Thursday 31 December 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....


பகலில் தெரியும்
நிலவைப் போல்
இப்பூவுலகில் எல்லாமும்
உன் கண் முன்னே
தான் கொட்டியிருக்கு...
பார்க்கும் உன் பார்வையையும்
தேடும் உன் இடத்தையும்
கொஞ்சம் விடாமுயற்சியோடு
திருத்திக் கொண்டேயிரு...
உன் தேடலுக்கு
விடை பிறக்கும்....


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


நன்றி,
நாணல்


Tuesday 29 December 2009

என் தாயவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக

என்னைத் தாலாட்டி
உறங்க வையடி நீ,
என்னைத் தாயாக்காதே,
தாலாட்டு பாடிட
தெரியாதம்மா எனக்கு!

பனிச் சிற்பம்
போல் நீ
இருந்தால் போதும்,
நீ உருக வேண்டாம்,
உனக்காக நான்
உருகுவேனடி !

என்னை உருவாக்கியவள்
தாயாயின்,
எனக்கு உருதந்தவகையில்
நீயும் எனக்கு
தாய்தானம்மா !

என்னைக் காத்தவளே..
எனக்காகக் காத்திருப்பவளே...
எனை மட்டும் காத்திரு,
எனக்காக மட்டும் காத்திரு !

நேசங் கொண்ட
தோழியாய்
பாசங் கொண்ட
காதலியாய்
உனை இழக்க
நான் துணிந்தாலும்,
தாலாட்டும் தாயாய்
எங்கனம் இழப்பேன் !!

நன்றி,
நாணல்

Wednesday 2 December 2009

நீ, நான், நாம்....



நீ நான் என
பிரித்தறியா நாட்களில்
நாமாக நமக்களித்த
இன்ப துன்பங்கள்
இன்று
துன்ப இன்பங்களாய்
உருவெடுத்து
நீயும் நானும்
மீண்டும் நாமாகும்
நாளுக்காக தவமிருக்கின்றன...


நன்றி,
நாணல்

Monday 2 November 2009

பாதைகள்...


என் பாதைகளை புதுபித்தாய்
அதில் பயணம் செய்ய
ஏனோ மறுத்திட்டாய்
நினைவுகளாய் உன்
சுவடுகளை பின்பற்றுகிறேன்
உன் நினைவுகளை
மட்டுமாவது
சுமக்கும் சுகமான
வாழ்க்கை கிட்டுமென...

படம் : http://mymistakes.blog.co.in/files/2009/08/pathway.jpg

நன்றி,
நாணல்

Wednesday 21 October 2009

என்னில் நீ ...

மழைகூட பல நேரம்
முன்ன‌றிவிப்போடு தான் வ‌ரும்...
நீ
வந்ததும் தெரிய‌வில்லை
என்னுள்
சென்ற‌தையும் அறிய‌வில்லை..
இன்று,
என் உயிரின் அணுவாய்
கலந்தேபோனாய்...
உனை என்னில்
பிரித்தரியும் ச‌க்தி
இயற்கைக்கு இருக்குமானால்
வணங்குவேன் இயற்கையை...

நன்றி,
நாணல்

Wednesday 14 October 2009

கருணைக் கொலை

தன் சட்டைப்பையில் இருக்கும் அலைபேசி ஒலிக்க…

“ஹெல்லோ”

“ஹெல்லோ, கணேஷ்? “

“கணேஷ் தான் பேசுறேன், நீங்க?”

“கணேஷ், நான் கீதா.. உங்க கூட கல்லூரியில படிச்ச கீர்த்தியோட ஃப்ரெண்ட்“

கீதாவா... இப்ப எதுக்கு இவங்க நமக்கு கூப்பிட்டு இருக்காங்க... கீர்த்திக்கு ஏதாவது..... சே சே..அதெல்லாம் ஒன்னும் இருக்காது... அவ நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும்... சரி, கீதா என்ன தான் சொல்லவறாங்கன்னு கேப்போமே....

“சொல்லுங்க கீதா..”

“கணேஷ்...கீ ர் த் தி.... கீ ர் த் தி க் கு..”

“கீர்த்திக்கு.... ”

கீதா இப்படி தயங்கி தயங்கி பேசுவது கணேஷுக்குள் ஏதோ செய்ய..

“சொல்லுங்க கீதா, கீர்த்திக்கு என்ன ஆச்சு....”

“கீ ர் த் தி..................................… கீர்த்தியை ஒரு லா ரி மோ தி டு ச் சு… ”

இதைக் கேட்டவுடன் உலகமே இருட்டானதை போல் உணர்ந்தான் கணேஷ்... மேலே கீதா சொன்னது எதுவும் காதில் விழாது, கீர்த்தி இருக்கும் மருத்துவமனை விலாசத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, உயிரைப் பறி கொடுத்தவன் போல் தன் அலுவலகத்திலிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டான்....

”கீர்த்திக்கா...கீர்த்திக்கா இப்படி....ஏன் கடவுளே....என் கீர்த்திக்கு இந்த நிலைமை.......கீர்த்திக்கு ஒன்னும் ஆகாது....இல்லை இல்லை அவ நல்லா இருப்பா..நிச்சயம் நல்லா இருப்பா...எப்படியெல்லாம் வலியில துடிச்சுகிட்டிருக்காளோ.. பாவம்..கடவுளே அவளைக் காப்பாற்று...என் ஆயுசையும் அவளுக்கு கொடுத்திடு.. கீர்த்தி நல்லா இருக்கா...ஆமா கீர்த்தி இஸ் ஃபைன்....”

இப்படி மாறி மாறி கண்ணீருடன் புலம்பிய வண்ணம் சென்று கொண்டிருந்தான்....நான்கு ஆண்டுகளாய் மனதில் பூட்டி வைத்த காதலும் பாசமும் நேசமும் அவனின் அனுமதியில்லாமல், கண்ணீராய்ப் பெருகிக் கொண்டிருந்தது....

கணேஷிற்கு இப்பொழுது வேண்டியது தனிமையாதலால், அவனை தனியாய் விட்டுவிட்டு கணேஷ் யார் என்பதையும், மருத்துவமனையில் இவனின் வருகைக்காக "போகின்றேன்" என்று சொன்ன உயிரை நிறுத்தி வைத்திருக்கும் கீர்த்தி யார் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக 18ல் அனைவருக்கும் வரும் காதல் வியாதி இவர்களையும் விட்டுவைக்கவில்லை... கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று தான் கணேஷ் கீர்த்தனாவை முதன்முதலில் சந்தித்தான்...

எல்லோரும் பாராட்டும் அழகில்லையெனினும், ஒரு முறை பார்ப்பவர்கள், மீண்டும் பார்க்கத்தூண்டும் வசீகரம் நிறைந்த முகம்...சாந்தமான பார்வை...யாரிடமும் அதிகமாய் பேசிடாத அடக்கம்...ஆனால் அவளுடன் நட்பாகிவிட்டால், ”கீர்த்தி சொன்னா சரி தான்” என்று சொல்லும்வண்ணம் அவளின் அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவர்...வீட்டிற்கு ஒரே செல்ல பெண் என்பதாலும், பல சரியான முடிவுகளை தைரியமாய் எடுக்கும் புத்தி கூர்மையுடையவள் என்பதாலும், அப்பா அம்மாவிடமும் இவள் வைத்தது தான் எழுதபடாத சட்டம்... உண்மைக்கும் தன் மனசாட்சிக்கும் தலை வணங்குபவள்... தான் செய்தது தவறெனின் சிறு குழந்தையிடம் கூட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டாள்…தான் செய்வது சரியெனின் அதை யார் தடுத்தாலும் செய்வாள்..

கணேஷ், ஐந்து நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியாது பேசிக்கொண்டே இருப்பான், அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்... எளிதில் அனைவரிடமும் நட்பாகிவிடுவான்...”டே மச்சான், எனக்கு ஒரு உதவி” என யார் வந்தாலும் புன்னகை மாறாது உதவுவான்...அப்பாவிடம் பாசத்தைவிட ஒருபடி மேலான மரியாதையையும் அதைவிட ஒருபடி மேலான பயபக்தியும் கொண்டவன்...அம்மா தான் இவனின் முதல் தோழி.. ஒரு நாள் தவறாது பள்ளி, கல்லூரி என வெளியில் நடக்கும் அனைத்தையும் அம்மாவிடம் பகிர்ந்தால் தான் அன்று நாள் பூர்த்தியடைந்ததாய் உணர்வான்..அப்பா அம்மாவை சுற்றி தான் இவனின் உலகம் பொதுவாக இயங்கிக் கொண்டிருக்கும்.... வீட்டின் முதல் வாரிசென்பதால், அவர்களின் பிரதிநிதியாகவே கணேஷைப் பார்ப்பர்...கணேஷும் அதற்கேற்றார் போல் வயசுக்கு மீறிய முதிர்ச்சியுடையவன்..எதையும் யோசித்து சரியான முடிவெடுக்கும் மனப்பக்குவம் கொண்டவன்..

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்ற இயற்கையின் நியதியை உண்மையாக்குவதைப் போல், கலகலவென பேசிக்கொண்டிருக்கும் கணேஷிற்கு அமைதியாய் இருந்த கீர்த்தி மிகவும் வித்தியாசமாய்த் தென்பட்டாள்…அவனையறியாமல் கீர்த்தியினால் ஈர்க்கப்பட்டான்.. இவளை எப்படியாவது பேசவைக்க வேண்டுமென, அவளிடம் பேச்சு வளர்த்துக்கொண்டே இருந்தான்... ஆரம்பத்தில் கீர்த்தி சரியாய்ப் பேசாவிட்டாலும், சில நாளில் கணேஷின் பேச்சிற்கு ஈடுகொடுக்க ஆரம்பித்து விட்டாள்... இப்படி போட்டியாக ஆரம்பித்த இவர்களின் பேச்சு எப்பொழுது உண்மையான நட்பானதென்று இவர்களுக்கே தெரியாது.... கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும், நட்புக்கு ஒரு புது இலக்கணம் வகுத்து நட்பின் அடையாளமாய்த் திகழ்ந்தனர்...

கீர்த்திக்கு எதிர்காலத்தை பற்றி பெரியதாய் கனவு இருந்ததாக தெரியவில்லை...படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டுமென்பது வரை தான் அவளின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.. இதிலும் கணேஷ் இவளுக்கு எதிர் துருவமே... இறுதியாண்டு படிக்கும் போதே தன் எதிர்காலத்தை திட்டமிட்டிருந்தான்... அப்படி அவன் மனசுக்குள் இருந்த அந்த கனவு தொழிற்சாலை பற்றி கீர்த்தியிடம் பகிர்ந்துகொள்ள மறந்ததில்லை...

“கீர்த்தி, நான் ஆட்டோமொபைல்ஸ்ல சில்லறை வியாபாரம் செய்யலாமுனு இருக்கேன்... அப்பாகிட்டையும் கேட்டிருக்கேன்... யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு... ஒத்துக்கிட்டா நல்லா இருக்கும்...”

“கவலைப்படாதே கணேஷ், கண்டிப்பா அப்பா ஒத்துப்பாரு..உன் மேல தான் அவருக்கு அபார நம்பிக்கையாச்சே.. உன்னை நினைச்சா ஒரு பக்கம் பெருமையா இருக்கு கணேஷ்..இந்த சின்ன வயசுல இவ்வளவு தெளிவா உன் எதிர்காலத்தை திட்டமிடுற.. ஆனா, எனக்கும் என் அப்பாக்கும் இருக்கற பாசப் பிணைப்பு உனக்கும் உன் அப்பாக்கும் இல்லைன்னு நினைக்கும் போது, கஷ்டமா இருக்கு...ஏன் கணேஷ் உனக்கு மட்டும் இப்படி? என் வயசு தானே உனக்கு ஆகுது?”

