Tuesday 2 October 2012

அதிசய காந்தம்..

கேள்வி பதில்களென நிறைந்திருந்த
குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென
அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்..

எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய் இருக்கும்
நாய்க்குட்டியைப் போன்றே காந்த‌மும்
எனக்கு விசுவாசியாய் இருந்தது இதுநாள்வரை..

இக்கணம்
அத‌ன் பிற‌ந்த‌ அல்ல‌தென்
பொக்கிஷ‌ பெட்ட‌கத்தினுள் புகுந்த
நாளை நினைவு கூர்கின்றேன்..

ஆண்டவன் விளையாட்டிற்கு
காரணம் கேட்பதே தம் கடமையென‌
பெரிவர்கள் கூட்டம் மும்முர‌மாய் இருக்க‌
விளையாட்டே வாழ்க்கையென கோவில் மணலில்
விளையாடிக்கொண்டிருந்தோம் நாங்க‌ள்,
அங்கே ஒரு
சிறு க‌ல்லாய்த் தென்பட்டு
மேனியில் மேலும் சில‌ தாதுக்க‌ளோடு
உயிர்த்தெழுந்த இந்த அதிச‌ய‌ காந்த‌த்தை
என் வ‌ச‌மாக்கிக்கொண்டேன்
சிறுவ‌ர் ப‌ஞ்சாய‌த்திற்குப்பின்!

அன்று முத‌ல்,
கேள்விக்கேற்ற‌ ப‌திலையும்
ப‌திலுக்கேற்ற கேள்வியையும்
என‌க்காக‌ ஈர்த்து த‌ந்தது,
உட‌ல் ந‌லக்கோளாறோ இல்லை
சூழ்நிலைக்கார‌ண‌மாக‌வோ
த‌ன் ப‌ணி மறந்து
பொருந்தாத பலதை ஈர்க்கின்றன
சில நாட்களாய்!

அதன் சக்தி முற்றிலும்
முற்று பெருவதற்கு முன்
மெதுமெதுவாய் அதன் திறனை
ஈர்த்துக்கொண்டிருக்கிறேன் நான்,
மற்றுமொரு காந்தம் தனை தேடிக்கொண்டே!

நன்றி,
நாணல்

No comments: