Monday 12 December 2011

இணையான துணை

தீட்டிய திட்டப்பணி
நேரத்தே முடிவுற‌
இரவு பகல் பாராது
தனிப்பட்ட வாழ்க்கை மறந்து
எமக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
உழைக்கும் கன்னியர்களும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


உழைப்பை அங்கீகரிக்கும்
விருதுகளுக்கான‌
பட்டியலை வாசிக்கையில்
எம் எண்ணிக்கைக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
நிலைக்கும் பெண்டீரும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


எம்மில் அவர்கள் என்னக்குறைவென
எம் வாழ்க்கைத் துணைவியாக
எமக்காக வாழவிருக்கும்
அவர்களிடமே தட்சனை கேட்கிறீரே
இது
எம்மை விலை பேசுவதற்கு சமமன்றோ!


நன்றி,
நாணல்

Thursday 8 December 2011

நடப்பவை நல்லதுக்கே..

பெரும்பாலும் நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள நமக்கு நாமே சொல்லிக்கொள்வது “எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்க வேண்டியது தான்”. நடக்கவிருக்கும் நல்லது என்னவென்று ஆராயாமல் நடந்தவையை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதே சில சமயங்களில் சரியாய்ப்படுகிறது.

இந்த விதி “மறதி”க்கும் பொருந்துமென்றே கருதுகிறேன். மனித மனங்களுக்கு வாய்த்த அழகிய சொத்து மறதி. வாழ்க்கை ஓட்டத்தின் பெரும்பகுதியை மறதியே அழகாக்குகிறது, இருந்தும் சில நேரம் மறக்க கூடாதவைகளை நினைவில் வைத்துக்கொள்ளாது சங்கடங்களில் சில பொழுதேனும் ஆழ்ந்திருப்போம். அத்தகு மறதியினால் கூடிய சுவாரசியம் தனை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

ஒரு வருடத்தின் 365 (அத்தனை நல்லுள்ளங்களின் நட்பை பெற வேண்டுமெனும் ஆசையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்) நாளும் யாரேனும் ஒருவர்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமென்பதே என் நீண்ட நாள் ஆசை. 365 நாளும் வாழ்த்து சொல்ல முடியவில்லையெனினும், நண்பர்களின்/உறவினர்களின் பிறந்த நாளை முடிந்த வரை நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்திவிடுவேன்.

இன்றைய சூழலில் நண்பர்களின் பிறந்த நாளை நினைவுப்படுத்த, முகனூல் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. கைப்பேசியும் இணையமும் அதிகம் அறிமுகமாகாத கல்லூரி காலங்களில், என் நெருங்கிய தோழியின் பிறந்த நாளை மறந்துவிட்டேன். மறந்ததோடல்லாமல் அன்று காலை வழக்கமாக பேசுவது போல் அவளுடன் பேசவும் செய்து, அவளின் பிறந்த நாள் எனக்கு நினைவில் இல்லை என்பதை அவளுக்கு புரியும்படி மிகவும் வழக்கமாக பேசி விடைப்பெற்றுக்கொண்டேன்.

நல்ல வேளை அந்த நாள் முடியும் தருவாயிலாவது நினைவுக்கு வந்தது, அன்று அவளின் பிறந்த நாளென்று. இனி சாதாரணமாய் அழைத்து வாழ்த்து சொன்னால் சரிபடாதென, சிறப்பாக ஏதாவாது செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டே, பிறந்த நாள் பரிசாக ஒரு இன்ப அதிர்ச்சி தரலாமென முடிவு செய்தேன். மற்றொரு தோழியை விட்டு, பிறந்த நாள் கொண்டாடும் தோழிக்கு, ஒரு சிறிய விபத்தில் நான் சிக்கிக்கொண்டதாக தகவல் சொல்லி அனுப்பினேன்.

அவளும் செய்தி கேட்ட மாத்திரம், உடனடியாக என்னைப் பார்க்க என் அறைக்கு ஓடி வந்தாள், அவள் என்னறையினுள் காலடி வைத்ததும், அறை விளக்கை அணைத்து விட்டு மெழுகின் வெளிச்சத்தில் அவளுக்கு பிடித்த “சாக்லெட் கேக்”கோடு ”சிறிய பரிசு”ம் தந்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” சொல்லி, மறந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி முடித்தோம். பிறந்தநாளை மறந்ததற்கு திட்டாமல், நான் சொன்ன “விபத்து பொய்”க்காக கடிந்து கொண்டு என் மேல் கொண்ட அக்கறையை மிகத்தெளிவாக ஊர்ஜிதப்படுத்தினாளவள்.

ஒரு வாழ்த்தோடு முடிந்திருக்க வேண்டிய பிறந்தநாள், ‘கேக்’, ‘பரிசு’, ‘இன்ப அதிர்ச்சி’, ‘அன்பின் வெளிப்பாடு’, ‘பாசம்’ என மறக்க முடியாத நாளாக மாறியதற்கு காரணம் “மறதி” தானே!

இந்த ஒரு சான்றோடு, இக்கணம் நம் மனதில் தோன்றும் பல சான்றுகளோடு ஒப்புக்கொள்ளலாமா நடப்பவை நல்லதுக்கென்றே”!

நன்றி,

நாணல்

Tuesday 15 November 2011

ரகசிய சினேகிதனே…

கண்ணிமைக்கும் நேரத்தில்
உன் உதட்டோரத்
திருஷ்டிப்பொட்டாக‌
உருவெடுக்கிறது
என் கண்ணின் மை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சீராக எழுதிய
தமிழின் எழுத்துக்களை விட‌
உன் பெயராய் உருபெற‌
சிதறிய தமிழின் எழுத்துக்கள்
தரும் மயக்கமே அலாதி!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உனக்கு தரவேண்டி நான் சேமித்த
முத்தப்பரிசுகளையெல்லாம்

நீ எனக்களித்த பரிசுப்பொருட்களே
தட்டிப்பறித்தால்
என் செய்வேன் நான்!

முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4, 5


நன்றி,

நாணல்

Sunday 30 October 2011

ந‌க‌ர‌த்துப் பெருவிழாக்க‌ள்!

உறவுகளின் மேன்மை மறந்து
‌நம்மை மட்டுமே சார்ந்த ஆசைகளோடு
நெரிசலான கடைவீதிகளில் உலாவும் நாம்,
ஊர் கூடி உறவு பேண‌‌
வர‌வேற்கப்பட‌வேண்டிய‌ பெருவிழாக்களை,
அன்புள்ளங்களின் அரவணைப்பிற்குப் பதிலாய்
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்போடும்
பட்டறிந்தோரின் கண்காணிப்பிற்குப் பதிலாய்
கண்காணிப்பு நிழற்படவியின் அடியிலும் தானே
வர‌வேற்கின்றோம் நகரத்துப் பெருவிழாக்களை!

%$^&@#$

ரகசியக்கண்கள் பொருந்திய‌
கண்காணிப்பு நிழற்படவிக்கு
ரகசியக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தால்,
சில விபத்துக்களும்
பல குற்றங்களும்
தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ந‌ன்றி,
நாண‌ல்


Tuesday 4 October 2011

ப‌ரிதாபக் காத‌ல்!

எனக்கானவன் நீயில்லையென‌
தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும்
என்ன‌வ‌ன் நீயில்லையென‌
மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும்
இடையில்
நம்
ப‌ரிதாபக் காத‌ல்!

$%^&#@$

ஜானேற‌ முழ‌ம் ச‌ருக்கும்
ச‌ருக்கு ம‌ர‌ம் போல,
உன் நினைவுகள்
சிறுக மறைந்து
பெருக மலர்ந்து
என்னைக் கொல்லுதே!

$%^&#@$

தூரத்துப் புள்ளியைத் தொட்டிடும்
முயற்சியென சாலைகள்
நீண்டு கொண்டேப் போனாலும்,
கிட்டாத புள்ளியென
மனதின் ஆசைகள்!

