Tuesday 28 December 2010

இயற்கை வாழ்வு

தன் தங்கக் கிரணங்களைக்
காற்றோடு உறவாடி,
கிரணன்
இசைப் பரப்பிக் கொண்டிருக்க,
கற்றவன் பண்பின் அடையாளமாய்
தலை சாய்ந்த உயிரின்
சிரத்தில்
ஒன்றோடு ஒன்று
பேசிக் கொண்டிருந்தன
நெல் மணிகள் !


மண்ணின் களை மாறாது
களையறுத்துக் கொண்டிருந்தாள்
செல்லாத்தாள் பாட்டி...


தென்றலின் கிளையாக
தன் கிளைமலருக்காய்
தாலாட்டு பாடிக் கொண்டிருந்தாள்
கமலாக்கா...


புல்லுக்கு உயிராய்
ஒடிக்கொண்டிருந்த
வாய்க்கால் நீரை வெட்டி
பயிருக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தார்
கந்தவேல் மாமா...


அவரவர் வேலை முடிந்ததும்
உழைத்த களைப்பாற
கட்டிய சோறை
உற்சாகமாய்
உண்டு் களித்தனர்...


எரிந்த கதிரவனுக்கு
விடைகொடுத்து
தணிந்த நிலவினை
தூரிகையால் வறவேற்றுக் கொண்டிருந்தார்
ஓவியர்
சென்னையின் அண்ணா சாலையில்...


நன்றி உயிரோசை..


நன்றி,

நாணல்


Saturday 25 December 2010

இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்

இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’

‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’

இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு நிமிட கோபம் என்னையும் மீறி வரத் தான் செய்கிறது. அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் நான் குறை கூற விரும்பவில்லை. ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், ’ஆணோ பெண்ணோ காதலும் காதல் தோல்வியும் ஒன்று தான்.. சில இடங்களில் ஆண், பெண்ணை சில காரணங்களால் பிரிகிறான், பெண் சில நேரங்களில் பிரிய நேர்கிறது.

ஆனால் பெரும்பாலும் ஏனொ பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர் :( எனக்கு தெரிந்த காதல் கதைகளில், விட்டொழிந்த ஆண்களும் உள்ளனர், பெண்களும் உள்ளனர். அப்படியிருக்க ஏன் பெண் வர்க்கத்தை மட்டுமே குறை கூறுகிறீர்கள். :(

  • பெண்களுக்கு காதல் தோல்வியைத் தரும் ஆண்களே இல்லையா?
  • ஆண்கள் ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலிப்பாங்களாம், அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொன்னா, ஏன் அப்படி சொன்னா, உண்மையிலயே அவ மனசுல இவன் மேல அப்படி ஒரு எண்ணம் இருக்கான்னு தெரிஞ்சுக்காம, உடனே ‘மச்சான், அவ என்னை ஏமாத்திட்டான்னு, ஊர் பூறா அவளை வம்பிழுக்க வேண்டியது’.எனக்கு புரியாத ஒன்னு, காதலித்த பெண்ணைப் பற்றி எப்படி பிறரிடம் வம்பு பேச முடிகிறது?
  • தெரியாத பெண்ணிக் காதலிச்சவங்களே இப்படி இருக்கும் போது, நண்பர்களா அறிமுகமாகி, தோழின்ற உறவுல இருந்து காதலின்ற உறவுக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டத்துல, அப்படி செய்ய விரும்பாதவர்கள் ஒரு பக்கம். மனதிற்குள் அவள் தோழி மட்டுமில்லைன்னு தெள்ளத்தெளிவா தெரியும் , ஒரு கட்டத்துக்கு மேல அவள் என் தோழி மட்டுமேனு ஏமாத்திக்க முடியாத கட்டம் வரும். அப்ப முன்னெச்சறிக்கையோட ‘உன் கிட்ட அந்த எண்ணத்துல பழகலை’ தோழியா மட்டும் தான் பார்த்தேன். அப்படி இப்படின்னு வெட்டி வசனம் பேச வேண்டியது. உடனே அந்தப் பொண்ணும் ஒன்னும் சொல்லாம, அமைதியா போயிட்டா, அவ தப்பிச்சா, இல்லை எதிர் கேள்வி கேட்டா, அவளை எவ்வளவு தூரம் உதாசினப்படுத்தி அவ பெண்மையை கொடூரமா மாத்த முடியுமோ, அவ்வளவு கொடுமையா மாத்தி ‘அந்த பொண்ணு டார்ச்சர் தாங்ககலைடானு’ நண்பர்கள் மத்தியில அவ மென்மையை கேலிக்கூத்தாக்க வேண்டியது. இது எந்த ஊருல நியாயம்?
  • சரி தப்பித் தவறி ஒரு பொண்ணு தன் காதலை முதல்ல சொல்லிட்டா, அப்புறம் கதையே வேற. முதல்ல ஒரு பொண்ணு நம்மளையும் மதிச்சு காதலிக்கறான்ற மிதப்புல சுத்த வேண்டியது. அப்புறம் அப்புறம் தான் அவனோட குடும்பம்,அவன் பார்க்கிற வேலைனு எல்லாம் நியாபகதுக்கு வரும், அப்புறம் மேல சொன்ன மாதிரி உஷாரா வசனம் பேசிட்டு கழட்டி விட வேண்டியது. தனக்கு பிடிச்சவன் மேல காதலைப் பொழிஞ்சது தான் அந்தப் பொண்ணு செஞ்ச தப்பா?