“என்ன செய்ய கீர்த்தி, நீங்க எல்லாம் உங்க அப்பா கூட கை கோர்த்து விளையாடி, வேணுங்ரத அடம் பிடிச்சு வாங்கி பழகியிருக்கீங்க...எனக்கு அப்படி இல்லை... பொதுவா என் அப்பா கிட்ட, பிஸிணஸ் மட்டும் தான் பேசுவேன்... ஆனா அம்மா அப்படியில்லை, அவங்க தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... ”

“ஹ்ம்ம்ம் எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி...சரி நீ ஆட்டோமொபைல்ஸ்ல வியாபாரம் செய்யறதுக்கும் Bsc Computer Science படிக்கறதுக்கும் என்ன சம்மந்தம்... ”

“ஹ்ம்ம்ம் ஒரு வேளை உன்னை பார்க்கனும்ங்கறதுக்காக தான் நான் இங்கே சேர்ந்தேனோ என்னமோ......”

“இருக்கலாம் இருக்கலாம்” என்று புன்னகைத்தாள்..

“கீர்த்தி... ரொம்ப நன்றி... “

“ஹே என்ன இது , நமக்குள்ள எதுக்கு இந்த நன்றியெல்லாம், அப்படியென்ன நான் செஞ்சிட்டேன்...”

“இல்லை கீர்த்தி, என் அம்மாவுக்கு அப்புறம் நீ தான் என்னை உண்மையா நேசிக்கறே. அதுவுமில்லாம என்னை நீ மட்டும் தான் சரியா புரிஞ்சுக்குற.... எப்படி கீர்த்தி, இப்படி உன்னால மட்டும் என்னை சரியா புரிஞ்சுக்க முடியுது... உனக்கு எப்படின்னு தெரியலை, ஆனால் நீ வந்தப்புறம் என் வாழ்க்கையே திருப்பி போட்ட மாதிரி இருக்கு... உன்னை கண்டிப்பா என் வாழ்க்கையில இழக்க மாட்டேன்... சரி அதை விடு இப்ப உனக்கு என்ன வேண்டும்?”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நீ சந்தோஷமா இருந்தா அதுவே போறும் எனக்கு... ” என அவன் கேட்கும் ஒவ்வொரு முறையும் புன்னகையோடு பதிலளிப்பாள்…

ஆனால் ஏனோ வீட்டீற்கு சென்ற பின், அவனை நினைத்து அழுவாள்,”என்ன வேண்டும் என கேட்கும் போது, நீ தான் வேண்டும்” என ஏன் தன்னால் பதில் சொல்ல முடியவில்லையென்று….வெளியே நட்பாக பழகினாலும் நட்பினுள்ளே காதல் எப்பொழுது நுழைந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.... எதையும் கணேஷிடம் வெளிப்படையாக பேசும் கீர்த்தியினால் தன் மனதிலிருப்பதை மட்டுமேனோ சொல்ல முடியவில்லை… காதல் மீதும் காதலிப்போர் மீதும் மரியாதையில்லாத கணேஷிடம் தன் மனதை வெளிப்படுத்தி அவனின் நட்பை இழக்க விருப்பமில்லை..

இது ஏதும் தெரியாது கணேஷ், கீர்த்தியை மனதால் காதலித்துக் கொண்டிருந்தான்… ஆனால் காதலைப் பற்றிய தன் எண்ணத்தை மாற்ற விரும்பாது, கீர்த்தி என் தோழி மட்டுமே என தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தான்…

மகனின் போக்கை அறிந்த கணேஷின் அம்மா,

”என்னப்பா கொஞ்ச நாளாவே உன் நடவடிக்கை எதுவும் சரியில்லையே...”

”அதெல்லாம் ஒன்னுமில்லயே மா ..எப்பவும் போலத் தான் இருக்கேன்...”

“என்னமோ நீ சொல்ற, அதை நான் நம்பித்தானே ஆகனும்... சரி அதெல்லாம் விடு…புதுசா ஆரம்பிக்கப்போற ஆட்டோமொபைல்ஸ் வியாபாரம் பற்றி உன் கிட்ட ஏதோ பேசனும்னு உங்க அப்பா உன்னை கூப்பிட்டாரு…”

”சரி மா… நான் போய் பேசிக்கறேன்…” என்று சொல்லி விட்டு தன் அறையில், தன் கணினியில் இருக்கும் புது பிஸிணஸ் பற்றிய தகவல்களை எடுக்க சென்று கொண்டிருக்க, அலைபேசியில் கீர்த்தி அழைத்தாள்… ”சொல்லு கீர்த்தி….”

“ஹ்ம்ம் பெருசா ஒன்னுமில்லை கணேஷ், உன்கிட்ட பேசனும்னு தோணுச்சு...அதான்…வேலையா இருக்கியா என்ன?”

”வேலைன்னு இல்லை...அப்பா கூப்பிட்டாருன்னு போயிட்டு இருக்கேன்… அப்புறமா உனக்கு கூப்பிடட்டா…. “

“சரி கணேஷ்….பார்க்கலாம்….ஹே ஆட்டோமொபைல்ஸ் பற்றி தானே அப்பா கிட்ட பேசப்போற... ஆல் தி பெஸ்ட்.... “ என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்…

தன் அப்பாவிடம் சென்று புது பிஸிணஸ் பற்றி கலந்தாலோசித்தான்… அப்பாவிடம் பேசிய பின் தான் தன் தலையில் இருக்கும் பாரம் பற்றி நன்கு உணர்ந்தான்… கிட்டத்தட்ட ஐந்து லட்சம் உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோமொபைல்ஸில் சில்லறை வியாபாரமென்றால் சாமானியமில்லை என்று தெரிந்தது...இவ்வளவு பெரிய வியாபாரத்தை இறுதி ஆண்டு படிக்கும் நம்மிடம் ஒப்படைக்கிறார் என்றார், தன் மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான்... முதல் நாளிலிருந்தே கருத்துடன் இருந்தால் தான் இதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியுமென கணக்கிட்டுக் கொண்டிருந்தான்...

திடீரென கீர்த்தியின் நினைவு வர... ”கீர்த்தி ... ஆயுசுக்கும் உன் அன்புக்கு அடிமையா இருக்கனும்னு தான் எனக்கு ஆசை..ஆனால், அதுக்கு இந்த பிறவியில எனக்கு குடுப்பனை இல்லை போல....என் மேல அப்பா வெச்சிருக்குற நம்பிக்கையை நிஜமாக்கவே இந்தப் பிறவி போயிடும் போல… உன்னை இழக்க வேண்டிவந்தாலும் வரலாம்...அதுவுமில்லாம இப்ப காதல் கீதல்னு நான் யோசிச்சா என்னை நம்பி அப்பா கொடுக்கற பல லட்சங்கள் வீணாப்போயிடும்...இப்ப நான் எனக்குனு ஒரு நிலையை கொண்டு வரனும் அப்புறம் தான் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யோசிக்க முடியும்...அதுவரை உன்னை காக்க வைக்க எனக்கு விருப்பமில்லை... ” இப்படி எவ்வளவு நேரம் தனக்கு தானே பேசிக் கொண்டானோ தெரியாது.. ஆனால் இனி கீர்த்தியை விட்டு விலகிவிடுவது தான் சரி என முடிவு செய்தான்…

முடிவு செய்தானே தவிற, அவளை நேரில் கண்ட பின்னர் அவனின் முடிவு தவிடு பொடி ஆனது தான் நிஜம்…இந்நிலையில் கீர்த்திக்கும் கணேஷிற்கு தெரியாமல் அவனை காதலனாய் பார்ப்பது, மனசுக்குள் ஏதோ செய்ய, இனியும் குற்ற உணர்வோடு இருக்க முடியாது என தன் காதலை கணேஷிற்கு சொல்லி விட வேண்டும் என தீர்மானித்திருந்தாள்….மனதில் காதலை வைத்துக் கொண்டு நட்போடு பழக அவளின் மனசாட்சி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது…எது எப்படியோ தன்னிடம் உண்மையாக இருக்கும் கணேஷிற்கு தானும் உண்மையாக இருக்க வேண்டும்…என்ன ஆனாலும் சரி அவனிடம் சொல்லி விட வேண்டுமென முடிவு செய்து, அவனிடம் தன் காதலை சொல்லி விட்டாள்….

“கணேஷ், ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் மறைச்சிட்டேன்... என்னை மன்னிச்சிடு... “

“ஹே என்ன கீர்த்தி, நமக்குள்ள மன்னிப்பு, நன்றில்லாம் வரக்கூடாதுன்னு நீ தான் சொல்லுவே... இப்ப நீயே... சரி அப்படி என்ன மறைச்சே சொல்லு....”

மிகுந்த தயக்கத்துடன்... “கணேஷ்... நீ எனக்கு நண்பன் மட்டுமில்லை...அதையும் தாண்டி... இத்தனை நாள் உன் கிட்ட சொல்லாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடு… உனக்கு நல்ல தோழியா மட்டும் இருக்க தான் நானும் முயற்சி செய்தேன்…ஆனால் என்னால் முடியலை… நட்புக்குள் காதல் எப்பொழுது நுழைந்தது என்று எனக்கு தெரியலை…உனக்கு காதல்னா பிடிக்காது தெரியும்..அதான் உன் கிட்ட சொல்லாம என் மனசுலையே பூட்டிக்கிட்டேன்.. ஆனா இப்ப உன் கிட்ட சொல்லாம இருக்கவும் என் மனசாட்சி இடம் கொடுக்கலை…அதான் சொல்லிட்டேன்…என்னை மன்னிச்சிடு கணேஷ்.. ” என்ற வார்தைகளும், கண்களில் கண்ணீரும் அவளின் காதலை பிரதிபலித்துக் கொண்டிருந்தது...

இந்த கீர்த்தி அவனுக்கு புதியதாய்த் தென்பட்டாள்… அவள் தன் காதலை சொன்னவுடன், தன் அப்பா அம்மா தான் அவனின் கண் முன் வந்தார்கள்… அப்பா அம்மாவா இல்லை கீர்த்தியா என மாறி மாறி யோசிக்கும் போது, அவன் முதலில் எடுத்த முடிவு தான் சரியென பட்டது… ஆனால் அதே சமயம், கீர்த்தியை நேரில் பார்த்துவிட்டால், அவனால் அவளை விட்டு விலக முடியவில்லை… சரி நம்ம கீர்த்தி தானே..சொன்னா புரிஞ்சிக்குவா…நம்ம வாழ்க்கைக்கு இந்த காதலெல்லாம் ஒத்து வராதுனு சொல்லிப் புரியவைப்போம் என்று…

“கீர்த்தி… எந்த விதத்துதலையாவது நான் உன்னை தொந்தரவு பண்ணி இருந்தா, என்னை மன்னிச்சிடு... அதே சமயம் உன்னோட உணர்வுகளை நான் மதிக்கறேன்... அதுக்காக என்னால உன்னை காதலிக்க முடியாது... என் வாழ்க்கைல காதலுக்கு இடமே இல்லை...என்னை புரிஞ்சுக்கோ... எனக்கு உன் நட்பு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தான் தெரியும்... அதுக்காக உன்னை கஷ்டப்படுத்த நான் விரும்பலை...உன்னால எனக்கு நட்பா மட்டும் இருக்க முடியும்னா இரு... இல்லை இதுவே நாம பேசறது கடைசியா இருக்கட்டும்...”

