந்தது...

அகிலன், நீங்க இங்க படுத்துகோங்க நானும் மொழியும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறோம், எப்படியும் இன்னும் 5 மணி நேரத்துல மொழி செங்கல்பட்டுல இறங்கிடுவா என்று சொல்லி , மொழியும் கவியும் சைட் பெர்த்தில் அமாந்து பேசிக் கொண்டே இருந்தனர்.. சிறிது நேரம் பேசிக் கொண்டே கவியும் உறங்கிவிட்டாள்....மொழிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.. எதிரில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அகிலனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

சாளரத்தின் வழிவரும் சாரல்
மூக்கின் நுனி தொட்டுசெல்லும் மண்வாசனை
காலத்தோடு போட்டிபோட்டு வேகமாய் ஓடும் ரயில்
மெதுவாய் எனை நலம் விசாரிக்கும் தென்றல்
கூட்டத்தில் வீசும் மல்லிகையின் வாசம்
இருப்போரிருந்தும் யாருமில்லா என் தனிமை
எனையறியாமல் என் கைகள் உன்பெயரை எழுதிடுதே ....

-
மொழி

- மொழி கவிதையாகலாம்