இப்படி பல கேள்விகள் பல நாளா என் மனசுக்குள்ள பதிலில்லாம இருந்தாலும், என்ன இருந்தாலும் ஆண்கள் என்றுமே எனக்கு புரியாத புதிர் தான். அதனால அவங்க எப்படி வேணா இருக்கடும்.

இந்த ஆண்களே இப்படி தான்’

‘ஆண்ககளைப் புரிஞ்சுக்கவே முடியலை’

போன்ற வசனங்களில் எனக்கு பெரிதாக உடன் பாடுமில்லை.

அதனால் பெண்கள் மீது சுமத்தப் பட்ட குற்றத்திற்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். பெண்களும் காதலில் ஏமாற்ற்ப்படுகிறார்கள், ஆனால் அவை ஏன் வெளியில் வருவதில்லை என்பதற்கான பட்டியல் தான் கீழே..

  • ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப் பட்ட சமுதாய சூழலில் பெண் தன் குரலை உயர்த்திக் கூட பேச முடியாத நிலையில். எப்படி தனக்கு நிகழ்ந்த தோல்வியை பலர் முன்னிலையில் ஒப்புக் கொண்டு அதற்கு காரணமான ‘ஆணைக் குறித்து குறை கூற முடியும்?’ இதனால் பல கதைகள் வெளி வராமல் போவது சாத்தியம் தானே?
  • ஒரு பெண் , தன் கணவனிடம் தன் பழைய காதலைச் சொன்னால், எத்தனை ஆண்கள் சரியாக எடுத்துக்கொள்கிறார்கள்.சந்தேகத்தின் பேரில் அவளை அனு அனுவாய் சாகடிக்க வேண்டியது. ’ஈரம்’ படம் இதற்கு ஒரு நல்ல அத்தாட்ச்சி. கணவனின் பழைய வாழ்க்கையை, மனைவி தெரிந்தும் தெரியாது போல் நடந்து கொள்ள வேண்டும் ஆனால் கணவனால் மனைவியின் பழைய வாழ்க்கையை தெரிந்து கொண்டு அவளின் நிகழ் கால வாழ்க்கையை அமைதியாய் நகர்த்த அவனின் கர்வம் இடம் தருவதில்லை. இப்படி தன் கணவனுக்காக பயந்து வேற்று ஆணால் ஏற்பட்ட காதல் தோல்வியை வெளியில் சொல்ல பல பெண்கள் துணிவதேயில்லை.
  • எல்லாவற்றுக்கும் மேல் கற்பு என்ற ஒன்று, பெண்ணுக்கு மட்டும் தான் முக்கியம் என மாதிரியான எண்ணங்கள் மேலோங்கியுள்ள இந்த சமூகத்தில், பெண் காதலித்தாள் என்றால், அதை ஒரு இழுக்காகவே எண்ணு்கிறது. ஏன் அவளின் பெற்றோர் கூட, எப்படியாவது அவசர அவசரமாய், மூடி மறைத்து அவளை வேறு இடத்தில் கட்டிக் கொடுப்பதில் தான் குறியாய் இருப்பர். பெண்ணுக்கு மனமிருக்கிறது என்பது பல இடங்களில் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. :(