கீர்த்தியாலும் கணேஷிடம் பேசாமல் இருக்க முடியாது..எனவே காதலை மறந்து நட்பாக இருக்க முயற்சிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டாள்... உண்மையில் அவளால் காதலை மறக்கமுடியவில்லை...இது நாள் வரை கீர்த்தியின் அன்பிற்கு அடிமையாயிருந்த கணேஷிற்கு, இனியும் கீர்த்தியை ஊக்குவிக்க விருப்பமில்லை… அப்படி கீர்த்தியின் அன்பை ஏற்றுக்கொண்டால் அவள் காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும், அது நடக்காது என தெரிந்த பின்னும் அவளிடம் பேசிக்கொண்டிருந்தால் அவளுக்கென்று யோசிக்காது, தன் வாழ்க்கையை எங்கே பாழ் செய்து கொள்வாளோ என்று பயந்து, இனி அவளின் எதிர் கால வாழ்க்கைக்கு நாம் தடையாயிருக்க கூடாது என அவளை மெதுவாய் நிராகரிக்க ஆரம்பித்தான்... இதை ஏதும் புரியாத கீர்த்தி, கணேஷுக்கும் தனக்குமிடையில் ஒரு திரை வளர்ந்து கொண்டிருப்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.. அதை சரி செய்ய தன்னால் முடிந்ததை செய்துப் பார்த்தாள்... எல்லாம் வீணாய்ப் போனது தான் மிச்சம்...

யாருக்காகவும் நிற்காத காலம் ஓடிக் கொண்டேயிருந்தது… கல்லூரி முடிந்தவுடன் முழு நேரமாக தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்... கீர்த்தியின் நினைப்பு வரும் போதெல்லாம், இன்னும் இன்னுமென உழைக்க ஆரம்பித்தான்...தொழிலிலும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருந்தான்.. கீர்த்தியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டாள்… புது மனிதர்கள்.. புது இடம்… என எல்லாம் புதுசாக இருக்க, முடிந்தவரை வேலையில் நினைப்பை செலுத்தி கணேஷின் பிரிவை ஈடு செய்ய முயற்சித்தாள்… உறவின் அருமை பிரிவில் தெரியும் என்பது போல், முன்பை விட கணேஷின் மீது கொண்ட பாசம் இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது... கணேஷின் நிலையோ, கிட்டத்தட்ட இயந்திரதனமாய் மாறியிருந்தது... கீர்த்தி அவ்வப்பொழுது தொடர்பு கொண்டாலும் அவளை தவிர்த்துக்கொண்டேயிருந்தான்... வருடங்கள் ஓடி பல மாற்றங்களை கண்டிருந்தாலும் கீர்த்தியின் காதலிலும் மாற்றமில்லை, கணேஷின் கொள்கையிலும் மாற்றமில்லை...

இது ஒரு புறமிருக்க கீர்த்தியின் தாய் தந்தை அவளுக்கு திருமணம் செய்துவைக்க கீர்த்தியின் சம்மதத்தை எதிர்பார்த்திருந்தனர்.. அவள் காதலை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவளின் பெற்றோர் பரந்த மனப்பாங்கும், அவள் முடிவின் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்... கீர்த்திக்கோ கணேஷைத் தவிர வேறு யாரையும் மணம் செய்ய விருப்பமில்லை... தன் ஒருதலைக் காதலைப் பற்றி பெற்றோரிடம் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்தவும் மனமில்லை…இது பற்றி கணேஷிடம் கேட்டாலோ,”நல்லது, நீ உன் பெற்றோர் விருப்பப்படி நடந்துகொள்... அன்று சொன்னது தான் இன்றும், என் வாழ்வில் காதலுக்கு இடமில்லை..எனக்காக நீ காத்திருப்பதில் அர்த்தமில்லை..உன் வாழ்க்கைய நீயே பார்த்துக்கோ ” என்று சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டேயிருந்தான்... தொழிலில் பல சிக்கல்களைப் பார்த்துப்பார்த்து தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மறந்தே போயிருந்தான் அவன்...

தனக்கேற்ற துணையைக் கூட சரியாகத் தேர்வு செய்யத் தெரியாத அவனை, அவன் விருப்பபடி விட்டு விலகவும் முடியவில்லை… மீறி அவனை தொந்தரவு செய்யவும் மனமில்லை… தன் காதலால் தான், இனி என்றும் பெறமுடியாத நல்ல நட்பை இழந்துவிட்டோமென்று நட்புக்காகவும் பலமுறை ஏங்கிக்கொண்டிருந்தாள்.. அப்படியே பெற்றோருக்காக இன்று திருமணம் செய்து கொண்டாலும், வாழ்நாள் முழுக்க போலித்தனமான வாழ்க்கையே வாழ வேண்டிவருமென்பதால், அதிலும் மனம் செல்லவில்லை... சரி தன் விதி எதுவோ அது நடக்கட்டும் என்று அமைதியாயிருக்கலாம் என்றால், தன்னை விட வேறு யாராலும் கணேஷை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாதெனும் நினைப்பு, அவனுக்காக இன்னும் காத்திருக்கத் தூண்டுகிறது… ஆனால் அவன் தன்னை விரும்புவதை எப்படி இந்த உலகிற்கும் அவனுக்கும் கண்டுணர்த்துவது என தெரியாது வியந்திருந்தாள்...

இப்படி தன் விருப்பமும் நிறைவேறாது, கணேஷ் விருப்பபடி தன் வாழ்க்கையை வேறு ஒருவருடன் அமைத்துக்கொள்ளவும் முடியாது, பெற்றோரின் ஒரே கனவான இவளின் திருமணத்தை, அவர்கள் விருப்பபடி செய்துகொள்ளவும் மனமில்லாது, இனி என்றும் கிடைக்காத ஒரு நல்ல நட்பையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாது யோசித்துக்கொண்டே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த விபத்தும் நடந்திருக்க வேண்டும்...

இன்று, தன் காதலை மௌனமாக வெளிப்படுத்திக்கொண்டு கீர்த்தியின் அருகில் கணேஷ்... இந்த நொடிக்காகத் தான் தன் வாழ்நாள் இருந்த வரை காத்திருந்தாள்...கணேஷைப் பார்த்ததும் கண்களின் ஓரம் தேங்கியிருந்த ஒற்றைத்துளிக் கண்ணீரும், அவனின் வருகைக்காக காத்திருந்த உயிரும் தன் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதென அவள் உடலை விட்டு பிரிந்து சென்றது...

காதலின் பிரிவாலும், பெற்றோரின் பாசத்தாலும், பொய்யான வாழ்க்கையை வாழ விரும்பாமலும், இழந்த நட்பை திரும்ப பெறமுடியாமலும், தற்கொலை செய்து கொண்டு சாகும் அளவு கோழையாயிருக்க விருப்பமில்லாமல் தவித்த கீர்த்தியை கருணைக் கொலை செய்வதென உண்மை முடிவு செய்துவிட்டது போல...உண்மையான உறவுகளை ஒருவன் இறுதி ஊர்வலத்தில் தான் பார்க்க முடியுமென்பதை நிஜமாக்கும் விதத்தில் கணேஷ் கீர்த்தியின் இறுதி ஊர்வலத்தில்....

** முற்றும் **
பி.கு: இவ்வளவு பெரிய்ய்யயய கதையை பொறுமையா படிச்சதுக்கு நன்றி... இது "டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி"க்காக அனுப்பிய கதை....
நன்றி,
நாணல்

Monday 5 October 2009

நாம் ... அவர்கள்...

உண்டு களித்து
நலத்தை செம்மையாக்க
நித்திரை தேவியை
சில நேரம் கட்டியணைக்கும்
நாம்..

பசியும் தாகமும்
தீர வழியில்லாத நிலையிலும்
வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது
நித்திரை தேவியை
பல நேரம் கட்டியணைக்கும்
அவர்கள்..

முயற்சிக்கும் வெறி மட்டுமே
நம்மையும் அவர்களையும்
வேறுபடுத்துகிறது..
நண்பா ..
நீயும் வெறியோடு
முயற்சி செய்ய முயற்சி செய்...


நன்றி,
நாணல்

Thursday 24 September 2009

கண்ணாடியில்..

உன்னை உயிரென நேசிக்கும்
உன்னவளின் கண்களைக் காணும்வரை
என் கண்கள்
உன்னை தேடிக்கொண்டிருக்கும்
என சொன்ன எனக்கு
நானிருக்கும் உன்
கண்களைப் பாரென
கண்ணாடியில் பிரதிபலித்து
கண்ணடித்த உன்னை
என்னவென்று சொல்ல...

படம் : http://www.artchive.com/artchive/r/rockwell/rockwell_mirror.jpg

நன்றி,
நாணல்

Monday 7 September 2009

காலம்...


காலம் காட்டிய‌
திசையில் பயணித்த‌
நம் பயணங்களை
காலந்தாழ்த்தியாவது
காலம் இணைக்குமென‌
காலத்தோடு போட்டிக்கொண்டு
காலமாகாமல் காத்திருக்கிறேன்... ‌


நன்றி,
நாணல்

Monday 24 August 2009

சிங்கை நாதருக்காக கூட்டுப் பிரார்த்தனை....

நம் நண்பர் செந்தில் நாதர் அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற கூட்டு பிரார்த்தனையில் இணைவோம்...

அறுவை சிகிச்சை விபரம்:

நாள்: 27 ஆகஸ்ட் 2009
நேரம்: காலை எட்டு மணி சிங்கப்பூர் நேரம் (இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணி)
சிகிச்சைக்கான குறைந்தபட்ச நேரம்: ஏழு மணி நேரங்கள்.


நண்பர்கள் அனைவரையும் சிகிச்சை நடக்கும் நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்த வழிபாட்டுத் தளங்களிலும் செந்தில்நாதனுக்காக வழிபட கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி,
நாணல்

Friday 14 August 2009

யாதுமானவனே...

பிறந்தநாள் முதலாய்
பல வகை
கலன்களை அணிந்திருக்கிறேன்
இன்றைக்கு மட்டும் ஏதோ
புதுவித உணர்வு என்னுள்...

நீ
கட்டிய மஞ்சள் தாலிக்குள் தான்
என் வாழ்க்கை உள்ளதோ..

நீ
போட்ட மூன்று முடிச்சுகள்
சொன்னது 'நீ மூவுலகிற்கும்
சொந்தமானவளென்று'

பொன்னாலான தாலியை
சுமக்கிறேன் இன்று முதல்
என் நெஞ்சுக்குள்...
நீ
மட்டுமே இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள்
வெகுநாள் முதலாய்...

நீ
சூட்டிய செந்தூரம்
சொன்னது 'என்
உதிரத்தினுள் நீ கலந்தாயென'

என் வலிகள் அனைத்தையும்
உன்
விழிகள் பார்த்து மறக்கின்றேன்..

என் சொந்தங்கள் அனைத்தையும்
உன்
உருவில் பார்த்து மயங்குகின்றேன்..

என் வாழ்வின்
மொத்தம் உணர்கின்றேன்
நீ
தந்த அந்த ஒற்றை
முத்தத்தில்..

நீ
தந்த இத்தனை பரிசுக்கு
பதிலாய் வெட்கித்தலை குனிகிறேன்,
உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து ...


நன்றி,
நாணல்

Tuesday 28 July 2009

மனங்களின் பரிமாற்றங்கள்...- - யூத்ஃபுல் விகடனில்

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..

http://youthful.vikatan.com/youth/nanalpoem28072009.asp

மனங்களின் பரிமாற்றங்கள்...

காதலிக்கிறேனென என்
கரங்கள் தீண்டியதில்லை நீ...
பரிசுகள் பலதந்து எனை
அதிர்ச்சியில் ஆழ்த்தியதில்லை நீ...
ஆசை மொழிகள் பேசி எனக்கு
வெட்கம்தனை அறிமுகப்படுத்தியதில்லை நீ...

கண்ணுக்கு புலப்படா
நம்மிரு மனங்கள்
என்ன பரிமாறிக்கொண்டனவோ...

உன்னொருத்தனுக்காகவே என்னுள்
நாணம் பூக்கின்றது...
உன்னொருத்தனுக்காகவே பரிசுப்பொருட்கள்
பலதை சேமிக்கின்றேன்...
உன்னொருத்தனின் கைப்பற்றவே
வாழ்நாள் தோறும் காத்திருக்கின்றேன்...