நன்றி,
நாணல்

Thursday 15 September 2011

நியான் நகரம்

276709_161999560537544_1105744_n.jpg

நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்,

காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்,

இன்று பின்னிரவில் அந்த ஈர நினவில

கன்று தவிப்பது போல், மனம் கலங்கிப் புலம்புகிறேன்

என்னும் அலைபாயுதேவின் “சினேகிதனே..” பாடலின் வரிகளோடு, மனதில் நகர்வலம் வர தொடங்குகிறது ”நியான் நகரம்

ரணம் சுகம்‘- ஒரு புதிய முயற்சி என்று அறிமுகமானபோது அப்புத்தகத்தை படிக்க ஆவலிருந்தும் படிக்க முயலவில்லை.அதனைத் தீர்க்கும் விதமாக, நியான் நகரம் வெளி வர, நண்பர் வசந்த் மூலம் அவ்வப்பொழுது விவரங்கள் தெரிந்து கொண்டேன்… அவர் எழுதிய ‘நிலவுடன் நான்’ பாடலை அஜீஷின் குரலில் கேட்டப்பிறகு, முழு நாவலையும் படிக்க வேண்டி, அவ‌ரிட‌மிருந்து புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்ததோடு சரி…பாடல்களோடு நாவலைப் படிக்கலாமென ஒத்திவைத்துக் கொண்டேயிருந்தேன்…

நண்பர் ஒருவர் ‘நியான் நகரம்’ பற்றி மின்னஞ்சல் அனுப்ப, என் தங்கை அதை வழிமொழிய, படித்தே தீர வேண்டுமென கையிலெடுத்தேன் நாவலை.வைக்க மனமில்லை, பயணித்த 1.30 மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை..இடையில் யாரெனும் தொலைபேசியில் அழைத்துவிடுவாரோ, இல்லை குறுஞ்செய்தி அனுப்பிவிடுவாரோ, நாவல் பாதியில் நின்று விடுமோ என்னும் பதட்டத்துடன் படித்துகொண்டேயிருந்தேன்.. நல்ல வேளை யாரும் இடையில் அழைக்கவில்லை ;)

OCD - Obsessive compulsive Disorder என்பதைப் பற்றி படித்திருக்கிறேன் தவிற பெரிதாக ஆராய்ந்ததில்லை.. இதனால் அவதிப்படும் கதையின் ஹீரோ ‘வினய்’ பற்றி வரும் சிறு பிள்ளைப் பிராயத்து க்ரிக்கெட் நினைவுகள், நகம் க‌டிக்கும் பழக்கமென மிக நுண்ணியமாய் ஆராய்ந்து வினயின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகப் படுகிறது. கதையோட்டத்தில், நேர்மையாக இருக்க விரும்பி வினய் படும் இன்னல்கள், அவற்றில் இருந்து எப்படி முன்னேறுகிறார் என்பனப் போன்ற கதையாடல்களை இயல்பானதாக உணர்ந்தேன்.

வின‌ய்க்கும் ம‌துவிற்கும் காத‌ல் அரும்பும் த‌ருண‌ங்க‌ளையும், அத‌னை இருவ‌ரும் வெளிக்காட்டிக்கொள்ளும் த‌ருண‌ங்க‌ளையும் இய‌ல்பாக‌, மிக‌ அழ‌காக‌ எழுத்தில் வெளிப்ப‌டுத்தியிருக்கிறார் ஷ‌மீர். உண்மைக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ரும் வித‌மாக‌ அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ம‌துவின் க‌தாபாத்திர‌ம், இக்கால‌த்திலும் உண்மையை‌ நேசிக்கும் சில‌ர் இருக்கின்ற‌ன‌ர் என்ற‌ நிம்ம‌தியை த‌ருகிற‌து.

மொத தப்பை மட்டும் செய்யாதே, தப்பு பழகிடும்

ஒருவாட்டி வள‌ஜ்சு கொடுக்க‌ ஆர‌ம்பிச்சா, அப்புற‌ம் திரும்பி நேரா நிக்க‌வே முடியாது

உண்மையை மட்டும் சொல்லு, உனக்காக உண்மையை ’உண்மை மாதிரி’ சொல்லாத. எல்லாத்துக்கும் மேல அடுத்தவன் வயித்துல அடிக்காம உண்மையைச் சொல்லு

போன்ற வ‌சன‌ங்க‌ள், ப‌ல‌த‌ட‌வை ப‌ல‌ரிட‌ம் கேட்டிருந்தும், க‌தையைப் ப‌டிக்கும் பொழுது ப‌ல‌ அர்த்த‌ம் த‌ருவ‌தாக‌ உணர்ந்தேன்.

ம‌க‌ன் செய்யும் த‌வ‌றை சுட்டிக்காட்டாது, அவ‌னுள் இருக்கும் ச‌ரிக‌ளை ம‌ட்டுமே கோடிட்ட‌ வின‌யின் த‌ந்தை முதிர்ந்த‌, பொறுப்பான‌ அப்பாவாக‌ க‌ண்முன் விரிகிறார்.

உண்மை, புதுமை, ய‌தார்த்த‌ ந‌டையென‌ ப‌ல‌ புதுமையான‌ விட‌ய‌ங்க‌ளை உள்ளட‌க்கிய‌து தான் ‘நியான் ந‌க‌ர‌ம்‘. உதார‌ண‌த்திற்கு, சரிந்த‌து என்னும் வார்த்தையை ச‌ரிந்த‌வாரே அச்சடித்த‌ வித‌ம் ர‌சிக்க‌ வைக்கிற‌து.

திரைப்ப‌ட‌ங்க‌ளின் முடிவில் டைட்டிலோடு திரையிடப்படும் ஃப்ளாப்ப‌ர் காட்சிக‌ளை நின்று நிதான‌மாக‌ப் பார்த்துக் கிள‌ம்பும் புதுமை விரும்பிக‌ளைப் போல், புத்த‌க‌த்தின் க‌டைசிப் ப‌க்க‌ம் வ‌ரை, புதிதாய் என்ன‌ சொல்லியிருக்கிறார்க‌ள் என‌த் தேடிக்கொண்டிருந்தேன்.‌ அதை நிரூபிக்கும் விதமாக‌ ‘Gift A Song, HI meeting, Haiku cinema ‘ என‌ப் ப‌ல‌ புதுமைக‌ளை உள்ள‌ட‌க்கியுள்ள‌து, ந‌க‌ர‌த்தின் க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள்.

பாட‌ல்க‌ளும் அருமையாக‌ வ‌ந்துள்ள‌து. சூழ்நிலைக்கு த‌குந்தாற்போன்ற வ‌ரிக‌ளும் அத‌ற்கேற்ற இசையும் அருமை. இசையோடு ப‌டிக்கும் போது இன்னொரு கோண‌ம் த‌ரும் என்று ந‌ம்புகிறேன். நாவலில் இசையின் துணையோடு பயணம் செய்ய‌ ப‌ய‌ணிக்க‌ தயாராகிக்கொண்டிருக்கிறேன்

பாதையின் ‘Musical Novel’ முய‌ற்சி வெற்றிய‌டைய‌ என‌து வாழ்த்துக்க‌ள்.

நன்றி,
நாணல்

Tuesday 6 September 2011

நீட்சி...

திருமணத்தடை நீங்க
மஞ்சற்கயிறு;
பிள்ளைப்பேறு பெற
மரத்தாலான தொட்டில்;
வேண்டுதல்கள் நிறைந்த
காகித மாலைகள்;
வெற்றி கிட்டிய பரவசத்தில்
மஞ்சள்குங்கும அபிஷேகமென
முக்காலத்து நம்பிகைகள்
பொய்க்காத வரையேனும்,
தன் வாழ்நாள் நீளுமென
நம்பிக்கை கொள்கிறது
திருவிடம் வாசம் செய்கின்ற
நற்பேறுடைய ஓங்கல்!

நன்றி,
நாணல்

Sunday 28 August 2011

ரகசிய சினேகிதனே…

உனது கொஞ்ச நேரக்
கெஞ்சல்களுக்காகவே,
உயிர்க் கொள்கிறது
எனது கொஞ்ச நேரத் திமிரும்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அர்த்தமில்லா அர்த்தங்கள்
நிறைந்த அபத்தங்களும்
அர்த்தம் தரும்
நமது உரையாடல்களில் மட்டும்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலின் அழகைக் கூட்டும்
சுவாரசியமான தேடல்களுக்காகவே
ரகசியங்கள் காக்கப்படுகின்றன
காதலின் தேடலில்!!


முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4


நன்றி,
நாணல்

Monday 1 August 2011

தோழியின் தோழன்..

கதைகள் பல பேசி
கருத்துக்கள் பல பரிமாறி
நம்பத்தகுந்த உறவானாய் நீ - என்
உயிரின் உறவான தோழன்!

பால் வேற்றுமை தாண்டிய
உறவாயியினும்
நிச்சயிக்கப்பட்ட பிரிவைத் தவிர்க்க
தவியாய் தவித்தும்
தவறவில்லை நம் பிரிவு!

காலங்கள் மாறினாலும்
மனித மனங்கள் விரிந்தாலும்
வாழ்க்கைக் கோட்பாடுகளின்
நாகரிகம் கருதி முளைக்கின்ற
திடீர் மரியாதைகளையும் அவதானிப்புகளையும்
சகஜமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்,
நீ என் தோழனானதால்…

நன்றி,
நாண‌ல்

Saturday 9 April 2011

வ‌ழிய‌னுப்புகிறேன் நானே!

பல‌ வண்ண
பள்ளிச் சீருடைகளை
எனக்கு அணிவித்து,
சின்ன‌ச் சின்ன‌
காலுறைக‌ளுக்குள்
என் பிஞ்சுக் கால்களைத் திணித்து,
அழுது வடிந்த கண்களுடன்
புத்த‌க‌ப் பையை
தூக்கிக்கொண்டு
நான் ப‌ள்ளி செல்லும்
முதல் நாளன்று,
எனக்கு கையசைத்து விடைகொடுத்து
வழியனுப்ப நீயிருக்கமாட்டாயென‌த்
தெரியும் தாயே!

பல‌ வ‌ண்ண‌
மேல்நாட்டு ஆடைக‌ள்
அணிந்து,
அத‌ற்கேற்றார் போன்ற
காலுறைக‌ளுக்குள்
உன் அவ‌ச‌ர‌த்தையும்
என் நினைப்பையும்
மாட்டிக்கொண்டு
தூக்கம் மிச்சமிருந்த கண்களுடன்
ம‌திய‌ உண‌வுப் பையைக்
கையில் தூக்கிக்கொண்டு
எனைப் பார்த்து கைய‌சைத்துக் கொண்டே
அலுவ‌ல‌க‌ம் செல்லும் உன‌க்கு
கைய‌சைத்து விடைகொடுத்து
வ‌ழிய‌னுப்பி வைக்கின்றேன்
தின‌மும்…
இன்றாவது,
என் இர‌வு தூக்க‌த்திற்கு
முன் நீ வ‌ருவாயென‌!

ந‌ன்றி,
நாண‌ல்

Friday 25 March 2011

த‌வ‌றுக‌ள் இல்லாத‌ நாளொன்று

தவறி செய்த தவறும்
மறுத்துப்போகக்கூடும்;
பாதித்தவரின் பெருந்தன்மையால்
ஆறுதலையும் பெற்றுவிடக்கூடும்;
என்
த‌வ‌றுக‌ளை
ம‌ன்னிப்புக் க‌ண்ணீராய்
உரு மாற்றினால்!

மாறாக‌
யாருக்கும் புல‌ப்ப‌டாத‌
மௌன‌ச்சாட்டையாக‌வே
மாற்ற‌ விரும்புகிறேன்,
த‌வ‌றுக‌ள் ம‌றந்தாலும்
சாட்டையடி தந்த‌ வ‌லி
ம‌ற‌வாது என‌வே!

புரியாது செய்பவை
பிழையென
பிழைத்துக்கொள்ள‌க்கூடும்,
புரிந்தும் புரியாது
செய்த‌வை
ம‌ன்னிப்ப‌ற்று
ம‌ன்னிப்புக்கேட்கும் த‌குதிய‌ற்று
துண்டித்து விட‌ப்ப‌ட்டால் ஒழிய‌
‘த‌வ‌றுக‌ள் இல்லாத‌
நாளொன்றின்
பிம்ப‌ம் ஜ‌னிக்காது’
எனும் ப‌டிப்பினையோடு
த‌வ‌றுக‌ள் செய்யாத‌
நாளொன்றுக்காய்
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என்னை தினமும்!

நன்றி,
நாணல்

Sunday 20 March 2011

வாசுகி மகன்

"அவனுக்கு அம்மா ஆகுற வயசு உனக்கு இல்லை, உனக்கு பிள்ளையாகுற வயசும் அவனுக்கு இல்லை"

திரையில் படத்தின் இறுதிக் காட்சி ஓடிக்கொண்டிருக்க, தன் அருகில் அமர்ந்திருக்கும் தன் செல்ல மனைவியின் கைகளை ஆறுதலாக பற்றினான் 'வாசு' என்கிற வசந்த் குமார். அவனின் பற்றுதலின் அர்த்தம் புரிந்து, கொஞ்சம் தெளிவானவளாய்த் தென்பட்டாள் வாசுகி.

கண்களை மெல்ல மூட, இரண்டு மணி நேரத்திற்கு முன் (அதாவது 'செல்லமே' படம் ஆரம்பித்த நேரம்) செல்கிறது அவளின் நினைவு. வசந்த், மனித வளத் துறையைன் மேலாளர் என்பதாலும், மனிதர்களைப் படிப்பது அவனின் பொழுது போக்கு என்பதாலும் மிக எளிதில் அனைவரையும் புரிந்து கொள்வான். இதையே வாசுகியிடமும் வெளிக்காட்டியமையால், அவளின் நண்பனாய், கணவனாய் , உயிராய் உருகொண்டான் திருமணமான 4 மாதங்களிலேயே. தன் ஆசைக் கணவணோடு படம் பார்க்க அமர்ந்திருந்தவள் சோர்ந்து காணப்பட்டாள். எப்பொழுதும் பட படவென பேசிக் கொண்டிருக்கும் வாசுகி ஒரு வாரமாகவே அமைதியாய், எதையோ யோசித்த வண்ணம் இருப்பதை வசந்த் கவனித்துக் கொண்டேயிருந்தான். எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் வாசுகி, ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் தன்னிடம் பகிரத் தயங்குகிறாள் என்பதைப் புரிந்து அவளாகச் சொல்லும் வரை கேட்கக் கூடாது என அமைதியாய் இருந்தான் வசந்த்.

என்னங்க...”

ஹ்ம்ம் சொல்லு மா, என்னாச்சு....”

ஒரு வாரமாவே என் மனசு சரியில்லைங்க..”

நானும் கவனிச்சிட்டு தான் வரேன் வாசுகி.. கேட்டு உன்னை சங்கடப்படுத்த வேண்டாமேன்னு தான் அமைதியா இருந்தேன்... போன வாரம் நாம ஷாப்பிங் போயிருந்தப்ப உன் ஃப்ரெண்டு வாசுதேவனைப் பார்த்தோமே.. அப்போலையிருந்தே உன் முகம் ஒரு மாதிரி தான் இருக்கு.. உங்களுக்குள்ள எதாவது ப்ரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லு, பேசி ஸால்வ் பண்ணிடலாம்...”

எப்படி வாசுதேவனைப் பற்றி ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு, கணவனே இப்படி நேராக விஷயத்தை ஆரம்பித்தது ஆறுதல் தந்தது. எதையும் வெளிப்படையாய் பேசும் இந்த ஒரு குணத்திற்காகவே வசந்த் போன்ற ஒருவன் தனக்கு கணவனாய்க் கிடைத்தது, தான் செய்த புண்ணியமென கடவுளுக்கு அவ்வப்பொழுது நன்றி சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஆமாங்க... அவனைப் பத்தி தான் யோசிச்சிட்டே இருந்தேன்.. அவனைப் பத்தி உங்க கிட்ட நான் அதிகம் சொன்னதில்லைனு நினைக்கறேன்..”

ஆமா, உன்னோட ஜூனியர், நீ இருந்த அபார்ட்மெண்ட்ல குடியிருந்தான்னு சொல்லியிருக்கே, ஒரே டீம்ங்கறதுனால, ஆபீஸ்க்கு ஒண்ணா போயிட்டு வருவீங்கன்னு சொல்லியிருக்கே... இப்ப அவனுக்கு ஏதாச்சு ப்ரச்சனையா.. ”

இல்லைங்க, உடனே ஸால்வ் ஆகுற ப்ரச்சனை இல்லை இது..உங்களுக்கு கேக்குற பொறுமை இருந்தா அவனைப் பத்தி சொல்றேன் கேளுங்க, அப்புறம் உங்களுக்கே புரியும்...”

ஹ்ம்ம் சொல்லு..”

இங்க சென்னைக்கு வந்த புதுசுல, டீம் அவுட்டிங்க்காக E.C.R ஒரு beach resort போயிருந்தோம். அப்ப திரும்பி வரப்ப தான் முதமுதல் வாசுகிட்ட பேசினேன்..”

தன்னை வாசு எனக்கூப்பிடும் படி பல முறை சொல்லியும், வசந்த் என்றே அழைத்த வாசுகி, வாசுதேவனைவாசுஎன அறிமுகம் செய்வது புதிராக இருந்தது வசந்த்திற்கு... நிச்சயம் சிக்கலான ப்ரச்சனையாகத் தானிருக்குமென, தனது மன நிலையைத் தயார் செய்து கொண்டிருந்தான்..இந்த பெயர் குழப்பத்தைக் கண்டுகொள்ளாதவனாய் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

சரி...”

"பேச ஆரம்பிச்ச முத நாளே அவனோட அடி மனசுல ஏதோ கஷ்டம் இருக்குற மாதிரியும், பேச்சுக்கும் அவனோட மனசுக்கும் இடைவெளி இருக்குற மாதிரியும் எனக்கு தோணுச்சு, சரி முதல்லயே கேக்க வேண்டாமேன்னு அவனை அவன் போக்குல விட்டேன்.. அப்படி விட்டதுல சில விஷயங்கள கவனிச்சும் அவன் சொல்லியும் தெரிஞ்சுக்கிட்டேன்.."

"என்னது?"

"அவனோட அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போறவங்கன்றதுனால, சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல தான் வளர்ந்திருக்கான். பொதுவா ஹாஸ்டல்ல வளருற எல்லாப் பசங்க மாதிரி, இவனும் இவனோட அப்பா அம்மாவோட அன்புக்கு ஏங்கிகிட்டே இருந்திருக்கான்.."