  • தப்பித் தவறி தனது பழையக் காதல் பற்றி அவளின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு சொன்னால், அன்றைய தினம் ஏதோ தியாகி உணர்வு கொண்டு, அவளுக்கு வாழ்வு கொடுப்பதாய் தனக்குள் பெருமிதங் கொண்டு திருமணம் செய்து கொள்வான். அந்த பெருமித எண்ணம் எத்தனை நாள் அந்த பெண்ணை நிம்மதியாய் வாழ விடும் என்பது நேரத்திற்கு தான் வெளிச்சம்.
  • பொதுவாகவே பெண்களுக்கு பொறுப்பு சிறு வயது முதல் நிச்சயம் அதிகம் தான், ஆண் குழந்தை வளர்ப்பிற்கும் பெண் குழந்தை வளர்ப்பிற்கும் இன்னும் சமுதாயத்தில் வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. குடும்பத்தின் குத்து விளக்காய், குடும்ப மானத்தின் சின்னமாய் அவள் வளர்க்கப்படுகிறாள். அப்படியிருக்கையில், காதலிப்பதே பெருங்குற்றம், காதலில் தோற்று பொறுப்பற்று புலம்பிக்கொண்டு இருக்க முடியுமா… முடியாது… காலத்தின் வேகத்தோடு அவள் தன்னை செதுக்கிக் கொண்டேயாக வேண்டிய கட்டாயம் வேறு..இப்படி எத்தனையோ சோகங்கள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிச்சயம் இருக்கும்..கேட்டுப் பாருங்கள் தெரிய வரும் .
  • பெரும்பாலும் ஆணுக்குப் பல கனவுகள் இருக்கும் , இலட்சியமிருக்கும். பெண்ணுக்கோ திருமணம் என்ற ஒன்றோடு அவளின் பெரும்பாலான கனவுகள் முடுக்கி விடப்படும். திருமணம் மட்டுமே குறிக்கோள் என வளர்க்கப் பட்ட நிலையில், தோற்ற காதல் பற்றி சொல்லி ஏன் தனக்கும் தன் பெற்றோருக்கும் தர்ம சங்கடத்தை தர வேண்டுமென மனதில் பூட்டிக் கொள்ள வேண்டி வரும்.
  • சில பெண்கள் உறுகி உறுகி காதலித்து விடுவார்களா, தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தன் காதலனுக்கு ஒன்றும் ஆகக் கூடாதென உணர்வுகளின் அடிமைகளாய் மாரியிருப்பர். இன்னிலையில் அவன் ஏமாற்றி விட்டாலும், நான் ஏமாந்ததற்கு அவனென்ன செய்வான் என பரிதாமான பதிலை சொல்லி சமாதானம் செய்து கொள்வர்.
  • ஊடகத்துறையிலும் ஆண்களே ஆட்கொண்டு நிலையில் நிச்சயம் அவர்களின் மனதில் இருப்பது தான் படமாகவோ,நாடகமாகவோ வெளிவரும்.அவர்களால் ஊகித்துவிட முடியா பெண்ணின் மன நிலையை எப்படி சமூகத்தில் கொண்டு வர முடியும்.

இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம், புரிந்து கொள்ள முயற்சிக்காமல், விவாதம் செய்பவர்களுக்கு பெண்கள் ஏமாற்ற்க்காரர்களாகவே இருந்து விட்டு போகட்டும், அவர்களைப் பற்றி கவலையில்லை எனக்கு. புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிலராவது, சிலப் பெண்கள் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த பெண்ணினத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என சொல்லும் நோக்கோடு எழுதப்பட்டதே இந்தப் பதிவு.

நன்றி,

நாணல்



Saturday 18 December 2010

ரகசிய சினேகிதனே…

‘ஆயிரம் முறை திருடிய
அதிசயத் திருடன் கைது’
செய்தி பார்த்ததும்
பதறித்தான் போனேன்
ஆயிரம் முறை என் இதயத்தை
திருடிய அதிசயத் திருடன்
உனையும் கண்டுகொள்வரோ என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீயும் கவிஞனென
தெரிந்ததில் இருந்து
அவசர அவசரமாய்க்
கவிதை உருப் பெறுகின்றது
நம் உரையாடல்கள்
என் கவிதைப் பக்கத்தில்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தொழில்நுட்பத்தின் புரட்சி
உனை என்றும் என்னருகில்
இருக்கவைத்தாலும்
என் வெட்கங்களையும்
என் மெளனங்களையும்
மொழிபெயர்க்க முடியா கைபேசி
சொல்கிறது தொழில்நுட்பம் இன்னும்
வளர வேண்டுமென


நன்றி,
நாணல்

Monday 6 December 2010

உதான் - Udaan



சிறகிருந்தும் பறக்க ஆசையும், கனவுகளும் இருந்தும் பறக்க முடியா ரோஹனையும் அர்ஜுனையும் சுற்றி நகர்கின்ற கதை. றோஹன் பதினேழு வயதான , அந்த வயதுக்கே உரிய கிண்டல் கேலியென எல்லாமும் நிறைந்த ஒருவன். ரோஹனும் அவனின் நண்பர்களும், சுவறேறி படம் பார்க்கச் சென்றதனால் பள்ளியில் இருந்து நீக்கப் படுகிறார்கள்.ஜாம்ஷெட்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தவுடன் ரோஹனுடன் சேர்த்து நமக்கும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ரயில் நிலையத்தில் வந்திருந்த தனது அப்பாவை வேற்று மனிதாய் பார்க்கும் ரோஹனின் கண்களில் தெரிகிறது, கண்டிப்பான அப்பாவின் உருவம். பிறகு தான் தெரிகிறது மகனைத் தந்தைப் பார்த்தே எட்டு வருடங்கள் ஆகின்றதென்று. இதைத் தெரிந்தப் பின் 'என்ன அப்பா இவர்' எனத் தோன்றுகிறது.

வீட்டிற்கு சென்ற பின் அதிர்ச்சியின் அடுத்த கட்டமாய், ரோஹனின் அறையில் ஒரு 5 வயது சிறுவன் அர்ஜுன். அப்பாவிடம் விசாரித்ததில் அர்ஜுன் தனது தம்பியென்று தெரிகிறது. ரோஹனின் அம்மா இறந்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அதுவும் நிலைக்கவில்லையெனவும் தந்தை சொல்கிறார். தனக்கு தெரியாமல் தனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்பதில் தொடங்குகிறது ரோஹனின் கூண்டுப் பயணம். கொடுமையின் உச்சக்கட்டமே பெத்த மகன்கள் தன்னை அப்பா என்று அழைக்காமல் 'சர்' என்று தான் அழைக்க வேண்டும் என கொடுரத் தந்தை ஆணையிடுகிறார். வீட்டில் அவருக்கு மட்டும் தான் கேள்வி கேட்க அதிகாரமுண்டு. இலக்கியம் படிக்க விருமும் ரோஹனை தனது ஃபாக்டரியில் காலை வேலை செய்யும் படியும் மதியம் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். அவருடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி எப்படி அவரை வெல்கிறான் என்பது தான் கதை. பார்க்கும் நமக்கே அந்த வீட்டில் இருந்து எப்பொழுது தான் வெளிவருவோமென ஒவ்வொரு காட்சியும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