நம் மனங்களின் பரிமாற்றங்கள்
உனக்கேனும் தெரிந்தால்
எனக்கு புலப்படுத்துவாயா?

நன்றி,

நாணல்




Wednesday 22 July 2009

உரிமைகள்...

என் தனித்துவம் தொலைத்து

முகம் தெரியாத உனக்காகவும்

உன் உறவுகளுக்காகவும் வளர்க்கப்படுகிறேன்...

உன் வருகைக்கு

பிறகாவது விடியுமெனப் பார்த்தால்,

விடியாது நீயும் உனக்காகவே

என்னை செதுக்கிக் கொள்கிறாய்...

பறிக்கப்படும் உரிமைகள்

உள்ளதென உணர்த்தாமல் இருந்திருக்கலாம்,

சுயம் தொலைந்த என்

கண்ணீராவது எனக்காக எஞ்சியிருக்கும்

நன்றி,

நாணல்

Sunday 28 June 2009

முதல் முறையாக தமிலிஷில் பிரபல பதிவாக....

ஹையா முதல் முறையாக தமிலிஷில் எனது கவிதை பிரபல பதிவாக 28th June 2009 அன்று முகப்பில் சேர்க்கப் பட்டுள்ளது... வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.... :))

நன்றி தமிலிஷ் ...

http://www.tamilish.com/story/78120

என்னை ஊக்கப்படுத்திவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி... :)

நன்றி,
நாணல்



Saturday 27 June 2009

என்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..

http://youthful.vikatan.com/youth/nanalpoem27062009.asp

என்னை விட்டு பிரியாதே

வானவில் தோன்றவில்லை
மின்னல்கள் ஒளிரவில்லை
மழைச்சாரலும் அடிக்கவில்லை
புகையினூடே நீ வெளிவரவில்லை

இயல்பானதொரு நன்னாளில்
என்னுள் நீ நுழைந்திருக்க வேண்டும்...
நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்...

தனியாளாய் உணர்ந்தேன்
எனக்காக நீயிருக்கிறாய்
என உணரும்வரை...
என் வெற்றியும் என் தோல்வியும்
உந்தன் கையில்தானடி...

பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...

உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு...

நன்றி,

நாணல்




Thursday 25 June 2009

நான் மென்துறை வல்லுநர் ...

வானுயர்ந்த கட்டிடங்களும்

இயற்கை நிறைந்த சூழலும்

கைக்கு அடக்கமாய் கைபேசியும்

தோளில் தொங்கியபடி மடிகணினியும்

பலவங்கி அட்டைகள் அடங்கிய பணப்பையும்

உயிர் வாழ பச்சைக் காய்கறியும்

எப்பொழுதாவது கேட்கும் தாய் மொழியும்

கனவில் எழுப்பும் தாயின் மொழியும்

நிஜத்தில் கேட்கத்துடிக்கும் தந்தையின் மொழியும்

அன்பால் கட்டிவைத்த மனைவியும்

காற்றில் கேட்கும் குழந்தையின் மழலையும்

என்றோ தொலைந்த உறவுகளும்

தோள் கொடுக்கும் தோழமையும்

"அவனுக்கென்ன அதிர்ஷ்டக்காரன்" என ஊராரின் பேச்சும்

சொல்லுமே நீ இழந்ததையும் கொண்டதையும்

நன்றி,

நாணல்






Saturday 20 June 2009

தொலைந்த வைராக்கியம் ...

வருடக்கணக்கில் மிதிவண்டி
ஓட்ட கற்று தந்த
என் தம்பியிடம்
இன்று ஒட்டுகிறேன் பார்
என சபதமிட்டு
ஒரே நாளில் ஓட்டினேன்...
வருடக்கணக்கில் உன்னை நேசித்து
இன்றோடு உன்னை மறக்கிறேன்
என சபதமிட்டு
ஒரே நாளில் அது
கரைந்துபோவதேனோ...

நீ நேசித்த
என் கவிதைகளுக்கு
உன்படிப்பில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
பல நாள் விடுமுறையளித்தேன் ...
நீ நேசித்த
என்னை
உன் வாழ்வில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
என் வாழ்க்கைக்கு
விடுமுறையளிக்க முடியவில்லையேனோ ...


நன்றி,
நாணல்

Saturday 13 June 2009

32 கேள்விகள் - இவ்வளவு பெரிய கேள்வித்தாளா....

இவ்வளவு பெரிய கேள்வித்தாளா.... (இதை பஞ்சதந்திரம் படத்தின் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்.. ) நெகட்டிவ் மார்க் எல்லாம் இருக்காதுன்னு நினைக்கறேன் ... ;)

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பொதுவாவே நமக்கு ஆர்வக்கோளாறு கொஞ்ச அதிகம்... அப்படி கவிதைங்கற பேர்ல கிறுக்கிட்டு இருந்தப்ப நமக்குன்னு ஒரு பட்டப் பேரு வெச்சுக்கிட்டா என்னனு ஒரு யோசனை... சரின்னு என் நண்பர் கிட்ட கேட்டேன்.. ஏதாவது நல்லாப் பேரு சொல்லுப்பான்னு... அவருக்கு இசைல ஆர்வமான்னு தெரியலை சுருதின்ற பேரு எப்படி இருக்குன்னு கேட்டாரு.. வேணும்னா அதையே வெச்சுக்கோன்னு சொன்னாரு.. பேரு நல்லா தான் இருக்கு...ஆனா வித்தியாசமா வேணும்னு(அப்ப எதுக்கு என் கிட்ட கேட்டன்னு அப்ப முனுமுனுத்திட்டு போயிட்டாரு, எதையோ வெச்சித் தொலைன்னு... ) மறுபடியும் யோசிக்க ஆரம்பிச்சேன்... அப்ப தான் நானும் என் தோழியும் அவங்க பிராஜக்ட் விஷயமா ஒருத்தரை பார்க்கப் போனோம்... அவர் பேரு என்னனு கேட்டா நாணல்னு சொன்னாரு... அட வித்தியாசமா இருக்கேன்னு அதை சுருட்டிடேன்... ;) அப்புறம் இமையில் ஐடி அது இதுனு உருவாக்கும் போது அந்த பேரை உபயோகிச்சி என் பேரு நாணல் என் பேரு நாணல்னு ஊர்பூரா சொல்லியாச்சு (நமக்கு பெயர் சஜஸ்ட் பண்ண நண்பருக்கு சேர்த்து தான், இதுவும் நல்லா தான் இருக்கு பரவாயில்லைன்னு பாராட்டையும் வாங்கிட்டோம்ல) ...அப்புறம் பிளாக் ஆரம்பிக்கும் போதும் அதே பேர்ல தொடங்கிட்டேன்..

இவ்வளவு பெரிய கொசுவர்த்திக்கு பின்னாடி இருக்கற பெயரை பிடிக்காம போகுமா.. நிஜ பெயர் எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு இந்த பெயரும் பிடிக்கும்.. இன்னும் சொல்லப் போனா நிஜப் பெயரை விட "நாணல்" மிகவும் பிடித்த பெயர்...பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்கிறேனா தெரியாது.. இருக்க முயற்சிக்கிறேன்... :)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வாழ்க்கைன்னு வந்துட்டா அழுகை சிரிப்பு எல்லாம் வரும் போகும் ... அழுகை வரும் பொது அழுதுட்டு அதை அப்பவே மறந்துடுவேன்..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ் கையெழுத்து ரொம்ப பிடிக்கும்... அனால் இப்ப எழுதி பழக்கம் விட்டுப்போனதுனால சரியா எழுத வர மாட்டேன்கிறது... :(

4).பிடித்த மதிய உணவு என்ன?
பிடித்தது பிடிக்காதுன்னு தனியா இல்லை... நல்லா பசிக்கும் போதும் சூடான சைவ சாப்பாடு பிடிக்கும்...

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இதுக்கு தமிழ் பிரியன் அண்ணா சொன்ன மாதிரி தான் ... எனக்கு ஒத்து போறவங்க கூட உடனே நட்பு வெச்சுப்பேன்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
தண்ணிரைப் பார்த்தாலே சந்தோசம் தான்...அது அலையடிக்கிற கடலா இருந்தா என்ன பொழியுற, அருவியா இருந்தா என்ன...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்டிப்பா அவரோட கண்கள் பார்த்து பேசுவேன்.. அப்புறம் உதடுகள்ளேர்ந்து வெளி வர வார்த்தையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கணக்கிடுவேன்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : உண்மையா இருக்கணும்னு இருப்பேன்..
பிடிக்காத விஷயம் : சில நேரம் ஏமாற்றத்தை தாங்க முடியாம மணிக்கணக்கா அழுவேன்.. அதுவும் நான் நெருக்கமா நினைக்கிற நண்பர்கள் , உறவுகள் பக்கத்துல இருந்துட்டா இன்னும் அதிகம் ...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ... ;)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
காலத்தின் கட்டாயத்துனால தொலைத்த சில நண்பர்கள் ...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கிரீம் மற்றும் பிரவுன் கலவையில் ...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சமிபத்தில் வந்த குளிர் 100 படத்தில் இருந்து சிம்பு பாடிய "மனசெல்லாம்" பாடல்..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு தான் எனக்கு பிடிக்க கலரு.. ;)

14.பிடித்த மணம்?
மல்லிகை பூவின் மணம் , மண் வாசனை , குழந்தையின் மீது வரும் பால் வாசனை..

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

சென்ஷி அண்ணா - பல வித்தியாசமான பதிவுகளை எப்படி தான் எழுதராறோன்னு படிப்பேன்..

மயாதி - ஒரு நாளைக்கு ரெண்டு மூனு கவிதைன்னு அசத்திகிட்டு இருக்கறவர்..


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
தமிழ் பிரியன் அண்ணா.. அவர் எழுதுற எல்லா பதிவுமே வித்தியாசமா அருமையா இருக்கும்... எனக்கு ரொம்ப பிடிச்சது இப்ப நான் எங்க இருக்கிறேன் ...

ஸ்ரீ ... இவங்க எழுதுற எல்லா கவிதையும் பிடிக்கும்.. எப்படிம்மா இப்படி யோசிக்கறேன்னு கேப்பவும்கேட்ப்பேன்.. வலை உலகில் எனக்கு கிடைத்த முதல் சகோதரியும் தோழியும் இவங்க தான்....

பூர்ணிமா - இவங்களை சமிப காலமா தான் தெரியும்..என்னோட நல்ல தோழி... பரிக்ஷித் பற்றி எழுதுற பதிவுகள் .. கவிதைகள்னு எல்லாம் பிடிக்கும்...

17. பிடித்த விளையாட்டு?
எதையும் உருப்படியா விளையாட தெரியாது... ஆனால் விளையாடுவேன்னு குதிசிக்கிட்டு போய் கை கால் வீ ங்கி அமைதியா வந்து உட்கார்ந்துடுவேன்.. ;)

18.கண்ணாடி அணிபவரா?
கணினியில் வேலை செய்யும் போது மட்டும்..

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டை காட்சிகள் நிறைய இல்லாமல் யதார்த்தமான படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?
மாசிலாமணி...

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக் காலம்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
மனம் என்னும் மார்க்கம் அப்படிங்கிற சுயமுன்னேற்ற புத்தகம் ...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
கணக்குலாம் இல்லை... மாற்றனும்னு தோணும் போது மாற்றுவேன்.. இல்லை மாசக்கணக்கில் ஒன்றே குட இருக்கும்...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : மெல்லிய இசை , மழலையின் சிரிப்பு, கடலின் அலை
பிடிக்காத சத்தம் : இறைச்சல் எழுப்பும் வாகனத்தின் ஹார்ன் சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கோவா..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கவிதை எழுதுவது, மனிதர்களை படிப்பது, எதையும் வித்தியாசமாக செய்ய விரும்பும் குணம்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய் பொய் பொய் ...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு பிடிக்காத ஒரு செயலை யார் சொன்னாலும் செய்ய மாட்டேன், அதேப் போல் பிடித்த செயலை யார் தடுத்தாலும் செய்வேன்... சுருக்கமா சொல்லனும்னா யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.. என் மனசாட்சியைத் தவிர..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அப்படி ஒன்றுமில்லை ....