"சரி, இது பொதுவா வேலைக்கு போகிற அப்பா அம்மாவோட பசங்களுக்கும் இருக்கிற ப்ரச்சனை தானே"

”ஆமாங்க, இது பொதுவான ப்ரச்சனை தான்..ஆனா அதை பசங்க எப்படி எடுத்துக்கிறாங்கன்றது தானே அடுத்த கட்டப் ப்ரச்சனை.."

"அதுவும் சரி தான்..."

"இப்படி தனியாவே வளர்ந்து, தனியாவே வாழப் பழகிட்டதுனால, யார் மேலயும் ஒரு பிடிப்பு அவனுக்கு இருந்தது இல்லை. வேலைக்கு போக ஆரம்பிச்ச உடனேயும் வீட்டுல இருந்து கூட வந்திருக்கலாம், ஆனா இப்பவும் தனியாத் தான் தங்கியிருக்கான்.. டீம்லயும் பார்த்தீங்கன்னா, அவனுக்கு நல்ல பேர், எல்லார் கிட்டயும் நல்லாப் பேசுவான்.. ஆனா யார் கிட்டயும் அதிகமா emotional attachment வெச்சுக்க மாட்டான்.. அவனுக்குன்னு ஒரு வட்டம் போட்டுக்கிட்டு யாரையும் அவன் வட்டத்துக்குள்ள விடாம படு ஜாக்கிரதையாப் பார்த்துப்பான்"

"உன் கிட்ட கூடவா?"

”ஆரம்பத்துல அப்படி தான் இருந்தான், மெல்ல அவனுக்கு என் மேல நம்பிக்கை வந்துச்சா, இல்லை நான் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செஞ்சு , என் கிட்ட அதிகம் பேச வெச்சேனான்னு தெர்ல.. கொஞ்ச நாள்ல என் கிட்ட நல்லாப் பேச அரம்பிச்சுட்டான்.. அவன் கடந்த காலத்தைப் பத்தி அதிகம் சொல்லைனாலும், நிகழ் காலத்துல நடக்குற ஒவ்வொரு சின்ன விஷயமா இருந்தாலும் என் கிட்ட பகிர்ந்துக்குவான். எனக்கு ஜூனியர்ங்கற முறையில வர்க் பத்தி நிறைய பேசுவோம்..”

”அப்புறம் என்ன?”

”இப்படி என் கிட்ட மட்டும் இருந்துட்டு, மத்தவங்க கிட்ட ஏன் தள்ளியே இருக்கான்னு எனக்கு வேடிக்கையா இருந்துச்சு, அவன் வேணும்னே தன்னைத் தனிமைப் படுத்திக்கிட்டு எல்லார் கிட்டையும் sympathy create பண்றானு தோணுச்சு.. பல தடவை இப்படி இருக்காதேன்னு சொல்லிப் பார்த்து வெறுத்து விட்டுடேன்..இன்னும் கொஞ்சம் அதிகமா analyze பண்ணிப் பாக்கும் போது தான், அவன் ப்ரச்சனை என்னனே புரிஞ்சுது.."

"என்னது?"

"ஆரம்பத்துல இருந்தே உறவுகள் அவனுக்கு சரியா அமையாததுனால, இப்ப யாரு அவனை கொஞ்ச நெருங்கி வர மாதிரி தெரிஞ்சாலும், எங்க விட்டுட்டு போயிடுவாங்களோங்கிற பயத்துல, யாரையும் நெருங்க விடறதுல... இது கூட பரவாயில்லைங்க.. சில நேரம் தான் பேசினதையே முன்னுக்கு பின்னா பேசுவான்..."

"முன்னுக்கு பின்னா ... புரியலை..."

"ஹ்ம்ம் உதாரணத்துக்கு சொல்றேன் கேளுங்க.. என் கிட்ட பேசும் போது, பிள்ளையார்னா பிடிக்கும்னு சொன்னான்..ஆனா...மறுநாள் ஆபீஸ்ல எல்லாரும்பேசிட்டு இருக்கும் போது தான் ஒரு நாத்திகவாதின்னு வாதம் பண்ணிட்டு இருந்தான்... ஒரு தடவைன்னா சரின்னு விடலாம், இப்படி பல முறை பல விஷயங்களை மாத்தி மாத்திப் பேசுவான்"

"... ஏன் அப்படி? அதுக்கும் ஒரு பதில் வெச்சுருப்பியே நீ... என்ன சொல்லுது உன்analysis report?"

"அதுக்கும் அவன் தனிமை தாங்க காரணம்...தான் தனிமப் படுத்தப்பட்டவன், தன்னை யாரும் கவனிக்கறது இல்லை அப்படின்னு அவனுக்குள்ள எப்பவுமே ஒரு எண்ணம் இருக்கும். அதனால சமயம் கிடைக்கும் போது, தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்னுஇப்படி கூட்டத்துக்கு ஏத்த மாதிரி தன்னோட கருத்தை மாத்திகிட்டு எங்க போனாலும்தன்னோட பேச்சும் தன்னோட கருத்தும் தான் ஜெயிக்கனும்னு எல்லார் கிட்டையும்வீண் விவாதம் பண்ணிட்டு இருப்பான்..."

"சரி, இதுக்கும் உன் குழப்பத்துக்கும் என்ன சம்பந்தம்..."

"அட ஆமால, அதை சொல்லாம, என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... அப்படி தனிமைல யாரையும் கிட்ட சேர்த்துக்காம இருந்தவன், என் கிட்ட மட்டும்கொஞ்சம் அதிகமாவே உரிமை எடுத்துகிட்டான்.. இதுக்கு எங்க ரெண்டு பேரோட பேர்ஒற்றுமையும் ஒரு காரணமா இருக்கலாம்... அவனை வாசுன்னு கூப்பிடதுனால தான்உங்களை "வாசுன்னு" கூப்பிட முடியாதுன்னு நான் சொன்னேன்... வாசுன்னாலேஅவன் ஞாபகம் தான் வருது எனக்கு.."

தன் கேள்விக்கு பதில் கிடைத்த திருப்தியோடு, புன்னகைத்துக் கொண்டே "சரி விடு, பேர்ல என்ன இருக்கு..."

"ஹ்ம்ம்ம், பேர் ஒற்றுமையோட, ஒரே இடங்கிறதுனால, ஆபீஸ்ல லேட்டாச்சுன்னா, அவன் தான் கூட இருந்து கூட்டிட்டு வருவான்..நம்மளை விட சின்னவங்க நம்மளை பாத்துக்கும் போது, நம்ம மேல அக்கறை காட்டும் போது, ரொம்ப நல்லா இருக்கும். அதே மாதிரி தான் இவன் என் மேல எடுத்துகிட்ட உரிமையை ரசிச்சிட்டு இருந்தேன். அதே மாதிரி நம்மளை விட சின்னவங்களா இருக்கறவங்களுக்கு அக்கறை காட்டுறதும் தனி அலாதி தான். உரிமையோட என்னைத் திட்டிகிட்டேஇருப்பான்...’சீக்கிறம் வேலையை முடிக்க வேண்டியது தானேடி.’ அப்படி இப்படின்னு... "

"ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்"

"இப்படி போயிட்டே இருக்கும் போது தான், நீங்க என்னைப் பார்க்க வந்தீங்க... அப்பஅவன் ஊர்ல இல்லாததுனால அவன் வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன், அதுக்குள்ள என் டீம்ல யாரோ பேசும் போது பேச்சுவாக்குல எனக்கு கல்யாணம்நிச்சயம் ஆனதை சொல்லியிருப்பாங்க போல... "

"ஹ்ம்ம்ம்"

"வந்ததும் வராததுமா..ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு, என் கிட்ட பேசறதைநிறுத்திட்டான்.."

"அப்படி என்னக் கேட்டான்?"

"'நீ கூட என்னை விட்டுட்டுப் போற இல்லை, போடி போ...' அப்படின்னு கண் கலங்கசொல்லிட்டு போனது தான் என் கண் முன்னாடி நிக்குதுங்க...அந்த கோவத்துல நம்மகல்யாணதுக்கு கூட வரலை அவன்.. அதுக்கப்புறம் போன வாரம் தான் பார்த்தேன்.. "

" ஹ்ம்ம்ம்"

"நான் கூப்பிட்டும் அவன் பேசாம போனது, கஷ்டமாயிருந்துச்சு, அதனால அவன்ரூம்க்கு போன் போட்டா, அவன் ரூம் மேட் தான் பேசினான்... அவன் முன்ன மாதிரிஇருக்கறது இல்லையான், நான் கூட இருந்தப்போ சண்டைப் போட்டு சிகரெட் பிடிக்கறபழக்கத்தை விட வெச்சேன்.. இப்ப சிகரெட்டோட தண்ணியும் அடிக்கஆரம்பிச்சுட்டானா... தினம் குடிக்கிறான் போல, சரியா சாப்பிடறதும் இல்லையான்.. யார் கிட்டயும் பேசறது இல்லையான்... நானும் கல்யாணத்துக்கு அப்புறம் ஆபீஸ்போகாததுனால, அவன் இப்படி மாறினது எனக்கு தெரியாமப் போச்சு.. நானும் அவன்நம்பிக்கையை கெடுக்குற மாதிரி நடந்துகிட்டேனோன்னு உறுத்துதுங்க...அவன்சரியான வழியில போயிட்ருப்பானு தான் நான் இருந்தேன், இப்படி இருக்குறது எனக்குபயமா இருக்குங்க.. என்ன ஆவானோன்னு... அதான என்ன பண்றதுன்னு தெரியாமகுழம்பிகிட்டு இருக்கேன்..என் கிட்ட அவன் பேசாம இருக்குறது கூட எனக்கு பெருசா படலை, ஆனா எங்க இருந்தாலும் ஒழுக்கமா நல்லா இருந்தா சரி..."