5 வயதேயானாலும், அடி மேல் அடி வாங்கி சிரிக்கக் கூட மறந்திருந்திருந்தான் அர்ஜுன். சாவி கொடுத்த பொம்மையென அப்பாவின் கட்டளைகளுக்கு உட்பட்டு ஒரு வட்டத்தில் சிக்கியிருந்தான். ரோஹனின் வருகைக்குப் பின் பேச ஒரு ஆளாவது கிடைத்தானனென தன் தந்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவ்வப்பொழுது சொல்வான். ஆரம்பத்தில் தந்தை மேலிருந்த வெறுப்பை அர்ஜுன் மீது காட்டினாலும், நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். குறைவான வசனங்களானாலும் தனது சுட்டி நடிப்பால் படம் முடிந்த பின்னும் கண்களில் அர்ஜுனின் முகம் நிழலாடுகிறது.

ஒரு கட்டத்தில் தனது இந்த கொடுரத்தனத்திற்கு தனிமையைக் குற்றம் சாட்டி தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் தந்தை. திருந்திவிடுவார் , படம் முடியுமென பார்க்கையில் அடுத்த திருப்பமாய் , தான் மறு கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய் சொல்கிறார். அர்ஜுன் போர்டிங் பள்ளிக்கு செல்ல வேண்டுமென நிர்ண‌யிக்கிறார். பொறியியல் படிப்பில் தேறாததால் ரோஹனை முழு நேரம் தன‌து ஃபாக்டரியில் பணி புரிய ஆணையிடுகிறார். மற்றவர் புகழும் தன் எழுத்தை தன் தந்தை உதாசினப் படுத்தும் போதெல்லாம், அவரை எதிர்க்க தைரியமில்லாமல் நொந்து போகிறான் ரோஹன்.

தன்னுடன் பயின்ற நண்பர்கள் மும்பையில் சொந்தமாக ஹோடெல் நடத்துவது தெரிந்து அங்கு செல்வதென ஒரு மனதாய் முடிவெடுக்கிறான். வீட்டை விட்டு ஓடி வருகையில் தன்னை துற‌த்திவரும் தந்தையை வென்று முதல் வெற்றியோடு புன்னகைக்கிறான். மறு நாள் அர்ஜுன் போர்டிங் செல்ல தயாராகிறான். இதற்கிடையில் ரோஹன், அர்ஜுனிடம் என்னுடம் வருகிறாயா இல்லை தந்தை சொல்வழி போர்டிங் செல்கிறாயா எனக்கேட்கையில் யோசிக்காது உன்னுடன் வருகிறேன் எனச் சொல்லும் போது அன்பின் நிலை தெரிகிறது.

மூவரைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் அன்பே மையமாக் கொண்டது இந்தப் படம். தந்தைக்கும் ரோஹனுக்கும் 'பொய்' பற்றிய உரையாடல் அருமை. அவ்வப் பொழுது படித்துக் காட்டும் ரோஹனின் கவிதைகளும் கடைகளும் அருமை. ரோஹனை உற்சாகப் படுத்தும் தந்தையின் நண்பர் கதாபாத்திரமும் அருமை, இருந்தும் மூர்க்கதனத்திற்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. புன்னகை மறந்த அர்ஜுன். மூர்க்கத்தனத்தின் முழு உருவமாய் அப்பா.

மூர்க்கனிடமிருந்து விடுதலைப் பெற்று ரோஹனும், அர்ஜுனும் எப்படி பறக்கிறார்கள் என்பது தான் 'உதான்'.

பி.கு: ஜூலையில் 2010 இல் வெளியான இப்படத்தைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். அன்பின் நிலை குறைந்துக் கொண்டே வரும் சூழலின் நிஜமாய் இந்தப் படம். சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. இன்னும் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த பதிவை எழுதுகிறேன். அன்பை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

நன்றி,
நாணல்