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யார் கிட்டயும் ஏமாறாம யாரையும் ஏமாற்றாம வாழ ஆசை ..

31.கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இருப்பது ஒரு வாழ்க்கை ... அதில் யாரையும் புண்படுத்தாமல் நமக்கு விருப்பமானதை , மனசுக்கு நிம்மதி தரக் கூடியவைகளை செய்து சந்தோஷமா இருங்க... வாழ்க வளமுடன்!


பொறுமையா படித்தற்கு நன்றி..
நாணல்



Tuesday 9 June 2009

நீயூட்டனின் மூன்றாம் விதி

புன்னகை மறந்த
இதழ்களுக்கு
புன்னகை பரிசளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
நீ புன்னகைக்க
பரிசளிப்பரென்று...

மலறாத முகங்களுக்கு
மலர வாய்ப்பளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
நீ மலர
வாய்ப்பளிப்பரென்று...

சோர்ந்த விழிகளுக்கு
வியப்பளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
வியக்கவைப்பரென்று...

உடைந்த நெஞ்சங்களுக்கு
உயிர் கொடுக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
உயிர்க்கவைப்பரென்று ...

-நன்றி,
நாணல்

Sunday 7 June 2009

என் உலகம் ...



உன் கரத்தை பற்றினேன்
மூவுலகையும் சுற்றி வரவே
மாறாக
உனையே சுற்றி வருகிரேன்
நீயே என்னுலகமென்று..

நன்றி,
நாணல்



வெறுக்கவா - நேசிக்கவா


உனக்காக உனை
வெறுக்கத்தான் முயல்கிறேன்,
விடிந்ததும் வெளிவரும் கதிரவனாய்
உன் நினைவு
என்னுள் விடியலாய் பிரகாசிக்குதே ..

எனக்காக உனை
நேசிக்கத்தான் முயல்கிறேன்,
இருள் நீக்கும் நிலவாய்
உன் தவிர்ப்பு
என்னுள் பிரகாசமாய் தவிக்குதே ..

உனக்காக உனை
வெறுக்கவா - இல்லை
எனக்காக உனை
நேசிக்கவா..


நன்றி,
நாணல்




சொல்லபடாததும் கேட்கபடாததும் ...

"என்ன வேண்டும் ?"
என்ற உந்தன் கேள்விக்கு
"நீ தான் வேண்டும்"
என வேண்டாமல்
இன்றுனை வேண்டி
எங்கே சென்று உனை தேட....

"கடைசிவரை நீ இருப்பாயா?"
என்ற உந்தன் கேள்விக்கு
"கடைசி எது?"
என கேட்காது
தொலைத்த உனை
எங்கே சென்று உனை தேட....

நன்றி,
நாணல்

நன்றி யூத் விகடன்.. :))

ஒரு ரெண்டு மூனு வாரமா நான் படிக்கற ப்ளாக்கர்ஸ் எல்லாம் யூத் விகடன்ல தங்களோட பதிவு வெளியிட்டதை பார்த்து எனக்கும் ஆசை வந்து அனுப்பி வெச்சேன்.. நம்மளோடதை எல்லாம் எங்க வெளியிடபோறாங்கன்னு இருந்தேன்... பார்த்தா வெள்ளி கிழமை வெளியிட்டதா மின்னஞ்சல் வந்திருக்கு...

http://youthful.vikatan.com/youth/nanalpoem02042009.asp

நன்றி யூத் விகடன்.. :))

இந்த மாதிரி எங்க பதிவை வெளியிட்டு எங்களை ஊக்கப்படுத்தறதுக்கு நன்றி ....

உன்னை நான் மறக்கிறேனேன்று ...

எந்தன் சுவாசமாய் இருந்த நீ

எப்பொழுதாவது நுகரும் வாசமாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் பார்வையாய் இருந்த நீ

எப்பொழுதாவது ரசிக்கும் காட்சியாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் மொழியாக இருந்த நீ

எப்பொழுதாவது படைக்கும் கவிதையாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் கேள்வியாக இருந்த நீ

எப்பொழுதாவது கேட்கத்தோன்றும் பாடலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் உணர்வாய் இருந்த நீ

எப்பொழுதாவது தேகம்தீண்டும் தென்றலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் காதலாக இருந்த நீ

எப்பொழுதாவது நினைத்து கண்ணீர்விடும்

முதலும் கடைசியுமான காதலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


நன்றி,

நாணல்




Saturday 6 June 2009

பேசா மொழி - 3

அடைக்கப்பட்ட
வாசலையும் தட்டாமல்
உள்ளே நுழைவது
தான் காதல்

இரவெல்லாம் கண் விழித்து கண்ணைக் காக்கும் இமையைப் போல் அகிலனையே பார்த்து , அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனாலோ தெரியவில்லை, விடிந்தும், தன் வீட்டில் இருந்தும் மொழிக்கு ஏனோ அகிலனின் மனைவியாய் தான் வாழ்ந்த ஒருவித திருப்தி.. தனக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்க கூட முடியாமல் கனவு உலகத்தில் இருந்தாள்.. தன் அம்மா வருவதை கூட கவனிக்காமல் தனக்குள்ளேயே சிரித்து அகிலனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்...

மொழி... அப்படி என்ன மா யோசிக்கற...

ஒன்னும் இல்லை மா.. ரெண்டு நாளா சரியா தூங்கலை இல்லையா
..அதான் ..

ஓ ஓ ... என் கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ...

பொய்யா அப்படி எல்லாம் இல்லை மா.. நிஜமா சொல்றேன்...

மொழி, நான் உன் அம்மா... நீ ததகா பிதகானு பேசின மழலை மொழியே புரிஞ்சிகிட்டவ நான்.. சரி சொல்லு யாரு அந்த பையன்?

இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு நின்றாள்... இருந்தும் ஒருவாரியாக சமாளித்துக் கொண்டு ...

என்னமா ஆச்சு உங்களுக்கு, சம்மந்தமே இல்லாம கேள்வி கேக்கறீங்க..

நல்லாவே நடிக்கறமா நீ..
கொஞ்ச நாளா உன்னை நானும் கவனிச்சிட்டு தான் வரேன் ... சொல்லு... தாத்தா பாட்டியும் உன் கல்யாணத்தை பத்தி பேச தான் எங்களை ஊருக்கு வர சொன்னாங்க... சொல்லு மா உன் மனசுல யாராவது இருந்த சொல்லு...

மா , என்ன மா, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே , நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை மா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்ப உன் தாத்தா ஒரு இடம் சொன்னாரு , ஜாதகமும் பொருந்தி இருக்கு , குடும்பமும் நல்ல குடும்பம் , என்ன சொல்ற நீ..

தன் மனதில் யாரும் இல்லையென தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும், இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் ஏனோ அகிலனின் முகம் தான் மனதில் வந்தது ... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ... கலங்கிய கண்களுடன் தன் தாயை நோக்கினாள்..

அப்படி வா என் செல்ல மகளே... இந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம்.. என்று கண்களை சிமிட்டினாள் மொழியின் அம்மா ...

மா கண்ணீரா , அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஏதோ தூசி விழுந்திருக்கும் போல..

இப்படியே சமாளித்து வந்தாலும் , ஒரு கட்டத்துக்கு மேல் மொழியால் அகிலனை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை... முதலில் அகிலனை சந்தித்து , அகிலன் தன்னிடம் அவனது விருப்பத்தை சொன்னது, டூரில் நடந்தது என எல்லாத்தையும் சொல்லி , என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறேன் மா என்று அழுதுவிட்டாள்..

ஹே மொழி, என்னது இது சின்ன குழந்தை மாதிரி... உனக்கு அவரை பிடிச்சிருக்குன்னா என் கிட்ட சொல்றதுக்கு என்ன மா ...

இல்லை மா, என்னை எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்தீங்க ..இப்ப நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்ட தப்பு இல்லையா..

அட அசடே...
இதுல என்ன டா தப்பு இருக்கு.. படிக்கற வயசுல படிக்காம காதல்னு சுத்தின எல்லா அப்பா அம்மாவுக்கும் தான் கோவம் வரும்.. இப்ப நீ பெரிய பொண்ணாயிட்ட ... உனக்கும் நல்லது கெட்டது எதுன்னு தெரியும் இல்லையா..

ஹ்ம்ம் ஆமா..

அப்புறம் ஏன் மா இப்படி கொழப்பிக்கற ... எப்படியும் யாரோ ஒருத்தர் சொல்ற பையனை நல்லவனா நல்ல குடும்பம்னு பார்த்து தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்.. இப்படி மூணாவது மனிஷங்க சொல்ற பையனை பத்தி யோசிக்கும் பொது, என் பொண்ணு நீ, நீ சொல்ற பையனை பத்தி யோசிக்க மாட்டோமா... நல்லப் பொண்ணு மா நீ..

அம்மா...

ஹ்ம்ம் நிஜமா தான்... அகிலனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு... பார்த்து பேசிடலாம்..

மா..எப்படி மா அவரை மட்டும் தனியா நம்ம வீட்டுக்கு கூப்பிடறது...

ஆமா இதையும் என் கிட்டயே கேளு.. அடுத்த வாரம் உனக்கு பிறந்த நாள் வருது இல்லையா , அதுக்கு உன் நண்பர்கள் எல்லாரையும் வீட்டுக்கு அழை, அகிலன் உட்பட... அவரைப் பார்த்துட்டு அப்புறம் நாங்க எங்க முடிவை சொல்றோம்... சரியா...

முகத்தில் 100 வாட்ஸ் எரிந்தார் போல் பிரகாசிக்க வெட்கத்துடன் எழுந்து ஓடினாள்..

ஹ்ம்ம் இந்த காலத்து பசங்க உண்மையிலேயே நல்ல பசங்க தான் ... சுய நலமா யோசிக்காம எவ்வளவு பெருந்தன்மையா இருக்காங்க ... "வாழ்க வளமுடன்" என்று மனதார வாழ்த்தினாள் ..

அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்று தன் நண்பர்களையும் அகிலனையும் தன் பிறந்த நாளிற்காக வீட்டிற்கு அழைத்தாள்...

அகிலன் முதலில் வர மறுத்தாலும் , மொழியின் பிறந்த நாளன்று முதல் ஆளாக மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான்.. ஒருவர் பின் ஒருவராக வர, பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடந்தேறியது... அகிலனை கவனிக்கவும் தவறவில்லை மொழியின் தாய் தந்தை .... அனைவரும் மொழிக்கு பரிசு கொடுத்த பின் அகிலன் மட்டும் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்... இதை உணர்ந்த மொழியின் தந்தை , என்ன அகிலன் நீங்க பரிசு எதுவும் கொண்டு வரலியா ...

இல்லைங்க , என்ன பரிசு கொடுக்கறதுன்னு தெரியலை அதான்...

சரியா போச்சு போ.. சரி உன் வீடு எங்கபா?

பெரம்பூர் சார்..

அப்ப தினமும் ஆபிஸ் பஸ்ல வரியாபா...

ஹ்ம்ம் ஆமாங்க..

கஷ்டமா இல்லையா..இங்கயே வீடு எடுத்து தங்கிடலாம் இல்லை...

தங்கலாம் , ஆனா.. தினம் இரவாவது அம்மா கையால சாப்பிடனும்... அந்த ஒரு வேலை சாப்பட்டுக்கு தான் மணி எத்தனை ஆனாலும் வீட்டுக்கு போய்டுவேன்..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ....