"ஹே, இதுக்கு நீ என்ன பண்ண முடியும்... விடு டா...சின்னக் குழந்தை மாதிரி... அவனவன் வாழ்க்கையை அவனவன் தான் வாழனும், நீயோ நானோ வாழ வைக்கமுடியாது சரியா...உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் உன் கிட்ட பேசற மாதிரி, அவனும்உன் கிட்ட பேசினா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்.. அவனா ஒருமுடிவெடுத்துட்டு தள்ளியிருந்தா நாம என்னப் பண்ண முடியும்...இதுக்கெல்லாம் ஃபீல்பண்ணாத சரியா... போம்மா, போய் வேலையைப் பாரு"

"அவனுக்கு அம்மா ஆகுற வயசு உனக்கு இல்லை, உனக்கு பையனாகுற வயசும்அவனுக்கு இல்லை"

என திரையில் ஒலிக்க.. நான் சொல்றது சரியா என்கிற தோணியோடு அவளின் கைகளைப் பற்றி எழுந்து சென்று விட்டான்...

வாசு பற்றிய குழப்பங்களைச் சொன்னால், எங்கே தன்னைத் தப்பாக எடுத்துக்கொள்வானோ என பயந்த வாசுகிக்கு, வசந்த்தின் இந்த செய்கை, மனதின் பாரத்தை குறைத்து விட்டதைப் போல் இருந்தது.. நட்பு , காதல் என சுருக்கிவிட்ட ஒத்த வயதுடைய ஆண் பெண் உறவுகளைத் தாண்டி, தாய்மை என்னும் ஒரு உணர்வைப் புரிந்து கொண்ட தனது வசந்தைப் பார்த்தவாறே தனக்குள் வளரும் குட்டி வசந்த்தை வருடியபடியே கண்கள் அயர்ந்தாள் வாசுகி...

தன்னிடம் சொல்லியதோடு வாசுகியின் பாரம் குறைந்து விட்டது. இரண்டு நாட்கள் முன் வாசுவை சாலையில் பார்த்த கோலம் ( குடியின் உச்சத்தில், நடக்க கூட தெம்பு இல்லாமல், தட்டித் தடுமாறி நடந்து கொண்டிருந்தவனை, வசந்த் தான் அவனது வீட்டில் டிராப் செய்து விட்டு வந்தான் ) கண் முன் விரிய, இதைப் பற்றி வாசுகியிடம் சொல்லலாமெனத் தான் வாசுவைப் பற்றிய பேச்சை எடுத்தான். ஆனால் வாசுகிக்குள் இருக்கும் குற்ற உணர்வில், தானும் இவ்விஷயத்தை சொல்லி அதிகப் படுத்த வேண்டாமென முடிவெடுத்தான். தனது தம்பி வயது உடைய வாசுவை நண்பனாக்கி அவனுக்குள் இருக்கும் வெறுமையை தன்னால் முடிந்த வரை சரி செய்யலாமென முடிவெடுத்து, "வாசுதேவன்" என்னும் பேரை முகனூலில் தேடிப் பிடித்து, அவனுடன் சினேகம் கொள்ளத் தயாரானான்...

***முற்றும்***

நன்றி,

நாணல்

Monday 7 March 2011

அதிசயமான குணாதிசயங்கள்!

நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்களைப் பற்றியும் பெண்களின் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு குட்டி அலசல் இங்கே, உலக மகளிர் தினத்தைக்(March 8, 2011) கொண்டாடும் பொருட்டு.

*****************

“என்னடா கண்ணு பண்றே… இது என்னது?”

“எ ன் வ ய ல்..”

“எனக்குத் தரியாடா..”

“நோ நோ நோ”

எனத் தன் பிஞ்சுக் கைகளால் வளையலை பிடுங்க வந்த தன் தாயின் கையைத் தட்டிவிடுகிறாள் ஒன்றரை வயதான சுஹாசினி…

மழலையின் சுவடு மாறாது, வித விதமான முக பாவங்களால் சுற்றியிருக்கும் அனைவரையும் தன் பால் ஈர்க்கிறாள் இந்தச் சுட்டிப் பெண். பாலின வேறுபாட்டை மனதால் அறிந்து கொள்ள முடியா வயதிலும், தனக்கு வளையள்கள் மீதும், தன் தாய் அணிந்துள்ள ஆரத்தின் மீதும் ஆர்வம் காட்டுகிறாள் என்பது என்னை ஆச்சரிய‌த்திற்குத் தள்ளியது.

புதிதாய் உலகில் காலடி வைத்து ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொள்ளும் இந்த பிஞ்சு மனதினுள் பெண்மைக்குண்டான “நகைகள் மீதான ஆசை”யென்னும் கோட்பாட்டைத் திணித்த இயற்கையை என்னவென்று சொல்ல?

*****************

”பாரதி.. தம்பி கூப்பிடறான் பாரு…”

“பாரதி… கடைக்குப் போயி இதை வாங்கி வந்துடும்மா..”

“பாரதி… அப்பாக்கு சாப்பாடு போடு..”

எதற்கெடுத்தாலும் பாரதி தான் பொறுப்பாளியாய் இருந்தால் என் பக்கத்து வீட்டில்…அவளின் பெயரின் விளிப்பை மட்டுமே கேட்ட எனக்கு, பாரதி ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவியாய்த் தெரிந்தாள்.நெருங்கி விசாரித்துப் பார்த்ததில், பாரதி ஏழு வயது மட்டுமே நிரம்பிய சுட்டிப் பெண்ணெனத் தெரிந்தது..

வயது வரம்பின்றி பொறுப்புகளைக் கையிலெடுத்துக் கொள்வதும் பெண்மைக்குண்டான அதிசயம் தானோ?

*****************

“Excuse me , காலைல இந்த பஸ் golden flats stopல எத்தனை மணிக்கு வரும்?”

“தெரியாதுங்களே, நான் வேற office, இன்னைக்கு மட்டும் தான் இதுல வரேன்.. நீங்க வேணா இறங்கும் போது driver கிட்ட கேட்டுக்கோங்க..”

“சரிங்க… நான் இந்த office தான், ஆனா, இன்னைக்கு தான் Bangalore ல இருந்து transfer ஆகி வந்தேன்… driver கிட்ட கேட்டுக்கறேன்… thanks ”

இந்த உரையாடலை முடித்ததும் “தெரியாது” என்ற ஒற்றை வார்த்தைப் பதிலுக்கு இத்தனை விளக்கங்களா?

முதல் தடவை தான் பழக்கமெனினும், நிரம்ப பேசுவது பெரும்பாலாக பெண்களின் குணாதிசயம் தானே?

*****************

“என்ன புக் படிக்கறீங்க?”

எதுவும் பேசாமல் அட்டைப் படத்தைக் காட்டினேன் …

“நீங்க எங்க இருக்கீங்க?”

“சென்னைல அம்பத்தூர்”

“அப்ப , இப்ப எங்க போயிட்டு இருக்கீங்க?”

“அரக்கோணத்துல எங்க மாமா வீட்டுக்குப் போறேன்”

இப்படியே என்ன பண்றீங்க, என்ன படிச்சிருக்கீங்க என பல கேள்விகளையும், எதிர் கேள்விகளையும் கொண்ட குட்டி அறிமுகத்திற்குப் பின் மீண்டும் புத்தகத்தினுள் நுழைந்து கொண்டேன், மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்க இடம் தர வேண்டாமென.. தொலைபேசி மணி அழைக்க எடுத்துப் பேசினேன்.. பாட்டியின் உடல் நிலை சரியில்லையென அப்பா சொல்ல, கண்கள் கலங்கி, பாட்டியின் புகைப்படத்தை அலைபேசியின் திரையில் பார்த்தவாறே பாட்டிக்காக பிரார்த்தனையைத் துவங்கினேன்…மீண்டும் அருகிலிருந்த பெண்…

“யாருங்க இவங்க? உங்க பாட்டியா?”

“அஹ் ஆமாம்”

“ஏங்க போட்டோவை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்க… அவங்களுக்கு உடம்பு சரியில்லையா என்ன?”

கண்கள் கலங்க “ஆமா, இப்ப தான் அப்பா சொன்னார், serious அஹ் இருக்காங்களாம்”

“சரி கவலைப் படாதீங்க, சரியாயிடும்… தைரியமாயிருங்க…” என இதமான புன்னகையைப் பரிசாகளித்தாள்…
அருகில் இருப்பவரின் விஷயத்தினுள் மூக்கை நுழைப்பது என்பது பெண்களுக்கே உண்டான குற்றச்சாட்டு தான்.. இதற்கேற்றார் போல் இருந்த ஆரம்ப நிலை உரையாடல், நான் பகிர்ந்திடாத கண்ணீரைத் துடைத்த போது பெண்மையின் அதிசயத்தை உணர்ந்து, நான் ஒரு பெண்னெபதில் கர்வம் கொண்டேன்…

*****************

”அக்கா , இன்னைக்கு என் கனவுல பூஜா வந்தாக்கா”

“ஹ்ம்ம்ம்… ஏண்டி உன் அக்கா நான், என்னைக்காச்சு உன் கனவுல வந்திருக்கேனா? ஆனா மூணு வருஷமா தெரிஞ்ச பூஜா வந்தாளாம்..” என கடிந்து கொண்டாள் அக்கா..

என்ன சொல்வதென்று தெரியாது.. அக்கா என்கிற முறையில் நான் மறுத்தாலும், தாய்க்கு அடுத்து எனது முக்கிய உறவாக இவள் தான் இருக்கப் போகிறாள். கனவில் வரவைல்லையென ஏன் இப்படி சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாள், என அவளின் possesiveness யை பரிகசித்துக் கொண்டு, இனி கனவில் வருகின்ற தோழியைப் பற்றி அவளுக்கு சொல்லக் கூடாதென என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்..

சில நேரங்களில் உறவுகளை அழித்தும் விடுகிற, இந்த மாதிரியான possesiveness பெண்களுக்கே உண்டான குணா(அ)திசயங்களில் ஒன்றோ?

*****************

”ஏழு மணியாச்சு எழுந்திரும்மா”

“ஹ்ம்ம்ம்… “

எழுந்திருக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகராது, எழுப்பிக்கொண்டேயிருப்பாள் பாட்டி.. ஒரு நிமிடம் கூட அமைதியாய் இருக்காது ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பாள். ஊரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வருகிறாளென்றாலே, வீடு முழுவதையும் சுத்தம் செய்து வைத்திருப்போம்…வந்த இரண்டு மணி நேரத்தில், இது ஏன் இங்க இருக்கு என எதையாவது எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருப்பாள்.. பாட்டி வந்தாலே வீடு சுத்தமாக இருக்கும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது எங்கள் வீட்டில்.. ஓய்வு நேரம் கிடைத்தால் தூங்கியே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு பாட்டியின் பெண்மை சொல்லிக் கொள்வதென்ன?

வீட்டில் முக்கியமான ஒருவர் இறந்து விட, வீடே பரபரத்துக் கொண்டிருந்தது எப்படி கிளம்பலாம் என… அந்த இக்கட்டான சூழலிலும் “பின்னாடி கதவை மூடனியா? பால் காரனுக்கு சொல்லிட்டியா? பணம் எடுத்துட்டியா?” என ஒவ்வொன்றாய் ஞாபகப் படுத்திக்கொண்டு என்னையும் அம்மாவையும் விரட்டிக் கொண்டிருந்தாள் பாட்டி..
இப்படி எந்த விஷயமாக இருந்தாலும், எந்த இக்கட்டான நேரமாக இருந்தாலும் செய்யும் வேலையில் ஒரு பூரணத்துவம் கொண்டு வரும் பாட்டிப் போன்றோரின் பெண்மையும், அதிசயங்களில் ஒன்று தானே?

*****************

குடும்ப உறுப்பினர் ஒருவரின் இழப்புக்குப் பின், எல்லாக் காரியங்களையும் முடித்த ஞாயிறு இரவு பத்து மணியளவில்..
இழப்பின் வலி ஒரு பக்கமென, கடமை ஒரு பக்கமென, காலை எழுந்து அலுவலகம், பள்ளி , கல்லூரி செல்ல வேண்டுமேயென வீட்டில் ஒவ்வொருவரும் மூளையில் வீங்கிய கண்களுடன் உறங்கப் போனோம்… மன அயர்ச்சியோடு உடலும் சோர்ந்து இருந்ததால், வெகு நேரம் உறங்கி கடைசி நேரத்தில் பறந்து பறந்து கிளம்பிக் கொண்டிருந்த போது தான் கவனித்தேன், எங்களை விட பல மடங்கு சோகத்திலும், உடல் சோர்ந்தும் இருந்த அம்மா வழக்கம் போல காலை எழுந்து காலை உணவையும், கட்டி செல்ல வேண்டிய மதிய உணவையும் தயாராய் வைத்திருந்தாள் என்று..

இடியே இடிந்து விழிந்தாலும், தன் கடமையை நேரந்தவறாது செய்யும் அம்மாவின் பெண்மையிடமிருந்து, நான் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் தானே?

*****************

உலக மகளிர் அனைவருக்கும் என் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்…



நன்றி,
நாணல்

Saturday 5 March 2011

க‌விஞ‌னும் காத‌லும்

“மனதிற்குப் பிடிக்காதது
மறதிக்குப் போகட்டும்”
என்றான் கவிஞன்;
எனக்கோ
பிடிக்காதவைகளை
உன்னுடன் பகிர்கையில்,
ந‌ம் நெருக்க‌ம்
கூடுமென்பதால்
பிடிக்காதவைகளும்
பிடித்தவைகளாகின்றன!

–00–00–

வார்த்தைக‌ளின் ஓட்ட‌ம்
குறையும் போது,
பிடித்த‌ எழுத்தாள‌ரின்
எழுத்தைப் புர‌ட்டும்
க‌விஞ‌னாய்,
வாழ்க்கையில் ஊட்ட‌ம்
குறைகின்ற‌ பொழுது
ந‌ம் காத‌லைப்
புர‌ட்டிக் கொண்டிருக்கிறேன் நான்!


ந‌ன்றி,
நாண‌ல்

Wednesday 2 March 2011

ரகசிய சினேகிதனே…

“வர வர
உன் ச‌மைய‌லின் ப‌க்குவ‌ம்
கூடிக்கொண்டேயிருக்கிற‌து”,
என‌
புக‌ழும் தாய்க்கு,
எப்ப‌டி சொல்லுவேன்
உன்னுடன் பேசிக்கொண்டே
சமைக்கும் போது மட்டுமே
சுவையும் கூடுகின்றதென்று!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வாச‌லில் நின்று கொண்டே
அவ்விலாச‌த்தைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருப்ப‌வ‌ளைப் போல்
என்னுள் இருக்கும்
உன்னைய‌றியாது
காதலைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!”

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

“எப்ப‌வுமே இப்ப‌டி தானா நீ?”,
என‌
நீ என்னைக்
கேட்கும் போதெல்லாம்
நீ என்ன‌ருகிலே இருந்தால்
ம‌ட்டுமே இப்ப‌டி
என‌ சொல்ல‌ விரும்பி,
“எப்ப‌வுமே இப்ப‌டி தான்”
என‌ ம‌ட்டும் சொல்லி
உனை என் கால‌த்துக்கும்
க‌ட்டிக்கொள்கிறேன்!


முந்தைய பதிவு -
1, 2,3


நன்றி,
நாணல்



Saturday 26 February 2011

உன் ஞாப‌கங்களும்!!

புது வருடம்
பிறந்தும்
தன்னையறியாது
வந்து விழும்
பழைய வருடத்தைப்
போன்றே,
பிரிந்த பின்பும்
என்னையறியாது
வந்து விழும்
உன் பெயரின் உச்சரிப்பு
நிலைநாட்டுமே
நம் எஞ்சிய நேசத்தை!!

#$%^&#@

திரையில்
சில நொடிகள்
தங்கி ஓய்வெடுத்து
புகைப்படமாகப்
பதிவான பின்
சரசரவென நகரும்
சாலையின் வாகனங்களைப்
போன்றே
உன் ஞாப‌கங்களும்!!

நன்றி,
நாணல்

Saturday 19 February 2011

(மூட)ந‌ம்பிக்கை

காலத்தே நிகழக்
கூடுமானவைகளுக்காக‌
காத்திருக்க பொறுமையிறாத‌
இடத்தே தான்
பிறக்கிறது மூட நம்பிக்கை!

தம் நம்பிக்கையால்
நிகழ்ந்த வெற்றியை
பிறரைப் பொறுப்பேற்றுகையில்
மூட நம்பிக்கையாய்
வடிவம் கொள்கிறது
நம்பிக்கை!