இப்படி இடையிடையே அகிலனிடம் நேர்காணலையும் முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தினர்.. விடைப்பெற்றுக் கொள்ளும் போது,

மொழி, உங்களுக்கு பரிசு கொடுக்கணும்னு எனக்கும் ஆசை தான்..ஆனா இப்ப நான் கொடுத்தேன்னா, அதுல என் காதலும் தெரியவரும், அதான் கொடுக்கலை .. மன்னிச்சிடுங்க... by the way, once again, my hearty wishes... என்று சொல்லி பதிலையும் எதிர்பாராது கண்ணியமாக சென்றுவிட்டான்..

மொழியின் வீட்டிலோ அகிலனுக்கு மார்க் கூடிக்கொண்டே போனது .. ஒரு வாரம் தீர விசாரித்த பின்னர்...
அகிலனின் பெற்றோரிடம் பேசுவது என முடிவு செய்து, பேசி அவர்களுக்கும் மொழியை பிடித்து விட .. அகிலனை அழைத்து உன் முடிவு என்னனு சொல்லுப்பா என்று அகிலனின் பெற்றோர் கேட்டனர்...

ஹ்ம்ம்
எனக்கு சம்மதம் ஆனா பொண்ணு வீட்டுல முக்கியமா மொழிக்கு சம்மதமா?

நல்ல கேள்வி.. பெரியவங்க நாங்க பேசிட்டோம், மொழி உன் ஆபிஸ் தானே , நீயே பேசி தெரிஞ்சிக்கோ..

அப்பா அது நல்லா இருக்காது பா...

இதுல என்ன தம்பி இருக்கு... நீயே பேசிடு... என்று சொல்லி மொழியின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு மொழியிடம் அகிலனை பேச வைத்தார் ..

மொழி, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. நம்ம வீட்டு பெரியவங்களுக்காக நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம்... உங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம்னா மட்டும் சொல்லுங்க ...

சம்மதம் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க..

இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன் மொழி... அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன், உங்களை காயப்படுத்தற எதையும் நான் செய்ய விரும்பமாட்டேன்...


சரி, நான் இல்லாத வாழ்கையை உங்களால நினைச்சு பார்க்க முடியுதா..

ஹ்ம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தான்...ஆனா அது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கறேன்...

என்னை பார்த்துப்பீங்களா ..

அதான் சொன்னேனே , என் பிரச்சனையை
நான் பார்த்துக்கறேன்...

அட மண்டு (மெல்லிய குரலில்) , நான் அதை கேக்கலை, "
என்னை பார்த்துப்பீங்களா"னு கேட்டேன்..

என்ன என்ன திரும்ப சொல்லு...

எத்தனை தடவை சொல்றது...சொல்ல முடியாது போடா..

மொழி... இது கனவா நிஜமா.. ஐயோ ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி... ரொம்ப ரொம்ப நன்றி... என்று சொல்லி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்..

மொழி, மொழி ஒரே ஒரு முறை திருப்பி சொல்லு...

ஹ்ம்ம் ஹ்ம்ம் "என்னை உன் கண்ணுக்குள் வைச்சு ஆயுசுக்கும் பத்திரமா பார்த்துக்குவியாடா லூசு"........

- முற்றும்


பேசா மொழி - 1

பேசா மொழி - 2

பேசா மொழி - 2

தனிமையும் மௌனமும்
பேசிக்கொள்ளும் நேரம்
மனதின் பாரம்
கூடிக் கொண்டே போகும்...


அகிலனின் கவிதையை படித்ததாலோ இல்லை , நண்பர்களின் பிரிவோ தெரியவில்லை மனம் கனமாகிக் கொண்டிருந்தது...

அவளின் கைபேசி ஒலிக்க எடுத்து பேசினாள்...

ஹெலோ, சொல்லுங்க அப்பா...

என்னமா இன்னும் வீட்டுக்கு புறப்படலியா... உன்னை ரயில் நிலையத்தில் விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போகலாம்னு இருக்கோம்...

என்னப்பா என்ன திடீர்னு .. யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா?

அப்படி எல்லாம் இல்லைமா.. சும்மா தான் நீயும் வீட்டுல இல்லை, அதான் தாத்தா பாட்டியை பார்த்துட்டு வரலாம்னு...

ஓ சரி சரி... நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்பா... கொஞ்சம் வேலை இருக்கு , முடிச்சிட்டு கிளம்பறேன்... வீட்டுல பேசிக்கலாம்... என்று தொடர்பை துண்டித்தாள்...

அட இது என்ன புது கதை.. இப்ப நம்ம வீட்டுலையும் இருக்க முடியாது... சரி தாத்தா பாட்டியை பார்க்கபோலாம்னா , டூர்க்கு ஏன் போகலைன்னு கேட்டா என்ன சொல்றது... அம்மா, என் கண்ணசைவ வெச்சியே நான் என்ன நினைக்கறேன்னு கண்டுபிடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களே... அப்ப வேற வழியே இல்லையா டூர்க்கு போயிடலாமா... ஹ்ம் அது தான் சரி...அகிலனுக்காக நாம ஏன் போகாம இருக்கும்.... நம்ம friends கூட நாம போகப் போறோம்.. இதுல அகிலன் யாரு.. சரி கிளம்பலாம் , இப்ப வீட்டுக்கு போனா தான் , ரயில் பிடிக்க வசதியா இருக்கும்...

உடனே மறைமலைநகரில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்கிறாள்....
எல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்குள் மணி 5 ஆகி விட்டது... இனி எக்மோர் செல்ல முடியாது அதனால் என்ன செய்யலாம் என யோசிக்கையில், அவளின் அப்பா, எப்படியும் செங்கல்பட்டு வழியா தானே ரயில் போகும், அங்க போயி ஏறிடு... எந்த கோச் தெரியுமா?

S2 பா...

அப்ப சரி வாமா, போகலாம்...

சரி, போயிட்டு வறேன் மா...

சரி மா பத்திரமா போயிட்டு பத்திரமா வா...

சரி மா என்று தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டாள்...

ஏன் மா, உன் friendsகு கால் பண்ணி, செங்கல்பட்டுல ஏறிக்கறேன்னு, உனக்காக காத்திருக்க போறாங்க....

இல்லை அப்பா, இருக்கட்டும்,, என்னை தேடட்டும்.. அவங்களுக்கு சொல்லாம நான் அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு இருக்கேன்...

ஹ்ம்ம்ம் எல்லாம் விளையாட்டு தான் மா உனக்கு...

மணி 5.45 ஆனது... 6.35 கு ரயில் வருவதாக ஒலிக்கப் பட்டது...

சரி மா, சாப்பிட ஏதாவது வாங்கி வரவா...

ஒன்னும் வேண்டாம் பா.. பசி இல்லை...

ஒரு வழியாக சொன்ன நேரத்திற்கு ரயில் வந்தது... மொழியை இங்கு யாரும் எதிர் பார்க்காததால் , வெளியே யாரும் வரவில்லை...

சரி பா..போயிட்டு வறேன், தாத்தா பாட்டியை கேட்டதா சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் பத்திரமா போயிட்டு வா மா...

S2 வில் தன் பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டு ரயிலில் ஏறினாள்... வாசலில் இருந்து கொண்டு தன் தந்தையை வழி அனுப்பி விட்டு, தன் நண்பர்களை தேடி உள்ளே சென்றாள்...

முதலில் அவளின் கண்ணில் பட்டது அகிலன் தான்...
அகிலனுக்கோ எதிர்பாரா நேரத்தில் மொழியைப் பார்த்தது ஒரே குதூகலம்... அவனின் குதூகலம் மொழிக்கும் தொற்றிக்கொண்டது,.. இருந்தும் அதை வெளியில் காட்டக் கூடாது என தீர்மானமாக இருந்ததால்... ஒருவாரு சமாளித்தாள்...

ஹெய் மொழி.. வாங்க வாங்க .. அதிசயம்...

அதற்குள் செல்வி அந்த பக்கம் வர, ஹெய் மொழி வாங்க அம்மணி ... என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள்...

மொழி வந்ததில் அவளின் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரே சந்தோசம் ..
இரண்டு நாள் புது புது இடங்களைப் பார்த்ததில் அனைவரும் குதூகலத்தில் இருந்தனர். மொழிக்கு மட்டுமேனோ சகஜமாக இருக்க முடியவில்லை... எங்கு திரும்பினாலும் அகிலன் தான் அவளின் கண்ணில் பட்டான்... அகிலன் வந்திருந்த அனைத்து மக்களிடமும் நட்பாகி இருந்தான்.. மொழிக்கு இது வியப்பாகவே இருந்தது..எப்படி இவனால் மட்டும் அனைவரிடமும் நன்றாக பேச முடிகிறதென்று.. காதலில் மட்டும் தன் தனக்கு நேரெதிர் என்றால், இதிலுமா என்று, சிரித்த முகத்துடன் இருக்கும் அகிலனை தன்னை அறியாமல் பல நேரம் பார்த்து ரசித்திருக்கிறாள். இதை மற்றவர்கள் கவனித்தார்களோ தெரியாது ஆனால் அகிலன் கவனிக்க தவறியதில்லை..

சரி பேசலாம் என்று அருகில் சென்றாலோ , இவன் வருவதை அறிந்த மொழியின் மனம் பதபதைக்க ஆரம்பித்துவிடுகிறது... இதனால் பூத்திருந்த முகம் வாடிவிடுகிறது.. இதை புரிந்த அகிலன் மொழியிருக்கும் பக்கம் செல்லாமல் தவிர்த்து வந்தான்.. இருந்தும் அங்கும் இங்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தவறியதில்லை.. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இரண்டுநாட்களும் சென்று விட்டது..

சென்னைக்கு திரும்புவதற்காக , ரயிலில் அவரவர் இடங்களில் சென்று அமர்ந்து விட்டனர். அங்கங்கு அவரவர்க்கு விருப்பமான கோச்சில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

மொழி மற்றும் அவள் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அகிலனும் வந்து கூட்டத்தில் ஐக்கியமானான்... எதிர்பாரா நேரத்தில் அகிலன் அங்கு வந்தது மொழிக்கு சங்கடமாக இருந்தாலும், அவளை அறியாமல் அவனின் வரவை ரசித்தாள்.. நண்பர்களுக்கும் இந்த கண்ணாமூச்சி பற்றி தெரியாது ஆதலால், அகிலனின் வரவை வேண்டாமென்று தடுக்கவும் இயலவில்லை..

பாட்டுக்கு பாட்டில ஆரம்பித்து , இன்னும் பல விளையாட்டுகளை விளையாடிய வண்ணம் ஓடும் ரயிலில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர் ..

சரி, கொஞ்ச நேரம் விளையாட்ட ஓரம்கட்டிடு உருப்படியா ஏதாவது பேசுவோம் என்று ஆரம்பித்தான் சத்யா ..

ஹ்ம்ம் நைஸ் .... செல்வி, நீங்க சொல்லுங்க உங்களை வருங்கால புருஷன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க .. என்றான் அகிலன்...

பெருசா ஒன்னும் கனவெல்லாம் இல்லை.. அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு யாரை கை காட்டுறாங்களோ அவங்கள பண்ணிக்க வேண்டியது தான்...

அஹ அஹ ... மழுப்பாதீங்க செல்வி... சும்மா சொல்லுங்க ..

நிஜமா இல்லை அகிலன், இருந்தா உங்க கிட்ட சொல்லாமலா... ஹே கதிர் , நீ சொல்லு..

என்ன செல்வி , கதிர் பாவம் காதலிய ரெண்டு நாளா பார்க்கலைன்னு வருத்தமா இருக்கான்.. அவனை போய் ...

டேய் சத்யா , என்னை வம்பு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா... சரி நீ சொல்லு , உன் கனவு தேவதை எப்படி இருக்கணும்னு...

ஹே கனவுன்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது... கனவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன்.. கட்டினா அவளைத் தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்டா..

டேய் , இந்த கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.. இந்த நினைத்தேன் வந்தாய் படமெல்லாம் இங்க ஓட்டாத ..