நன்றி,
நாணல்

Friday 18 February 2011

ரகசிய சினேகிதனே…

உன்னுடன்
தொலைபேசுகையில் ம‌ட்டும்
அருகிலிருக்கும் தோழிக‌ளின்
க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ முயற்சிக்கிறேன்,
ந‌ம்மைப் ப‌ற்றி
அவ‌ர்க‌ள் பேச‌விற்கும்
கேலிப்பேச்சிற்கு
வித்திடும் வ‌கையாய்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

விடிந்த‌தும்
அனுப்ப‌ வேண்டிய‌
காலை வ‌ண‌க்க‌
குறுஞ்செய்திக்காக,
இர‌வெல்லாம் க‌ண்விழித்து
யோசிக்கின்றேனே!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அவ‌சிய‌மில்லா போடாக்க‌ளும்
அவ‌ச‌ர‌மான‌ போடிக்க‌ளும்
நிலைநாட்டுமே
அவ‌ச‌ர‌வ‌சிய‌மான‌
ந‌ம் காத‌லை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தீண்ட‌ தீண்ட‌
இசைக்கும் வீணைப் போல்
பேச‌ப் பேச‌
உன‌க்கும் என‌க்கும்
காத‌லுக்குமான‌
புரித‌ல் நீள்கிறதே!

முந்தைய பதிவு - 1, 2


ந‌ன்றி,
நாண‌ல்

Thursday 17 February 2011

கடவுளின் பரிசு

என் சுயத்திற்கு
இழுக்கு வருமென‌
எனக்கு முன்னமே
சுதாரித்து
என் செய்கைகளைத்
திருத்துமென் தோழி!

–00–00–

ஆண் பெண் வேறுபாடுகள்
கடந்து
ம‌ன‌தின் சாட்சியாய்
பிர‌திப‌லிக்கும்
என் தோழ‌ன்!

–00–00–

எனைத் துர‌த்தி
விளையாட்டின் சூட்சும‌ம்
புரிந்த‌வன்,
இன்று
உன் குழ‌ப்ப‌ங்களைத் துடைத்து
ச‌ரியான‌ முடிவெடுக்க‌
நான் உத‌வுகிறேன்
என‌ சொல்லி
என் த‌ம்முன்னான‌
என் இளைய‌வ‌ன்!

–00–00–

ச‌ராச‌ரிக்கும்
மேலாவ‌ன‌ள் நானென‌ப்
ப‌ர‌ப‌ர‌த்துக் கொண்டிருந்த‌ என‌க்கு
என் ச‌ராச‌ரிக‌ளை
உண‌ர்த்தி
எனை மெருகேற்றும்
என் தோழ‌ன்!

ந‌ன்றி,
நாண‌ல்

Monday 14 February 2011

காதலித்துக் கொண்டேயிரு!

காதல் பாடல்களை
முனுமுனுத்தப் பள்ளிப் பருவத்தில்
காதலெல்லாம் ஒன்னுமில்லை,
புருஷனுக்கு கொடுக்குற காபியில
சர்க்கரை இல்லைனா
ஒரு சண்டை வரும் பாரு
அது தான் வாழ்க்கை,
மத்தபடி
காதல்னு ஒன்னுமில்லை
என்று சொன்ன தாயின்
பேச்சையும் பொருட்படுத்தியதில்லை !

சோர்ந்த கண்களோடு
எங்கே செல்லும் பாதை
எனப் பாடிக்கொண்டிருந்த
சேதுவைப் பார்த்தவாறே
பசங்க கிட்ட அதிகம்
வெச்சுகாதா,
படிச்சோமா வந்தோமா இருன்னு
தந்தை சொன்ன
மந்திரத்தைக் கேட்டதாக
நினைவில்லை கல்லூரிப் பருவத்திலே!

வாழ்க்கையின் தொடக்கம் தனில்
தமையன் சொன்ன
வாழ்க்கைக் குறிப்பையும்
குறித்ததாகச் சுவடில்லை,
சொந்தக் காலில் நிற்கத்
தொடங்கிய வேலைக் காலத்தில்!

நான் பட்டதெல்லாம்
போதும்
நீயும் காதலித்து
வேதனையில் மூழ்காதே,
அந்த வலி உனக்கு
வேண்டாம்என
பட்டறிந்த தோழி
சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் புரிந்ததில்லை
மயங்கியிருந்தகாலத்தில்!

மேற்சொன்னவையாவையும்
எதிர் காலத்தில்
நானும் உரைக்கத் தான் போகின்றேன்,
அதைக் கேட்கத் தான்
யாருமிருக்கப் போவதில்லை.

வலிகள் பல இருந்தும்
இழப்புகள் பல தந்தாலும்
வேதனைகள் பல உற்றாலும்
கசக்கும் மருந்துக்காய்
இனிப்பை ஒதுக்கா
குழந்தையைப் போல்
காதலித்துக் கொண்டேயிரு!


நன்றி,
நாணல்

Sunday 13 February 2011

மீண்டும் யாரோ ஒருவரால் …

எனக்கான
வரையறைகளும் அர்த்த‌ங்க‌ளும்
நான‌ல்லாத,
என் ப‌ங்குமில்லாத‌
யாரோ ஒருவ‌ரால்
தீட்ட‌ப்ப‌டும் போது,

அதை
கடைநிலை வாச‌கியாய்ப்
ப‌டித்து
முடியும் முடியாதெனப்
பல‌‌ பின்னூட்ட‌மிட்டு,

எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்களைச்
சொற்பிழையோ
அர்த்த‌ப் பிழையோ இல்லாது
பேசிப்,

புல‌ப்படாத‌
ப‌ல‌ உண‌ர்வுக‌ளை
அவ‌ர‌வ‌ர் விதிக‌ளுக்கேற்ப
அவரவர் புரிதலுக்கேற்ப‌
வெளிப்ப‌டுத்தி,

இனியிது போதுமென‌
ச‌ரிந்து சாய்கையில்,
என் சுய‌த்திற்கான
புதிய‌
வ‌ரைய‌றைக‌ளும் அர்த்த‌ங்க‌ளும்
மீண்டும் யாரோ
ஒருவரால் வ‌டிக்க‌ப்ப‌டுகின்ற‌து!

நன்றி உயிரோசை

ந‌ன்றி,
நாண‌ல்

Saturday 12 February 2011

ஜனித்தது என் காதல்..

அழகான‌
காதலியைக் கொண்டாடும்
அழகியோனைப் போலல்லாமல்
அழகான‌
காதலைக் கொண்டாடும்
உனக்காக
ஜனித்தது
என் காதல்!

சில நாள் கழித்துப்
பயணித்த பாதையிலிருந்த‌
முன்னேற்றங்களைப் போல்
சில நாள்
ஊடலுக்குப் பின்
ஜனித்திருந்தது
அதிகப்படியானக் காதல்!


நன்றி,
நாணல்

Tuesday 8 February 2011

ஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..

சில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியது.

பெண் என்றாலே மோகம் தரும் பொருட்களில் ஒன்று என்ற நினைப்பு எப்பொழுது மாறும்?

ஜனனம் தருவிக்கும் தாய் முதல் , தங்கையாய் , உற்ற தோழியாய் நம் அனைவரின் வாழ்விலும் பெண் ஒரு அங்கமாய்த்தானிருக்கிறாள். இருந்தும் அவளின் மென்மையான பெண்மை கேலிகூத்தாக ஆக்கப்படும் போது, இந்த சமுதாயத்தின் மீது எரிச்சலுடனான கோவம் தான் வருகிறது. பெண்ணியம், பெண் விடுதலை என முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு பக்கம் குரலெழுப்பிக் கொண்டிருந்தாலும் உண்மையில் தினசரி வாழ்வில் இந்த குரல்கள் எதிரொலிக்கப்படவில்லையென்று தான் தோன்றுகிறது. எனக்கோ என் தோழிக்கோ நிகழ்ந்தவை வைத்து இந்த பதிவை நான் எழுதுகிறேனா, என்றால், இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும், அப்படியிருப்பின் நிச்சயம் என் மனக்குமுறல்களாக என் நட்பின் வட்டத்திலேயே நின்று போயிருக்கும்.


  1. நம் வாழ்வின் அங்கமாகிப்போன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் பல விளம்பரங்களில்,தேவைப்படாத இடங்களில் கூட பெண்கள் இருப்பர். சில நேரங்களில், அது அவர்களின் வியாபர யுக்தி எனக் கொள்ளலாம் . ஆனால், வியாபாரத்திற்காக இப்படி ஒரு அட்டூழியம் தேவையா எனத் தோன்றுகிறது சிலவற்றைப் பார்க்க நேர்கையில். உடலின் வியர்வை நாற்றம் என்பது இயல்பே, இயற்கைக்கு மாறாய், அதை மறைக்க வாசனையூட்டும் திரவியம் அடித்துக் கொள்வது இந்நாளில் வாடிக்கையாகிவிட்டது. இந்த பொதுவான ஒன்றை வைத்துக் கொண்டு, ஆண்களின் வாசனைத் திரவியம் பெண்களைக் கட்டுப்பாடற்றதாக்கும் என்பது போன்ற சித்தரிப்புகள் என்ன சொல்ல வருகின்றன என்று தான் தெரியவில்லை. வெறும் வார்த்தையோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, அதை நிரூபிக்கும் வகையில் ஆணின் வாசம் நுகர்வதற்கு முன், நுகர்ந்த பின் என அந்தப் பெண்ணைக் காட்டும் கோலம், பெண்களைப் பற்றி அவர்களின் மனதில் உள்ள கேவலமான உணர்வின் உச்சக்கட்டமாகவேப் படுகிறது.

  2. தொலைக்காட்சியில் தான் இப்படி என்று புத்தகமாவாவது படிக்கலாம் என்றால் அது இன்னும் வெருப்பூட்டும் வண்ணமாகவே இருந்தது. கவிதை நூல் என்னும் வகையில் பெரிதாக எதுவும் படித்திடாத நான், இந்த ஆண்டு முதலேனும் படிப்போம் என்னும் ஆர்வத்தோடு வாங்கிய, கவிதைகளின் தொகுப்பு ஒன்றை முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்கினேன். பல பிரபலங்களின் வாழ்த்துரைகளைப் படித்துக்கொண்டிருக்கையில், ஆர்வ மிகுதியில் கவிதைகள் பக்கம் திருப்பிப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் அவரின் கற்பனையின் வெளிப்பாடான ஒவ்வொரு கவிதையையும் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். சில பக்கங்களைக் கடந்த பின், ஆண்களின் கவிதை உலகில் நிச்சயம் அடங்கியிருக்கும் பெண்ணைப் பற்றிய வர்ணிப்புகளும், அவள் சார்ந்த கற்பனைக் கவிதைகளும் இடம் பெற்றுக்கொண்டு இருந்தன. வர்ணனைகளின் உச்சக்கட்டமாக பெண்ணின் உடலமைப்பை பற்றியதாக சில கவிதைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்த விஷயம் சலிப்பைத் தர ஆரம்பித்தது. எனினும் முன்னுரையில் பல கவிஞர்கள் பாராட்டியிருந்தார்களே, ஒருவேளை அடுத்த தலைப்பின் கீழெனினும் வித்தியாசங்கள் தெரியுமெனப் புரட்டிக் கொண்டேயிருந்தேன். பெண் என்ற பொதுநிலையைத் தாண்டி தாயைப் பற்றிய கவிதைகளிலும் அதே வாடையடிக்க புத்தகத்தை மூடியவள், இன்னும் திறக்கவில்லை. சிற்றிதழில் வெளியான கவிதைகளைப் புரட்டலாமென்றால், அங்கேயும் காமத்தையும் தாயையும் ஒப்பிட்டாற் போன்ற கவிதை. எனக்கு புரியாத ஒன்று இது தான், புனிதமான உறவுமுறையான தாயைப் பற்றி எப்படி கற்பனையாகக் கூட அனாவசிய வார்த்தைகளை உபயோகிக்க முடிகின்றது.

  3. இப்படி ஒன்றுக்கொன்றாய் கூடிக் கொண்டே போக ரூட், ஃபிகர், கரெக்ட் பண்றது போன்ற வார்த்தைகள் இன்னும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளது. இப்படி பேசுவது சகஜமாகிவிட்டது தான். சகஜங்களையும் தாண்டிப் பார்க்கும் போது, புதிதாய் அறிமுகமாகி சில நாட்களாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், இப்படி ஒரு ஆண் பேசுகிறானென்றால் அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று தான் புரியவில்லை. இயல்பாய் பரஸ்பர புரிதலுக்கு பின் வெளிக்காட்டினால் தானே காதலுக்கு மரியாதை. தூண்டுச் சீட்டாய் ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து விருப்பமுள்ளவர் வாசியுங்கள் என்று சொல்வதற்கு பெயர் என்ன? தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் வார்த்தை ஜாலங்கள் காட்டுவதனால் என்ன நேரப்போகிறது. ஒரு சில காலக் கட்டத்திற்கு பின் இப்படி பேசும் ஆணின் மீதான மரியாதை குறையத் தானே செய்யும்.


மேற்சொன்னவையாவும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையேயான மெல்லிய இடைவெளியாகவே படுகிறது எனக்கு. இருக்கும் இரு பாலினற்கிடையில் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். பெண்கள் உலகில் ஆண்கள் யாரென புரிந்து கொள்ள விரும்பும் ஆண்களைப் போன்று தான் ,ஆண்கள் உலகில் பெண்கள் யாரென அறிய முயற்சி செய்கிறேன். ”ஆண்களே இல்லாத உலகம் செல்ல வேண்டும்” என்று பெரும்பாலும் ஒரு ஆணிடம் தான் சொல்லிக் கொண்டிருப்பேன். வாதத்திற்கு என வீண் வாக்குவாதங்கள் செய்யாது, என் மனநிலையை புரிந்து விளக்கமளிக்கும் சில ஆண் தோழர்கள் இருக்கின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயமாகத்தானிருக்கிறது.இருந்தும் தோழன் என்ற நிலையைத்தாண்டி ஆண் என்று வரும் போது தோழனும் புரியாமல் போவது சில நேரங்களில் நிகழ்கிறது.


ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை எனக்கு. வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும், பெண்களின் உலகில் ஆண்களின் பங்கு பெருவாரியாக நிச்சயம் இருக்கும். அதை இன்னும் முதிர்ந்த புரிதலோடு அணுகவேண்டும் என்பதற்கான துவக்கமே இது.


நன்றி,

நாணல்


Tuesday 25 January 2011

பேருந்தில்..

ஒரு பன்னிரண்டு ரூபாய்
பயணச் சீட்டில்
அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு
பயணிக்கும் இருவர்,
ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை
ஜீர‌ணித்துக்கொண்டும்
சில்ல‌றையில்லையென‌ வாதிடும்
ச‌க‌ப‌ய‌ணியின் வ‌ழ‌க்குக்கு
தீர்ப்ப‌ளித்துக்கொண்டும்
ஒவ்வொரு நிறுத்த‌ங்க‌ளிலும்
இற‌ங்கிகொண்டு
அடையாரிலிருந்து கொண்டே
கைபேசியில் உரையாடிக்கொண்டே
என்னுட‌ன் ப‌ய‌ணிக்கிறாள்
என் தோழி.

‰00‰

விழித்திருந்தால்
ம‌னிதாபிமான‌த்துகாய்
இருக்கை ப‌றிபோயிடுமென‌
தூங்காது தூங்கிய‌
நிலையில் நான்!

ந‌ன்றி,
நாண‌ல்

Sunday 23 January 2011

ரகசிய சினேகிதனே…

தினம் பேசும் தோழிக்கு
ஏனோ இப்போதெல்லாம்
நான் பேசுவது புரிவதில்லையாம்
அவளுக்கெப்படி சொல்வேன்
என்னுள் இருக்கும் நீ
தான் இப்போதெல்லாம்
என்னையும் மீறி அதிகம்
பேசிக்கொண்டேயிருக்கிறாய் என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

செல்லப் பெயர்கள்
பல கொண்டு விளித்தும்
ஊடல் பொழுதுகளில்
மெளனமாக உனைக் கொல்லும்
விழிகளின் விளிப்பு தான்
பிடிக்குமென்கிறாய் நீ

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வேற்றுமைகளற்ற வேற்றுகிரக
மனிதர்களாய்
நம் முன்னோடிகளான
ஆதிவாசிகளாய் அலைகின்றோம்
நம்மை மறந்து
நாம் மறைந்த நேரங்களில்

முந்தைய பதிவு - 1

நன்றி,
நாணல்



Tuesday 4 January 2011

இய‌ந்திர‌மாய் மாறிய‌து போதும்

ந‌ண்ப‌ர்க‌ளே,

2011 இன் இந்த முதல் பதிவு, மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது.


முதல் கற்றலின்

எழுத்துக்களை

வீட்டுச்சுவரில் சித்திரங்களாய்

வடித்து பத்திரப்படுத்தும்

குழந்தையைப் போல்

எனது கிறுக்கல்கள்

புத்தக வடிவாய்..




சென்னை ம‌ணிமேக‌லைப் பிர‌‌சுர‌ம் மூல‌ம் ‘இய‌ந்திர‌மாய் மாறிய‌து போதும்’ என்னும் த‌லைப்பில் வெளிவந்துள்ளது.

இன்று முதல் நடக்கவிருக்கும், சென்னை புத்த‌க‌ க‌ண்காட்சியில் ம‌ணிமேக‌லைப் பிரசுர‌த்தில்(Stall No: F30) கிடைக்கும். புத்த‌க‌மாய் வ‌ரும‌ள‌விற்கு என் க‌விதைக‌ள் வ‌ளர்ந்துள்ள‌தா தெரியாது..சிறு பிள்ளை முய‌ற்சியென‌ இதில் இற‌ங்கினேன். ப‌டித்து நிறை குறை கூறுங்க‌ள், க‌ற்றுக்கொள்கிறேன்.


நன்றி,

நாணல்