அப்படி போடு கவி... ஆமா இங்க ரெண்டு ஜீவன் ரொம்ப நேரம் அமைதியாவே இருக்கு ... சரி மொழி நீ சொல்லு , அப்புறம் அகிலன் நீங்க சொல்லுங்க ...

கதிர் , நான் அமைதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா... என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே , புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை ...

அதெல்லாம் ஒத்துக்கப்படாது... சொல்லியே ஆகணும் ... பரவாயில்லை சொல்லு மொழி, நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்...

ஹ்ம்ம் என்ன எல்லா பொண்ணும் எதிர்பார்க்கிறா மாதிரி தான், என் உணர்வுகளை மதிக்கணும் , எனக்கு புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா இருக்கனும் ...

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, அகிலன் நீங்க சொல்லுங்க ..

எனக்கு கனவுல்லாம் பெருசா இல்லைங்க கதிர்.. ஒன்னே ஒன்னு தான் முக்கியம், என் அம்மாவை தன் அம்மாவா பார்த்துக்கணும் அவ்வளவு தான்.. அப்படி ஒருத்தி கிடைச்சா அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன் என்று சொல்லி மொழியைப் பார்த்தான்.. உடனே தலை குனிந்து விட்டாள் மொழி..

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி எல்லாரோட கனவும் நனவாகட்டும்... சரி இதுல காதல் வயப்பட்டிருக்கவங்க யார் யார்லாம்னு கை தூக்குங்க பார்க்கலாம் என்று தன் கையை உயர்த்திய படி கதிர் கேட்க, சிலர் மட்டும் கை தூக்கினர்(அகிலன் உட்பட)...

சரி , இருதலை காதல் .....

சொல்லி முடிக்கும் முன் வேகமாய் கையை தூக்கினான் அகிலன்...

அப்படி போடுங்க அகிலன், யாரு அவங்க...

இப்ப இல்லை சத்யா , சீக்கிரம் நானே சொல்றேன் ...

மொழிக்கு ஒன்றும் புரியவில்லை.. தன்னை வைத்து தான் அகிலன் சொன்னானா என்று குழம்பிக் கொண்டிருந்தாள்..

இப்படியே பேசிக்கொண்டிருந்ததனால், நேரம் போனதே தெரியவில்லை.. 12 மணிக்கு மேலாகி விட்டது.. அவரவர் பெர்த்தில் படுக்க , அகிலன் மட்டும் வேறுவொரு கோச்சிற்கு செல்ல வேண்டியிருந்தது .. ஆனால் கதவு அடைக்க பட்டிருந்ததால் , மொழியின் கோச்சிலேயே படுக்க வேண்டி இருந்தது...

அகிலன், நீங்க இங்க படுத்துகோங்க நானும் மொழியும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறோம், எப்படியும் இன்னும் 5 மணி நேரத்துல மொழி செங்கல்பட்டுல இறங்கிடுவா என்று சொல்லி , மொழியும் கவியும் சைட் பெர்த்தில் அமாந்து பேசிக் கொண்டே இருந்தனர்.. சிறிது நேரம் பேசிக் கொண்டே கவியும் உறங்கிவிட்டாள்....மொழிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.. எதிரில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அகிலனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

சாளரத்தின் வழிவரும் சாரல்
மூக்கின் நுனி தொட்டுசெல்லும் மண்வாசனை
காலத்தோடு போட்டிபோட்டு வேகமாய் ஓடும் ரயில்
மெதுவாய் எனை நலம் விசாரிக்கும் தென்றல்
கூட்டத்தில் வீசும் மல்லிகையின் வாசம்
இருப்போரிருந்தும் யாருமில்லா என் தனிமை
எனையறியாமல் என் கைகள் உன்பெயரை எழுதிடுதே ....

-
மொழி

- மொழி கவிதையாகலாம்

பேசா மொழி - 1

ஹே மொழி.. நாம இந்த வாரம் போகப்போற டூர்க்கு வர இல்லை....

இல்லைமா வருவேன்னு தோணலை... கொஞ்சம் வேலை இருக்கு கவி... சரி அதை விடு, யார் யார்லாம் வராங்க சொல்லு...

என்ன கனிமொழி இது.. ( கனிமொழி தான் முழுப் பெயராயினும், மொழி என்று தன்னை அழைப்பதையே அவள் விரும்புவாள் .. அவள் நண்பர்கள் அப்படி தான் அவளை அழைப்பார்கள்) நீ தான் இந்த டூர் போறதுக்கு முக்கிய காரணமே, இப்ப வர மாட்டேன்னு சொல்றியே... என்னாச்சு உனக்கு, ஒரு வாரமா உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லையே... வீட்டுல எதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை கவி... அப்படி எதாவது இருந்தா உன் கிட்ட சொல்லாமலா என்று புன்னகைத்தாள்...

என்னமோ போ... எதைக் கேட்டாலும் இப்படி சிரிச்சே மழுப்பிடு....

ஹ்ம்ம்ம் எல்லாரும் வராங்க தானே...

உன்னை தவிர எல்லாரும் வராங்க மொழி .. நீயும் வாயேன்....

சரி டா... நான் சொல்றேன்.. எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்... சரியா....

ஹ்ம்ம் சரி... சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு.... சரி மதியம் பார்க்கலாம் என்று விடைபெற்றுக் கொள்கிறாள் கவிதா....

யப்பா ஒரு வழியா இவளை சமாளிச்சிட்டோம் , மத்தவங்களை எப்படி சமாளிக்கறது... ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு எதையோ யோசித்த வண்ணம் நாற்காலியில் சாய்கிறாள் கனிமொழி ...

ஒரு வாரத்துக்கு பின்னோக்கி செல்கிறது அவளின் நினைவு...

கனிமொழி... சாப்பிட போகலியா? என்ற குரல் வந்த இடம் திரும்பிப் பார்க்கிறாள்... 3 மாதங்களுக்கு முன் தன் குழுவிற்கு புதிதாய் வந்த அகிலன், இவளின் பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தது...

இல்லை அகிலன், போகனும்... கவிதா மீட்டிங் போயிருக்கா.... சத்யா நம்ம டூர்க்கு டிக்கெட் புக் பண்ரதுக்கு போயிருக்கான்... கதிர்க்கு இன்னைக்கு CompOff ,வீட்டுல இருக்கான்... செல்விக்கு உடம்பு சரி இல்லைன்னு லீவ்ல இருக்கா... அதான் என்னப் பண்ணலாம்னு யோசிட்டு இருக்கேன் .. ( இவர்கள் தான் அலுவலகம் சேர்ந்த நாள் முதல் மொழியின் உலகம்...இதில் ஒருவர் இல்லையெனினும் மொழிக்கு ஏதோ மாதிரி இருக்கும்... ஒரு சேர , நால்வரும் இல்லாதது, தனியாய் உணர்ந்தாள்... அகிலனும் வந்த நாளில் இருந்து அவ்வப்பொழுது இவர்கள் கூட்டத்தில் ஐக்கியம் ஆவது உண்டு... ) நீங்க என் கூட வரீங்களா தனியா போக ஒரு மாதிரி இருக்கு...

ஹ்ம்ம் சரி போலாமே... எனக்கும் யாருமில்லை இன்னைக்கு, உங்களை கூப்பிடலாம்னு தான் வந்தேன்...

ஓ அப்ப சரி போகலாம் வாங்க...

ப்ரொஜெக்ட் இல் ஆரம்பித்து ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது வரை பேசி முடித்தனர்... எல்லாம் பேசிய பின் சில நேரம் மௌனம் நீடித்தது...

என்ன அகிலன், அமைதியாகிட்டீங்க... ஏதோ தீவிரமா யோசிட்டு இருக்கற மாதிரி தெரியுது.. அப்படி என்ன யோசனை...

ஹ்ம்ம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே...

ஹெய் பொய் சொல்லாதீங்க... பரவாயில்லை சொல்லுங்க...

ஒன்னும் இல்லை உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும், ஒரு விஷயம் சொல்லனும் , அதான் எதை முதல்ல செய்யலாம்னு யோசிட்டு இருக்கேன்...

அஹ் அஹ் புதிர் எல்லாம் பலமா இருக்கே...

பெரிய புதிரெல்லாம் இல்லை, சரி நீங்க சொல்லுங்க... எதை முதல்லை சொல்லட்டும்...

சிறிது நேரம் யோசித்து... ( அட என்ன இது இப்படி நம்மையே சாட்சிக்கு கூப்பிட்டாரே... சரி முதல்ல கேக்கவந்ததை கேப்போம்... அவரோட மனசுல என்ன இருக்குனு தெரிந்து கொள்வோம்... ) , சரி என்ன கேட்கனுமோ அதை கேளுங்க ...

நான் உங்களை மொழின்னு கூப்பிடலாமா?

அட என்ன கேள்வி இது, உங்களுக்கு தான் தெரியுமே என்னை மொழின்னு கூப்பிட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு...
என்னது இது சின்ன புள்ளைத்தனமா என்று சிரித்தாள்.....

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் பதற்றமாக தான் இருந்தாள்.அகிலனும் பதற்றத்துடன் இருந்ததால் அவளின் பதற்றத்தைக் கவனிக்கவில்லை... மொழி அகிலனிடமிருந்து எதிர்பார்த்த கேள்வி வேறு, அகிலன் கேட்டதோ வேறு... யாரையாவது காதலிக்கிறாயா என்ற கேள்வியை எதிர்பார்த்து இருந்தாள். "இல்லை" என்ற பொய்யை எப்படி உண்மையைப் போல் சொல்வதென்று தன்னை தயார் படுத்திக் கொண்டது வீணாகப் போய்விட்டது...அகிலனை வந்த நாளே மொழிக்கு பிடித்திருந்தது... இருந்தும் தன் நட்பு வட்டத்திற்குள் எப்போதும் இருந்ததால் , அகிலனை பற்றி யோசிக்க அவளுக்கு இயலவில்லை... நண்பர்கள் தன் அருகில் இல்லாத சமயம் , தனிமையாய் உணரும் சமயம், எப்படி தான் அகிலனுக்கு தெறிகறதோ தெரியாது, மொழியின் இடத்திற்கு வந்து விட தவறியதில்லை... வந்து பேசிவிட்டும் செல்லும் போதெல்லாம், அகிலனின் மீதான தன் விருப்பம் கூடிக்கொண்டே இருக்கிறதென்பதை புரிந்தும் புரியாதவள் போல் நடந்து கொண்டாள்...

அப்பா அம்மாவின் செல்லமகளாய் இருக்கும் மொழிக்கு காதல் என்ற வார்த்தை கூட பிடிக்காது... நம்மை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த தாய் தந்தைக்கு தான் தன் திருமணம் பற்றி முடிவெடுக்க அதிகாரம் உண்டென்பது இவளின் விவாதம்... இவளைப் பற்றி தெரிந்ததனால் யாரும் இவளிடம் காதல் பற்றி பேச மாட்டார்கள்... கதிர் தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஒரு பெண்ணை விரும்புவதாக தெரிந்தபின், ஒரு வாரம் போராடிப் பார்த்தாள்... கதிர் செய்வது தவறென்று..கதிர் விட்டுக் கொடுக்காதலால், பெற்றோறை மீறி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாக்கிற்கு பிறகே கதிரிடம் பேச ஆரம்பித்தாள்... தனக்குள் நடக்கும் இந்த மாறுதலையும் நிராகரித்து வந்தாள்...தனக்குள் காதல் வராதென்றும், அப்படி வந்தாலும் தன் மனதை கட்டுபடுத்திக் கொள்வேன் என்று தீர்மானமாக இருந்தாள்...

இதனாலேயே அவளிடம் யாரும் காதல் என்ற வார்த்தையை கூட சொல்லமாட்டார்கள்... ஆனால் அகிலன் மட்டும், அவளிடம் அது எப்படி நீங்க காதல்ல விழாமா போறீங்கன்ணு நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டான்.. இதனால் தான் அகிலன் எங்கு தன் மனதின் போக்கை புரிந்து கொண்டானோ என பயந்தாள்.. காதல் பற்றி அகிலனிடம் வாக்கு வாதம் செய்வாள் .. அது எப்படிங்க , தப்பு இல்லையா நம்ம அப்பா அம்மாவை ஏமாற்றுவது .. எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை படிக்க வெச்சு, இந்த நிலைமைக்கு கொண்டு வந்த, நம்மளே நம்ம வாழ்க்கைய தீர்மானிக்கறது தப்பு என்று.. அகிலன் விடுவதாய் தெரியவில்லை.. நீங்க ஏன் காதல்னா அப்பா அம்மாவை ஏமாற்றனும்னு நினைக்கறீங்க... இப்ப ஒரு கடைக்கு போறீங்க துணி எடுக்கலாம்னு , அங்க உங்களுக்கு ஒரு புடவை பிடிக்குது, ஆனால் உங்க அம்மாவுக்கு வேற ஒண்ணு பிடிக்குது, அப்ப உங்களுக்கு பிடித்ததை எடுப்பீங்களா இல்லை உங்க அம்மாவுக்கு பிடித்ததை எடுப்பீங்களா... ஹ்ம்ம் எனக்கு பிடித்ததை தான் எடுப்பேன்.. அப்படி வாங்க வழிக்கு.. என்ன சொல்லி அம்மா கிட்ட புரியவைப்பீங்க... அந்த கலர் பிடிச்சிருக்கு, அப்படி என்கிட்ட எந்த புடவையும் இல்லை, அப்படி இப்படினு சொல்லி புரிய வைப்பேன்... ஹ்ம்ம்ம் சரி தான் , ஒரு நாள் கட்டிக்கப்போற புடவையை உங்க இஷ்டத்துக்கு எடுப்பீங்களாம், உங்க வாழ்க்கையை அவங்ககிட்ட விட்டுடுவீங்களாம்.. இது வேடிக்கையா இருக்கு கனிமொழி.. இங்க பாருங்க காதல்னா தப்புன்னு யாரு சொன்னா... நீங்க உங்க மனசுக்கு பிடித்தவரை, உங்க அப்பா அம்மாக்கு காட்டுங்க... அடம் பிடிக்காம இவர் கூட இருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லி, ஏன் உங்களுக்கு அவரைப் பிடித்ததுனு நாலு காரணத்தை சொல்லுங்க..எந்த அம்மா அப்பா தான் யோசிக்க மாட்டங்க... அவங்களுக்கு முக்கியம் நம்ம சந்தோஷம் தான், இவர் தான் என் சந்தோஷம்னு நீங்க நியாயமா பேசுங்க.. அப்புறம் காதல் தப்புனு யாரும்னு சொல்லமாட்டாங்க என்று சொல்லி வாயை மூடும் முன், மொழி அதெல்லாம் எனக்கு தெரியாது.. இது என் கருத்து யாரும் என்னை மாற்ற முயற்சிக்க வேண்டாம்னு சொல்லி அந்தவிடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்..

அனேகமாக இந்த மாதிரியான வாக்குவாதங்களை செய்த பின் , வெகுநாள் கழித்து இன்று தான் அவர்கள் தனியாக சந்திக்கின்றனர்.. ஆமா அகிலன் ஏதோ சொல்லனும்னு சொன்னார் இல்லை..வாங்க சொல்லிட்டாரா இல்லையான்னு பார்ப்போம்....

சரி நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே அதை சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் என்று ஒரு பெருமூச்சை விட்டு விட்டு... மொழி, உங்களை எனக்கு பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் விருப்பம்னா உங்க அப்பா அம்மா கிட்ட என் அப்பா அம்மாவை பொண்ணு கேக்க சொல்றேன்...

என்னது, அகிலன், எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும் இல்லை.. அப்புறம் ஏன்...

ஏன் எல்லாம் எனக்கு தெரியாதுங்க...சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா உங்களை வற்புறுத்த மாட்டேன் என்று சொல்லி அவளின் பதிலுக்காக கூட காத்திறாமல் சென்றுவிட்டான்...

மொழி.... என்று செல்வி வந்து அழைக்க.. கவனிக்கமால் சிந்தனையில் இருந்தாள்

ஹெய் மொழி....

இரன்டாம் முறை தன் பெயர் ஒலிக்க , மெல்ல சுதாரித்துக் கொண்டு, சொல்லு சொல்லு செல்வி...

என்ன அப்படி ஒரு யோசனை...தூங்கிட்டியா, நான் கூப்பிடறது கூட காதுல விழாம....

அதெல்லாம் ஒன்னும் இல்லை செல்வி...

சரி என்னமோ நீ சொல்ற, நான் நம்பிதானே ஆகனும்...வா சாப்பிட போகலாம்...

ஹ்ம்ம் போகலாம் வா....

ஒரு வழியாக சாப்பிட அமர்ந்தனர்..

சத்யா .. பாரு மொழி டூர்க்கு வரமாட்டேன்னு சொல்றா.... என்று கவிதா ஆரம்பிக்க

ஏன் மொழி வரமாட்டே, அதெல்லாம் எனக்கு தெரியாது... ஏதோ அதிசயமா நாம எல்லாரும் ஒன்னா போகலாம்னா . நீ தான் கன்னியாகுமரிக்கு போலாம்னு சொன்னே, உனக்காக தானே அங்க போக எல்லாரையும் ஒத்துக்க வைச்சோம்.. இப்ப நீ இப்படி பண்றே... கொஞ்சம் கூட நல்லா இல்லை.... டிக்கெட் எல்லாம் பூக் பண்ணியாச்சு, இப்ப போய் இப்படி சொன்னா எப்படி....

மொழி, நீ வரலைன்னா நான் வரலே என்று செல்வி சொல்ல...

அப்ப நானும் வரலை, என்று கவிதாவும் கதிரும் வழிமொழிந்தனர்...

ஹெய் ஏன் இப்படி பண்றீங்க.. நீங்கலாம் போய்ட்டு வாங்க...எனக்காக யாரும் நிக்க வேண்டாம்... நான் வரலைன்னா என்ன , அதான் நம்ம டீம்ல இருக்கற எல்லாரும் வராங்க இல்லை...

நீ சொல்லித்தான் இந்த டூர்க்கே ஏற்பாடு பண்ணினோம்..இப்ப நீயே வரமாட்டேன்னா என்ன அர்த்தம் மொழி... யாரும் போக வேன்டாம்... அவங்க அவங்க வேலையைப் போய் பார்க்கலாம் என்று கோவத்துடன் சத்யா இடத்தை விட்டு நகர்ந்தான்....

பாரு மொழி சத்யா சாப்பிடாம போயிட்டான்....

இரு கவி, நான் போய் அவனை சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வறேன்...நீங்க எல்லாம் சாப்பிடுங்க....

இவள் கூப்பிட கூப்பிட காதில் கேட்காதவன் போல் சென்று கொண்டே இருந்தான்...

அதே வழியாக அகிலன் எதிர்பட...

என்ன சத்யா, இவ்வளவு கோபமாக எங்க போறீங்க... மொழி உங்க பின்னாடி வறாங்க கவனிக்கலையா...

தெரியும், என்னை இப்படி கோபபட வெச்சதே அவ தான்...

ஏன் என்ன சொன்னாங்க...

டூர்க்கு வரமாட்டாளாம்... அதான் நாங்க யாரும் வரலை, நீங்க எல்லாம் போயிட்டு வாங்க அகிலன்...

ஓ........ சரி நான் மொழி கிட்ட பேசிப்பார்க்கட்டுமா..

ஹ்ம்ம்ம் உங்க இஷ்டம்...அவ தான் பிடிவாதக்காரியாச்சே... சரி நான் போறேன் எனக்கு வேலை இருக்கு...

சத்யாவிடம் பேசிவிட்டு நேராக மொழியிடம் செல்கிறான்...

மொழி.. ஒரு நிமிஷம்....

இல்லை எனக்கு வேலை இருக்கு , நான் போகனும்...

ஒரே ஒரு நிமிஷம் , நான் என்ன பேச வரேன்னாச்சும் கேளுங்க... நான் என்னை பத்தியெல்லாம் பேச வரலை.... ஒரே ஒரு நிமிஷம்...

சரி சொல்லுங்க...

நீங்க நான் டூர்க்கு வரேன்னு தானே வர மாட்டேன்னு சொல்றீங்க... நான் வேணும்னா நின்னுடரேன்... என் மனசுல பட்டதை தான் உங்க கிட்ட கேட்டேன்... உங்களுக்கு இஷ்டமில்லைன்னா சொல்லிட்டு போங்க.. அதை விட்டுட்டு ஏன் டூர்க்கு வரமாட்டேன்னு சொல்றீங்க... உங்க நண்பர்கள்லாம் பாவம் ... நான் தான் உங்களுக்கு ப்ரச்சனைன்னா சொல்லுங்க, நான் வரலை...

அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு வேற வேலை இருக்கு அதான்... நீங்க போயிட்டு வாங்க.. அவங்களை நான் பார்த்துக்கறேன்...

ஹ்ம்ம்ம் சரி நீங்க வந்தா நல்லா இருக்கும், வரனும்னு உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.. வர முயற்சி பண்ணுங்க... என்று சொல்லி மிகவும் கன்னியமாக சென்றவனையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தாள்...

இவன் வான்னு கூப்பிடறானா , இல்லை வராதேன்னு சொல்றானா... சரி பார்ப்போம் இன்னும் ரெண்டு நாள் இருக்கு இல்லை...

இரண்டு நாளும் எப்படி போச்சென்றே தெரியவில்லை... எப்படியோ அவர்களை தான் இல்லாமல் டூர் போக சமாதானம் செய்துவிட்டாள்.... இருந்தும் யாரும் மொழியிடம் முகம் கொடுத்து கூட பேச வில்லை... அழுகை வந்தாலும் அவர்கள் முன் அழக்கூடாதென அமைதியாக இருந்து விட்டாள்...

4.30 மணிக்காவது எக்மோர் ரயில் நிலையத்தில் இருக்கவேண்டுமென அனைவரும் மதியமே வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்..

மொழியின் நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல், சரி இனி ஒரு முறை மொழியிடம் பேசுவோம் என்று அவளிடத்திற்கு செல்கின்றனர்...

மொழி.... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலே... உன் டிக்கெட் அப்படியே இருக்கு.. எங்களுக்காக வாயேன்... என்று பாவமாக முகத்தை வைத்தபடி நால்வரும் கேட்டுப் பார்த்தனர்...

பதிலேதும் சொல்லாமல், "Happy Journey" என்று சிரித்தாள்...

என்னமோ போ மனசே கேட்கலை..சரி பத்திரமா இரு...

நான் இருக்கேன், நீங்க பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க...

bye....

எல்லோரும் சென்ற பின், அகிலன் தன் பங்கிற்கு வந்து

வாங்க மொழி, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்னால தான் நீங்க வரலைன்னு நினைச்சா... சரி பரவாயில்லை இருக்கட்டும்..நான் ஆரம்பிச்சு வைச்சதை நானே வந்து முடிக்கறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அவள் மேஜையின் மீது விட்டுச் செல்கிறான்..

அவன் சென்ற பின், அதை எடுத்து படிக்கையில்,

உன்முகத்தின் அழகை விட
அகம் காட்டும் முகமே
என்னை கவர்ந்தது
அழகுக்கு மேலும் அழகூட்டவே
உன்னை நேசித்தேன்
என் நேசம் உனை காயப்படுத்தியது
என்னை மன்னித்து விடு
இனி நேசித்து உனை
காயப்படுத்தமாட்டேன் !

- அகிலன்



- மொழி பேசப்படலாம்..

பேசா மொழி - 2

பேசா மொழி - 3